ஃபெலிக்ஸ் ஃபெனியோ கடந்த நூற்றாண்டின் இறுதியில் புனைவு, ஓவியம், அரசியல் எனப் பல துறைகளுக்கும் பங்களிப்பைச் செய்துள்ள பன்முகக் கலை இலக்கிய ஆளுமை. போர் முகைமையில் எழுத்தராகவும் பத்திரிகை நிருபராகவும் ஓவிய விமர்சகராகவும் அவர் விளங்கினார்.
1906 ஆம் ஆண்டிலிருந்து Le Matin என்னும் இதழில் மூன்று வரிகளில் பிரான்ஸின் நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் நடைபெற்ற பரபரப்பான உணர்ச்சிமிக்கச் சம்பவங்களை எழுதத் துவங்கினார். கொலை, தற்கொலை, திருட்டு, கள்ளக்காதல், அரசியல் கலகங்கள் போன்ற பல சம்பவங்களை நுணுக்கமான மூன்று வரி விவரணைகளாகப் படைத்தார்.
மூன்று வரிகளில் எழுதப்பட்ட சம்பவங்கள் ஃபெனியாவின் பேனா முனையில் குறுங்கதைகளாகப் புனையப் பெற்றன. மேலும் ஐரோப்பியக் குறுங்கதைகளுக்கான முன்னோடி என்று சில விமர்சகர்கள் இவரைக் கணித்துள்ளனர். ஓவியத்துறையில் ‘நியோ இம்பரஷனிஸம்’ என்ற கலைச்சொல்லை உருவாக்கி நவீன ஓவியங்களுக்கான திரை ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தி உள்ளார்.
அரசியல் கலகக்காரராக ஒரு வெடிகுண்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பின் தன் கூரிய நகைச்சுவை தோய்ந்த வாதத்தால் விடுவிக்கப்பட்டார். மேலும் பல வகையான ஓவியங்களையும் சேகரித்து நவீன ஓவியத்திற்குப் புது அடையாளமாக விளங்கினார்.
மூன்று வரி நாவல்கள் என்னும் அவருடைய குறுக்கதைகள் போன்ற விவரணைகள் இயங்கும் சமூக ஊடகங்களுக்கு முன்னோடியாக அறியப்படுகின்றன. ‘ட்விட்டர்’ நுண்சித்தரிப்புகளின் முன்னோடியாகவும் நாம் அவரது புனைவுகளை அறிந்து கொள்ளலாம்.
◊◊◊
டன்கிர்க் ஐச் சேர்ந்த ஷ்யெட் தன் மனைவியை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். ஒவ்வொரு முறையும் குறி தப்பியதால் தன் மாமியாரை நோக்கிக் குறி வைக்க முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டான்.
தன் வீட்டு வாயிலில் சந்தேகத்திற்கிடமான ஒரு விசித்திரக் கருவியைக் கண்ட பிரிக்கே எனும் அச்சுக் கலைஞன் முகம் தெரியாத நபர்களின் மீது புகார் அளித்தான்.
சான் ஜெர்மைனில் பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகத்திற்குரிய இரண்டு சிப்பங்களினுள் இருந்தது மணல் மட்டும் தான்.
லோரியேனில் மே தினக் கொண்டாட்டம் பெரும் கூச்சலுடனும் குழப்பத்துடனும் நடைபெற்றது. ஆனால் ஒரு சிறு அசைவு கூட போலீஸின் இடையீட்டிற்கு இடம் கொடுக்கவில்லை.
வெர்சைலின் விளக்கு போட்டோ வைப்பவனும் லா காரேன் கொலோம் பிலுள்ள திருக்கோயில் பணியாளனும் நெருப்பு கனன்று கொண்டிருந்த இரு சாதனங்களைக் கண்டெடுத்தனர். அவற்றின் திரிகள் அணைக்கப்பட்டன.
செவ்ரே நதியில் பத்தொன்பதாயிரத்தி நூறு போட்டியாளர்கள் மீன் பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் மீன்களைப் போட்டியாளர்களைக் கடிக்கத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.
கோமின் என்பவனால் கைவிடப்பட்ட ஆஸ்னியேவைச் சேர்ந்த ஜூலியட் ட்ரூபிளி தன் கத்தரிக்கோலின் கூர் முனைகளால் அவன் கோப்பையைக் கிழித்து எறிந்து விட்டாள்.
“நாம் ஏன் லெ பலேசோ விற்குப் புலம் பெயர்ந்து விடக் கூடாது?”. அது சரிதான், ஆனால் திருவாளர். லென்கிரே குதிரை வண்டியில் அதை நோக்கிப் போகும் வழியில் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப் பட்டார்.
எஸ்டெரெல் மலைப் பிரதேசத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட ஒரு மனிதனின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. வெறி பிடித்த பறவைகள் தம் கூரிய அலகுகளினால் அவன் முகத்தை முழுமையாகச் சிதைத்து அலங்கோலப்படுத்தியிருந்தன.
லானோ எனும் வேலையாள் மார்னேயைச் சேர்ந்த பால் லெப்ருன் எனும் தன் எஜமானனுடைய துப்பாக்கியைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தன் கவனக் குறைவால் அவரைச் சுட்டுக் கொன்று விட்டான்.
அறுபது வயதைக் கடந்த டோர்லேயின் பிணம் ஆர்கைலில் ஒரு மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. அருகே ஒரு அட்டையில் “உழைக்கும் வயதைக் கடந்து விட்டேன்” என்று எழுதியிருந்தது.
ரொண்டோ தெருவில் பிளான்சே சால்மோன் அவளது காதலனான லூயி லெஸ்டைனால் இரு முறை இடையில் கத்தியால் குத்தப்பட்டாள்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியை உண்ணும் போது பதினைந்து போத்தல் அப்சிந்தேயைத் தொடர்ந்து குடிக்க முடியும் என்று சவால் விட்ட தியோபைல் பாப்பின் ஒன்பதாவது போத்தலுக்குப் பிறகு சரிந்து கீழே விழுந்தான்.
லூயி லாமாரிடம் வேலையும் இல்லை வீடும் இல்லை. ஆனால் அவனிடம் சில காசுகள் இருந்தன. சான் தெனியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ஒரு லிட்டர் கெரோசினை வாங்கி அதை அப்படியே குடித்து விட்டான்.
சசினும் சிமோனும் சான் மெசோ தெ பெக்னேயில் ஒரு பெரிய குழி வெட்டிக் கொண்டிருக்கும் போது அதனுள்ளேயே மூச்சுத் திணறி விழுந்து இறந்தனர்.
சென் நதியில் விழுந்து இறப்பதற்கு முன்பு தொக்ரைன் இவ்வாறு தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தான் ” மன்னித்து விடுங்கள் தந்தையே! எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்”.
சான் ஓவெனைச் சேர்ந்த அறுபது வயதான கேலோ இராணுவ வீரர்களிடம் போருக்கு எதிரான தனது கருத்துகளைப் பரப்பியதால் கைது செய்யப்பட்டார்.
இருபத்தி ஐந்து வயதான பெர்னா எண்பத்தி ஒன்பது வயதான திருவாளர் துப்பெர் ஐ தடியால் தாக்கினான். தனது மனைவியைக் கத்தியால் குத்தி விட்டான். காரணம்: பொறாமை.
ஐந்நூறு சுருட்டுகள் மற்றும் இருநூற்று ஐம்பது ஓயின் போத்தல்கள் : லெ வெசினே யில் பாடகி கேத்தரின் பிளாஷா வின் தனி வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்தவை.
கூபுவா வைச் சேர்ந்த வணிகன் அலெக்சி ழமா வயிற்று உபாதையின் கொடுமை தாளாமல் தன் மூளையைச் சிதற விட்டான்.
நோசி ஸ்யுஹ் எகோல் அருகில் கடும் வெப்பத் தாக்கத்தால் லூயி தெலிலோ சாலையில் கீழே விழுந்து இறந்தார். உடனே அவரது வளர்ப்பு நாயான ஃபிடோ அவரது தலையைக் கடித்துத் தின்றது.
போர்தோ விலுள்ள ஒரு விடுதியில் இருந்து லெயோன்தின் காக்னா திருவாளர் அஞ்சியானோடு வெளியேறும்போது அப்பொறியாளரின் மனைவி அவளைச் சுட்டுக் கொன்று விட்டாள்.
மெகோவிலுள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் ஏறக்குறைய முப்பது வயதுடைய ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டான். “என் பெயரை அறிந்து கொள்ள யாரும் முயற்சிக்காதீர்கள்” என்று குறிப்பு எழுதி வைத்திருந்தான்.
சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஐம்பது இளம் பாடகிகளைக் கொண்ட இசைக் குழுவின் இசையோடு நுவே யில் ஆல்பிரெட் தெ முசே வின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
டன்கிர்க் கில் இடி தாங்கிக் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்த சிலரை மின்னல் தாக்கியது. அவர்களில் ஒருவன் 135 அடி உயரத்திலிருந்து கீழே புகைக்கரி குவியலுள் விழுந்து உயிர் பிழைத்தான்.
பெயோ விலிருந்து துலோ வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியின் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு ஊடுருவிய கல் ஒரு ரயில் பயணியின் கண்ணைப் பதம் பார்த்தது. ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. அப்பிரதேசத்தில் எவருமில்லை.
Portrait of M.Félix Fénéon From nytimes

கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
Leave a Reply