Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
Thadari.com
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
June 3, 2025
ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

தொல்லியல், வரலாற்றியல், பண்பாட்டியல் ஆகிய புலங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் சொல் நீத்தார். மனிதன் தோன்றியதிலிருந்தே  நீத்தல் பற்றிய சிந்தனை இருந்து வருகிறது. இன்று வரையில் மனிதனால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் அது இருந்து வருகிறது. மனிதனின் ஆதிச் சடங்குகளும், ஆதி வழிபாடும் நீத்தாரை ஒட்டியே உருவாயின. எனவே, மனிதன் பற்றிய சிந்தனையில் நீத்தலும் நீத்தாரும் முக்கிய இடம் பிடிக்கின்றனர்.

மானுடவியல், வழக்காற்றியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளில் நீத்தார் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்த படியே இருக்கின்றன. நீத்தாரைப் புதைத்த இடத்தை ஒட்டி ஈமக்காடு, ஈழத்தாழி, ஈமக்காரியம் போன்ற சொற்களும் இந்தத் துறை ஆய்வுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது நீத்தார் என்ற சொல் இறந்தவர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப்படுவதைப் பார்க்க புரிகிறது. சாவு பல்வேறு காரணங்களால் நிகழும் நிலையில், பல்வேறு வகைகளாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் நீத்தார் என்ற பொதுச்சொல் அதற்கான சாத்தியத்தைத் தடுத்து விடுகிறது. எனவே, நீத்தார் என்பதிலிருந்து சற்று நுணுகிச் சென்று மாண்டவர் அல்லது மாண்டார் மற்றொரு வகையை இனங்காட்ட இக்கட்டுரை முற்படுகிறது.

நீத்தாரும், மாண்டாரும்:

நீத்தார், மாண்டார் ஆகிய இரண்டு சொற்களும் இறந்து போனவர்களைக் குறிக்கும் என்பதில் அய்யமில்லை. ஆனால் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. நீத்தார் என்ற சொல்லில் பிறன் செயல் இல்லை. அச்சொல் தானாக இறந்தவரைக் குறிக்கும். நீண்ட காலம் வாழ்ந்து நிறை வாழ்வு கண்டவர்களை அவ்வாறு குறிப்பிடலாம். ஆனால் தானாக இறக்காதவரை அச்சொல்லால் குறிப்பிடுவது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனெனில் அச்சாவு இயற்கையாக நடக்காமல் ஏதோவொரு விதத்தால் பிறரால் / பிறவற்றால் நடப்பதாக அமைகிறது. அதனைக் குறிக்க மாண்டார் என்ற சொல் பொருந்துகிறது. நீண்ட காலம் வாழ்ந்து மறைவோரை ஆன்மீகத் தளத்தில் பூரண நிலை அடைந்தவராகக் கூறுவர். மக்கள் வழக்கில் ‘நல்ல சாவு’என்று குறிப்பிடுவர். இது பெரும்பாலும் பெருந்துக்கமாக மாறாது. இதனை சிரமண மரபுகளில் பரிநிப்பாணம் அல்லது பரிநிர்வாணம் என்றழைப்பர். பரிநிர்வாணம் என்பதுதான் பூரண நிலை. பெரும்பாலும் துறவிகளின் மரணத்தை இந்த நிலையில் வைத்துப் புரிந்து கொள்வர்.

மாண்டவர் பூரண வாழ்வை அல்லது நிலையை எட்டாமல் இடையில் இறந்து போகிறவராக இருக்கிறார். அதாவது பூரணமற்று அந்தரத்தில் முடிந்துவிடும் வாழ்க்கையாக இருக்கிறது. பெரும்பாலும் போர், சமூக மீறல் போன்றவற்றால் கொல்லப்படுபவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அநாதரவாகப் போகும் உயிர் என்பதால் இந்த உயிர் பூரணநிலையை எட்டாமல் ஆவியாக உலவுவதாக நம்பப்படுகிறது. அந்தரத்தில் நிற்கும் ஆவி கொன்றவர்களையோ, பிறரையோ அச்சுறுத்தும்-பழி வாங்கும்-துரத்தும் என்று நம்பப்படுகிறது. பிறகு அச்சம், குற்றவுணர்வு போன்றவற்றின் காரணமாகத் தெய்வமாக்கப்பட்டு வழிபடப்படுகின்றனர்.1

இவ்வாறு நீத்தாருக்கும் மாண்டாருக்கும் வேறுபாடு உண்டென்றாலும் நீத்தார் என்ற சொல் தனக்குள்ளே மாண்டார் என்ற சொல்லையும் அடக்கியிருக்கிறது. நீத்தார், மாண்டார் என்கிற இருவருமே வழிபடப்படுகிறார்கள். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. நீத்தார் நினைவு வழிபாடாக மாறும் போது திருப்தி பெறுகிறது. நினைவு தெய்வமாகி நிறைவெய்துகிறது; உறைந்து போகிறது. அதன் நினைவுச் சமூகத்தில் திரும்பத் திரும்பப் பேசப்படுமளவுக்கு எந்தப் புதுமையையும் கொண்டிருப்பதில்லை. ஆனால், மாண்டார் நினைவு அவ்வாறல்ல. அந்நினைவுகள் துரத்துவதால் வழிபாடுகளாக மாறினாலும் மாறாவிட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. அந்தர வாழ்வில் இறந்ததால் அந்தக் கதையாடல் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.

உலகமெங்கும் மாண்டு போனவர்களின் கதைகளே இலக்கியங்களிலும் வழக்காறுகளிலும் அடிநாதமாக இருக்கின்றன. மேலும் அக்கதைகளுக்கு அழியாக் கீர்த்தியையும் பெற்றுத் தந்திருக்கின்றன. மாண்டார் என்ற வழக்குப் பெயரை நடுகற்களில் பட்டான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பட்டான் என்றால் கொல்லப்பட்டவன், கொல்லப்பட்டான் என்று பொருள். புலிக்குத்தி பட்டான், பன்றிக்குத்தி பட்டான், முயல் குத்திப் பட்டான், யானைக்குத்தி பட்டான், பாம்பு கடித்துப்பட்டான் போன்றவை அதற்கான உதாரணங்களாகும். வேலூர், ஈரோடு, மதுரை என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இச்சொற்களைக் கொண்டுள்ள நடுகற்கள் கிடைத்துள்ளன. 

இவ்வாறான மாண்டார் கதைகளில் அவர்கள் கொல்லப்படுவதற்கான காரணமாக ஏதோவொரு வகையான ‘மீறல்’ காரணமாக இருக்கிறது. மீறலில் ஈடுபடும் போது சமூகமோ, அரசோ தொடர்புடையோர் மாண்டு போவதற்கான காரணமாக இருக்கிறது. மீறலில் ஈடுபட்டு மாண்டாரின் நினைவுகள் கதைகளாகவோ – வழிபாடுகளாகவோ மாற்றப்படும்போது கதைகளில் அவர்கள் அதீத ஆற்றல் பொருந்தியவர்களாக மாற்றப்படுகின்றனர். மதுரை வீரன் கதையில் அவன் வெல்ல முடியாத வீரனாகவும், காசிராஜனின் மகனாகவும் காட்டப்படுவதை இதற்கான உதாரணமாகக் கூறலாம்.

ஆனால் இப்போக்கில் முக்கியமான மாற்றமும் இருக்கிறது. மன்னர் அல்லது மன்னர் போன்ற நிலையிலிருந்தவர்கள் மாண்டுபோன நினைவுகள் பரவலாக இருக்கின்றன. இவ்விடத்தில் இரண்டு சொற்களின் பயன்பாட்டைப் பார்க்கலாம். மேடு, கோட்டை போன்ற சொற்களே அவை. இவ்விரண்டு சொற்களும் இடத்தின் பெயர்கள். இடத்தின் பெயர் மீது நினைவு தக்க வைக்கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு சொற்களும் தனியாகவோ சேர்ந்தோ ஒரு ஊரின் பெயராகவும், ஊரிலுள்ள ஒரு நிலப்பகுதியின் பெயராகவோ இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக கோட்டை, மேடு, கோட்டை மேடு போன்ற பெயர்களை இங்கு கூறலாம்.

கோடு – கோட்டம் – கோட்டை.

கோட்டை என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு நினைவில் வருவது என்ன? உயர்ந்த – நீண்ட சுவர்கள்தான். அந்த மதில்களுக்குள் அரசனோ, அரசனோடு தொடர்புடைய அடையாளங்களோ இருக்கும் என்பது நம்முடைய புரிதல். அரண்கள் சூழ்ந்த வாழிடமாக இருப்பதால் அது அரண்மனையாகவும் ஆகிறது. மன்னர்களின் நிர்வாகமும், படைக்கருவிகளும் இங்குதான் அமைந்திருக்கும். ஒரு அரசன் போர் தொடங்குகிறான் என்றால் இங்கிருந்துதான் படை நடத்திச் செல்வான். எதிரி நாட்டுப் படைகளின் வெற்றி அல்லது தோல்வி இந்த மதில்களைத் தாண்டி அரண்மனையைக் கைப்பற்றுவதில்தான் தீர்மானிக்கப்படும். இதன்படி கோட்டை என்ற சொல் மன்னர்களோடும் போர்களோடும் தொடர்புடையதாகிறது.

கோட்டை என்ற பெயர் தனித்தும் பிற பெயரோடு சேர்ந்தும் ஊர்களின் பெயர்களாகவும், இடங்களின் பெயர்களாகவும் பரவலாகக் காணக் கிடைக்கின்றன.

(கோட்டைபட்டி, கோட்டையூர், கோட்டக்கரை, தேவகோட்டை, செங்கோட்டை, கோட்டை மேடு) இவ்வாறு கோட்டை என்ற பெயரைக் கேட்டதும் நம்முடைய மனம் இயல்பாக அவ்விடத்தில் இருந்த/இருந்திருக்க வாய்ப்பிருக்கக் கூடிய மதில்கள், போர்கள் போன்றவற்றை யோசிக்கத் தொடங்கி விடுகிறது. அதற்கான சான்றுகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவ்விடத்தில் கடந்த காலத்தில் இருந்திருக்கக்கூடிய கோட்டை ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு திருப்தியடைகிறது. இத்தகைய அர்த்தத்தை யார் உருவாக்குவது? சான்றுகள் உருவாக்குகின்றனவா? இல்லை. பெயர்தான் (அதாவது மொழி) உருவாக்குகிறது. ஒரு பெயரின் மீது ஏற்கெனவே ஒரு அர்த்தம் கற்பிக்கப்பட்டு நிலை நிறுத்தபட்டு விடுமானால் அந்த அர்த்தம் மாறாததாக – உறைந்ததாக மாறிவிடுகிறது. பிறகு அந்தப் பெயர் சொல்லப்படும் போதெல்லாம் அப்பெயரால் ‘அறியப்பட்ட அர்த்தமே’ முன்னிற்கும். குறிப்பிட்ட இடத்தின் / பொருளின் தரவுகள் சார்ந்து அர்த்தம் உருவாவதைக் காட்டிலும், பெயரின்(மொழியின்) அறியப்பட்ட அர்த்தமே அவற்றின் அர்த்தமாக அமையும். 

கோட்டை என்பதன் அடிச்சொல் கோடு. கோடு என்றால் குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம், கொம்பு, தந்தம், எயிறு போன்ற அர்த்தங்கள் தரப்படுகின்றன. இந்தச் சொல்லும் உயரமான – மேடான என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. ‘கோட்டை என்பதோடு தொடர்புடைய மற்றொரு சொல் கோட்டம். கோட்டம் என்பதற்கு நான்கு பக்கமும் மதிற்சுவர் எழுப்பப்பட்ட கோவில் அமைந்த இடம் என்று பொருள். மேலும் கோட்டம் என்பதற்கு முன்னோர் நினைவிடம்/கோவில் (முன்னோர் நினைவிடமாக அமைந்த கோவில்), தோட்டம், சுடுகாடு போன்ற அர்த்தங்கள் தரப்படுகின்றன. கோயில், சுடுகாடு, தேவலோகம், கரை போன்ற அர்த்தங்களும் தரப்படுகின்றன. மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம் சொல்லப்படுகிறது. அங்கு பேய்கள் உலவுவதாக நம்பப்பட்டது. கோட்டம் என்பதன் வழக்குச் சொல்தான் கோட்ட, கோட்டை.

இதன்படி கோட்டை என்பதற்குக் கோயில் என்ற அர்த்தம் இருப்பது புலப்படுகிறது. அதுவும் வழிபாட்டிற்குரிய புதைவிடத்தை ஒட்டி உருவான இடம் என்று பொருளாகிறது. புதைவிடம் என்பதால் அது ‘மேடாகவும்’ இருந்தது. கோட்டை இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் இன்றைக்குக் கோட்டை / கோட்டை மேடு என்கிற பெயர்கள் இருப்பதைப் பரவலாகப் பார்க்கிறோம். ஆனால் அவ்விடங்களில் நேரடியாகக் கோட்டைகள் இருப்பதைக் காட்டிலும் பழம்பெரும் கோயில்கள் இருப்பதைப் பார்த்து விடலாம். விதிவிலக்காகச் சில இடங்களில் மட்டும் மன்னர்கள் பயன்படுத்திய கோட்டை இருக்கும். அதேவேளையில் கோட்டைக்கு உள்ளேயோ கோட்டையை ஒட்டியோ கோயில் இருந்து விடுவதைப் பார்க்கலாம். ‘அரசனின் வீடு என்பதே கோயில் ஆனது’என்றொரு கருத்து இருப்பதைப் போலவே (தேவநேய பாவாணர்) அரசனின் புதைவிடமே (பள்ளிப்படை) கூட கோயில் என்று மாறியிருக்கலாம். அதாவது கோட்டை என்ற பெயருக்குக் காரணமாகியிருக்கலாம்.

அகழிக்குப் புறம்மேயுள்ள மண்மேட்டின் பெயர் கோட்டை மேடு. புதைக்கும் காரணத்தாலும், மண்மேடிட்டு போனதாலும் மேடு உருவாகிறது. அதனால் மேட்டிற்குக் கோட்டை என்ற பெயர் பொருந்துகிறது. இறந்தாரை வழிபட்டதால் அவ்விடம் கோயிலும் ஆனது. மனிதனின் தொடக்க கால அடையாளங்களாகக் கிடைப்பது புதைவிடங்களை அடையாளப்படுத்தும் கற்களே. அவற்றைப் பெருங்கற்காலச் சின்னங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அவை பல வகைப்படும். அவற்றுள் கல்வட்டங்கள் என்பதும் அடங்கும். அந்த வட்டங்களுக்கும் கோட்டை என்று பெயர். வட்டம் என்பது ஒரு அளவைக் குறிக்கும். பெளர்ணமி நிலா ஒளிரும் போது அதைச் சுற்றி ஒரு வட்டம் தெரியும். அதனை கிராமங்களில் ‘நிலாவைச் சுற்றி கோட்டை கட்டுகிறது’ என்றே கூறுவார்கள். பனையோலையை வட்டமாகச் சுழற்றிக் கட்டுவதற்குக் கோட்டை கட்டுதல் என்று பெயர். நெல்லை வட்டமாகக் கொட்டி வைப்பதற்குக் கோட்டை என்று பெயர். பெருங்கற்கால வட்டக் கற்கள் மீதுதான் பிற்காலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு புதைவிடமாக இருந்து வழிபாட்டிடமாக மாறிய இடத்திற்குக் கோட்டை மேடு என்று பெயர். இப்பெயரோடு அங்கு கோயில் கொண்டிருக்கும் தெய்வத்தின் பெயரும் சேர்ந்து விரிவடையும். கோட்டை மாரியம்மன், கோட்டை அய்யனார், கோட்டை முனியாண்டி போன்ற பெயர்களை இந்த வகையில் கூறலாம்.

மேடு:

கோட்டையைப் போலவே உற்றுநோக்க வேண்டிய பெயர்களுள் ஒன்று மேடு. தமிழகத்தில் பல ஊர்களின், இடங்களின் பெயர்கள் ‘மேடு’ என்ற சொல்லோடு முடிகின்றன. ‘மேடு’ என்றதும் நமக்குள் தோன்றுவது என்ன? மண்ணாலும் கற்களாலும் ஆன குவியல். அதாவது பள்ளம், உயரம் என்ற எதிர்மறைகளில் உயர்ந்த பகுதியே மேடு. இந்தவகையில் ‘மேடு’ என்பதை நிலப்பரப்பின் ஒரு வடிவமாக மட்டுமே புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அது பண்பாட்டு அர்த்தம் ஒன்றையும் கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியான புரிதல் இல்லாமேலேயே அச்சொல்லை நாம் இப்போது வழங்கிவருகிறோம். அதாவது ஓர் ஊரோ, கட்டடமோ, குடியிருப்புகளோ அழிந்து மண்மேடாகிப்போன இடத்தையே நாம் பெரும்பாலும் மேடு என்றழைத்திருக்கிறோம். அந்த வகையில், அச்சொல், ‘மண்குவியல்’ என்ற பொதுவான அர்த்தத்திலிருந்து நீண்டு, ‘அழிவு’ என்பதைக் குறிப்பதாகவே இருக்கிறது. மண்குவியல் எனும்போது, ‘இயற்கையான நிலப்பகுதி’ போன்று பொருள்பெறுகிறது. ‘அழிவு’ எனும்போது இயற்கையான காரணங்களாலோ மற்ற காரணங்களாலோ நடந்த சேதாரங்களைக் குறிக்கிறது. அதாவது, அழிவுக்கு முன்னர் ஏதோ ஒன்று அங்கிருந்தது என்றாகிறது. அதற்கடுத்து ஏன் அழிந்தது? எது அழிந்தது? என்கிற கேள்விகள் இயல்பாகவே உண்டாகிக் கொள்கின்றன.

அழகன்குளம், கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம், அது மனிதர்கள் வாழ்ந்து மண்மூடிய இடம் என்பதை அறிகிறோம். அண்மையில் திண்டுக்கல் அருகே ‘பாடியூர்’ என்ற ஊரில் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சொல்லிவைத்தாற்போல இம்மூன்று ஊர்களிலும் இத்தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்த பகுதிகள் ‘கோட்டைமேடு’ என்ற பெயரால் அமைந்துள்ளன. இதன்படி அழிந்த இடத்தைக் குறிக்கும் பொதுச்சொல்போல ‘மேடு’ ஆகியிருப்பதைப் பார்க்கிறோம். புதுச்சேரியில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ‘அரிக்கமேடு’ என்ற ஊர்ப்பெயரிலும் மேடுதான் இருக்கிறது. இந்த எல்லா மேடுகளுக்குள்ளும் புதையுண்ட ஊர் இருந்ததை அறிகிறோம். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்கு உள்ளூரில் உச்சிக்காடு அல்லது மேட்டுக்காடு என்றுதான் குறிப்பிடுகிறார்கள். எனவே ‘மேடு’ என்ற சொல் அழிவைக் குறிக்கும் பண்பாட்டுக் குறியீடு ஆகிறது. பெயரில் மேட்டை கொண்டிராவிட்டாலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது புதைமேடு இருந்த இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  சிந்து சமவெளி அகழாய்வு இடமான ஹரப்பா என்பதற்கு ‘புதையுண்ட நகரம்’ என்றே பொருள். இதைவிட மொகஞ்சதாரோ என்பதற்குச் சிந்தி மொழியில் ‘இடுகாட்டு மேடு’ என்பதே பொருளாகும்.

இங்கு இரண்டு புரிதல்களை நாம் பெற்றாக வேண்டியிருக்கிறது. இடத்தின் பெயர் நேரடி வரலாறாக இல்லை. நினைவாக/கதையாக/தொன்மமாக இருக்கிறது. அவற்றை நேர்ப்பொருளில் மட்டுமல்லாமல் குறியீட்டுப் பொருளிலும் வாசிக்க வேண்டியுள்ளது. இது ஒன்று. இரண்டாவதாகப் பண்பாட்டு வாசிப்பைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே மொழியில் (எழுத்தில்) நிலை பெற்று விட்ட அர்த்தத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது ஒரு சொல்லுக்கான பொருள் மொழியில் மட்டும் இருப்பதில்லை. ஏனெனில் ஒரு சொல்லுக்கான அர்த்தத்தை இலக்கியப் பிரதிகளிலும், அகராதிகளிலும் தேடியே வரித்துக் கொள்கிறோம். ஒரு சொல் இலக்கியப் பிரதிகளிலும் அகராதிகளிலும் ஏறும்போது மாறாததாகிறது; உறைந்து போய்விடுகிறது என்பதுதான் அதன் பிரச்சினை. சூழலுக்கேற்ப அர்த்தம் மாறுபடுகிறது என்பதையே மேற்கண்ட ஆண்டு சொற்களின் பயன்பாட்டிலிருந்து தெரிந்து கொண்டோம்.

இப்பின்னணியிலிருந்து மாண்ட மன்னர்களின் கதைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

II

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் என்ற ஊரிலிருக்கும் ‘நந்த மேடு’ என்ற இடம் பற்றி அங்கிருப்பவர்கள் ஒரு கதையை வழங்குகிறார்கள். அதாவது இந்த ஊரில் நந்தன் என்ற பறையர் குல மன்னன் ஆண்டான். சோழனுக்கு அடங்கிய சிற்றரசனான அவன் வரி வசூலிக்க வந்தவர்களிடம் தோல் காசினை நிஜகாசு என்று கொடுத்ததால், வசூலித்துச் சென்றவர்கள் தந்த சாபத்தால் அவனுடைய அரண்மனை மீது மண்மாரி பொழிந்தது. அரண்மனையோடு அவனும் மண்ணில் புதைந்ததால் இந்த இடம் மேடானது. இது கதை. ஆனால் அந்த இடம் இப்போது மேடாக இருப்பதும், அந்தக் காலத்தில் குடியிருப்புகள் இருந்தன என்பதைக் காட்டும் ஓடுகள் செங்கற்கள் போன்றவை இருப்பதும் நிஜம். அது மனிதர்கள் வாழ்ந்து அழிந்த இடமாக இருக்கலாம். ஆனால் அங்கு அரண்மனையும், நந்த அரசனும் இருந்தானா? என்று தேடுவது முக்கியமல்ல. நாம் அக்கதையை அப்படியே ஏற்பதில் சிக்கல் இருப்பதைப் போலவே, ஏற்காமலும் இருக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் குடியிருப்பு இருந்து அழிந்து போனதற்கான தடயங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த நிஜமான தடயங்களை ஒட்டி  வழங்கப்படுவதால் அக்கதைக்குப் பொருத்தம் ஏற்படுகிறது. இவ்விடத்தில் மேடு என்ற சொல் அரண்மனை இடிந்து போனதால் உண்டானதாக இருக்கிறது. அதாவது இயற்கையாக உருவாகாமல் சாபத்தால் இடிந்து உருவான அரண்மனைமேடு என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதனை நிருபிக்கக்கூடிய வேறு சான்றுகள் இருக்கின்றனவா? என்று தேடிய போது வியப்படையும் வகையில் தமிழகத்தில் பரவலாக மேடு என்ற சொல் தனியாகவும் மற்ற சொல்லோடு சேர்ந்தும் வழங்கி வருவதை அறிய முடிந்தது. அதாவது தமிழகத்தின் பல ஊர்களில் ஊருக்கு வெளியே – ஒதுக்குப் புறமாக ‘நத்த மேடு’என்ற நிலப்பகுதி இருக்கிறது. புன்செய் நிலத்தில் சற்றே மேட்டுப்பாங்கான பகுதியாக அது இருக்கும். அங்கே ஓடுகள், செங்கற்கள், சில இடங்களில் சிற்சில கருவிகள் – சிலைகள் கூடக் கிடைத்திருக்கின்றன. அந்த இடம் பற்றி உள்ளூர் மக்களிடம் ஒரு நினைவு இருக்கிறது. கிட்டத்தட்ட பட்டீஸ்வரம் நந்த மேட்டில் நந்தமன்னனுக்குக் கூறப்பட்ட கதையையே இந்த ஊர்களில் கூறினர். ஒரு ராஜா இருந்த ஊர், அரண்மனை இடிந்த இடம், போர் நடந்த இடம், போரில் மாண்டு போனவர்களின் புதைவிடம் போன்ற அர்த்தங்களே சிற்சில வேறுபாடுகளுடன் பகிரப்படுகின்றன. பெரும்பாலும் மன்னரின் பெயர் சொல்லப்படுவதில்லை. பெயர் சொல்லப்படாவிட்டாலும் நந்த மன்னனுக்குச் சொல்லப்படும் கதையே இங்கெல்லாம் பொருந்தி வருகிறது. இவ்விடத்தில்தான், ‘மேடு’ என்ற சொல் மக்கள் வழக்காற்றிலும் அழிவு என்பதோடு இணைவதைப் பார்க்கிறோம். நத்தம் என்ற சொல், பாலிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல்.  ‘அழிந்த’ அல்லது ‘அழிக்கப்பட்ட’ என்பது பாலி மொழியில் இதற்கான அர்த்தம். இதன்படி, நத்தமேடு என்பது அழிந்துபோனதாலோ, அழிக்கப்பட்டதாலோ உருவான மண்மேடு என்றாகிறது.

நந்தராஜா கதை:

நந்த மன்னன் பற்றிய இரண்டு வடிவங்களை இங்கு பார்க்கலாம். ஒன்று தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட இடங்கை வலங்கையர் வரலாறு (1995) நூலில் இடம்பெற்றுள்ள கதை. தஞ்சை வேதநாயக சாஸ்திரி தஞ்சை வட்டார மக்களிடமிருந்து காலின் மெக்கன்சி உத்தரவின் பேரில் தொகுத்தளித்த வழக்காறுகளின் தொகுப்பு இப்பதிப்பு.கி.பி.1798 ஆம் ஆண்டை ஒட்டி இந்த வழக்காறுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்காறுகள் நந்தன் ஓர் மன்னன் என்ற கதை விவரிக்கின்றன.

அக்கதையாவன:ராவணனின் வாரிசுகளில் ஒருவரான தியாகச் சாம்பானுடைய மகளுக்கும் சோழ ராஜாவுக்கும் பிறந்தவன் நந்தன். தாழ்ந்த குலத்தவனான தியாகச் சாம்பானின் மகளை சோழராஜா திருமணம் செய்திருக்கும் விதத்தில் அவர்களுடையது சாதி கடந்த காதல் திருமணமாகிறது. சோழ ராஜாவுக்கு வயதான போது அமைச்சர்களின் ஆலோசனையையும் மீறி நந்தனுக்கு மன்னனென முடிச்சூட்டினான். மன்னராகி விட்ட நந்தன், சாதி கெட்டதால் வரும் ‘கெட்ட பெயரை’ நீக்க ஒவ்வொரு சாதியிலும் ஒரு பெண்ணை மணமுடிக்க முடிவு செய்தான். முதலில் வெள்ளாளரிலிருந்து தொடங்க முடிவு செய்கிறான். அவ்வாறு பெண் கொடுப்பது தங்கள் சாதிக்கு இழுக்கு என்று எண்ணும் வெள்ளாளர்கள், நந்தராஜாவின் விருப்பத்தை ஏற்கவும் முடியாமல் – மறுக்கவும் முடியாமல் அவனிடம் ஒரு யோசனை சொன்னார்கள். உங்கள் சாதியார் அனைவரையும் அழைத்துக் கொண்டு நாங்கள் சொல்லுமிடத்திற்கு வந்தால் திருமணத்தைப் பேசி முடித்து விடலாம் என்கின்றனர். அதாவது அவர்கள் ஒரு சூது செய்திருந்தனர். வெள்ளாளர்கள் கம்மாளர்களிடம் சென்று பலத்த மரங்களும் கற்களும் போட்டு பொறிப்பத்தல் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். நந்தன் வந்து தங்கள் உறவினர்களோடு அப்பந்தலில் அமர்ந்திருக்கும் போது கம்மாளனிடம் சொல்லி பொறிப்பந்தலைத் தட்டிவிட்டுக் கவிழ்க்கின்றனர். அதில் நந்தனும் அவன் உறவினர்களும் சிக்கி மாண்டு போயினர். இதுவே சாஸ்திரி மக்களின் நினைவுகளிலிருந்து தொகுத்த கதையாகும்.

நந்த மன்னன் பற்றிய இதே கதையைக் குறிப்பிடத்தக்க மாற்றங்களோடு அயோத்திதாசர் எழுதினார். அவருடைய கதையில் நந்தன் பௌத்த மரபைச் சேர்ந்த அரசன். இக்கதையில் நந்தனோடு முரண் கொள்ளுவோர் வெள்ளாளர்கள் அல்ல. மாறாக பிராமணர்கள். மேலும் இதில் நந்தனின் பிறப்புக் கதையென்று ஏதுமில்லை. இந்திர தேசத்தில் புன நாட்டிற்குக் கிழக்கே வாதவூர் என்னும் தேசத்தை அரசாண்டு வந்தான் நந்தன். பௌத்த நெறிப்படி நிலவிய அவன் நாட்டிற்குள் புதுக்குடியினர் புகுந்து பௌத்தர்களின் நெறிகளைக் கண்டு பொறாமையுற்றனர். பின்னர் படிப்படியாக பௌத்த ஞானிகளைப் போலச் செய்யும் வேடதாரி பிராமணர்கள் ஆயினர். இது பற்றி நந்த மன்னன் முன் விசாரணைக்கு வந்த போது தங்களைக் காத்துக்கொள்ள விரும்பிய வேஷ பிராமணர்கள்”நாங்களும் இங்கிருந்த குடிகள்தாம்: நாங்கள் வழிபடும் ஆலயங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. தாங்கள் வந்தால் அவற்றை நேரில் காண முடியும்”என்று பொய்யாகக் கூறி அவனைத் தனியாகக் காட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதற்குள் நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரைக்காத வழியிலுள்ள தில்லை மரங்களடர்ந்த காட்டில் மண்மேட்டைத் தோண்டி அதன் மத்தியில் கல்லால் ஆன தூண்களை அமைத்துப் பழைய கட்டடம் போலப் பொய்யாக அமைத்தனர். அதன் நடுவில் காலை வைத்தால் உள்ளே விழுந்து விட முடியும். வேஷ பிராமணர்களை நம்பி வந்த நந்தன் அது போல விழுந்து இறந்தான். பிறகு சுவாமிக்கு நந்தன் மீது பிரியம் வந்து விழுங்கி விட்டது என்று ஊருக்குள் கதையைப் பரப்பி மெல்ல மெல்ல ஊராரை ஏற்க வைத்தனர். இதுவே அயோத்திதாசர் எழுதிய நந்தன் கதையின் சுருக்கமாகும். சாஸ்திரியார் கதையில் நந்தனின் பிறப்பும், திருமண காரணமும் அவன் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது. அயோத்திதாசரின் கதையில் இவ்விரண்டுமே இல்லை. அறம் X அறமின்மை என்கிற மெய்யியல் மோதலில் அவன் கொல்லப்பட்டதாகக் கதை காட்டப்படுகிறது. ஆனால் இரண்டு கதையிலும் அவன் கொல்லப்படுவது ஒரே மாதிரி நடக்கிறது.

இவ்விரண்டும் நந்த ராஜாவின் கதைகள் மட்டுமல்ல, பிற மன்னர்களின் கதைகளாகவும் மக்களின் நினைவுகளில் இருக்கின்றன. அந்த வகையில் இரண்டு கதைகளைக் காண்போம்.

நந்தி ராஜாவின் கதை.

நந்திக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம் நந்திவர்மன் என்னும் மன்னன் மீது பாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. நந்திக் கலம்பகம் பாடப்பட்டதற்கான காரணமாக நந்திராசன் மீது ஒரு கதை வழங்கப்படுகிறது. ஒரு மன்னனுக்கு மனைவி மூலம் ஏழு பிள்ளைகளும் வைப்பாட்டி மூலம் ஒரு பிள்ளையும் பிறந்தன. அந்த ஒற்றை ஆண்பிள்ளையின் பெயர்தான் நந்தி. வைப்பாட்டிக்கு அளித்த வாக்குறுதியினால் நந்தியை அரசனாக்கினான் மன்னன். நந்தியின் கொடுமைக்காளான ஏழு பேரில் ஆறு பேர் திருடப் போன போது மன்னனால் கொல்லப்பட்டனர். ஏழாமவன் சுதாரித்துக் கொண்டு ஓடிப் போனான். ஓடிப்போன ஏழாமவன் நந்தியைச் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்று கருதி சாஸ்திரங்களைப் படித்துக் காவியம் பாடுகிற வரத்தைப் பெற்று நந்தி ராஜாவை ‘அறம்பாடி’க் கொல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். புகழ்ந்து பாடுவதைப் போலிருந்து பாட்டிலே சாவதற்கான வரிகள் இருக்கும் படி அது அமைக்கப்படும். இந்த வகையில் ஏழாமவன் நந்திக் கலம்பகம் பாடல்களைப் பாட மன்னன் கவனத்திற்கும் போகும்படி நாடெங்கும் ஓலை அனுப்பினான். முதலில் அப்பாடல்களைப் பாடக் கூடாது என்று தடுத்த மன்னன், தாசி ஒருத்தி உயிருக்கும் அஞ்சாமல் பாடியதைக் கேட்டு அப்பாடல்கள் முழுவதையும் கேட்க விரும்பினான். அது அறம் பாடும் பாட்டு என்பதால் கேட்கும் மன்னன் இறந்து போவான் என்று எச்சரித்தும் கேட்டு முடிவு செய்தான். அதற்காக ஏழாமவனை மன்னித்து அழைத்து வரவும் செய்தான். ஏழாமவன் பெரிய பந்தல் போடவேண்டும், சுடுகாடு வரைப் பந்தல் போட்டு -தோரணம்-வாழை நாட்டி, சுடுகாட்டிலே கட்டைகளை அடுக்கிப் படுத்துக் கொண்டு பாட்டு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். அவன் 99 பாடல்களைப் பாடி நூறாம் பாட்டு பாடும் போது கட்டையில் எரிந்து இறந்தான். இதுவும் வேத நாயக சாஸ்திரியின் தொகுப்பிலுள்ள வழக்காற்றுக் கதையேயாகும். இதையே நந்திக் கலம்பகம் பாடியதற்கான காரணக் கதையாக இணைத்திருக்கிறார்கள். நந்த ராஜா என்னும் பெயருக்கும் நந்தி ராஜா என்னும் பெயருக்கும் இடையேயான ஒற்றுமையை இங்கு கவனிக்கலாம். நந்தனின் இறப்புக்கும் நந்தி ராஜாவின் இறப்புக்கும் கூட ஒற்றுமை இருக்கிறது. இந்தக் கதையையும் மக்களின் நினைவிலிருந்து எடுத்தே இலக்கியப் பிரதியோடு தொடர்புப்படுத்தியிருக்கிறார்கள். ‘‘நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்” என்கிறது சோமேசர் முதுமொழி வெண்பா.

சாத்தன் சாம்பான் கதை:

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய “ஆணவக் கொலைச்சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்”நூலில் தான் தொகுத்த வழக்காறு ஒன்றைக் காட்டுகிறார். தூத்துக்குடி சாத்தான் குளத்தையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சாத்தன் சாம்பான் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். திருமணமாகாத சாத்தன் தன் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களைப் பார்வையிடக் குதிரையில் செல்வது வழக்கம். எட்டு வெள்ளாளர் குடும்பங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ராமு பிள்ளை. அவன் சாத்தனிடம் கணக்கராகப் பணிபுரிந்தான். அவன் மகள் பாப்பம்மாளும் சாத்தனும் காதலித்தனர். உரிய நாளில் பெண் கேட்கவும் திட்டமிட்டிருந்தான் சாத்தன். பெண்ணைக் கொடுக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் இருந்த வெள்ளாளர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். மலையாள மாந்திரீகர்கள் ஆலோசனைபடி யாரும் அறியாதவாறு தெருவிலே குழிவெட்டினர். அதன் மீது பிரப்பம்பாயை விரித்து மண்ணைத் தூவி மறைத்து வைத்திருந்தனர். வழக்கம் போல் குதிரையில் வந்த சாத்தன் குழியில் விழுந்தான். திட்டமிட்டவாறு பெரிய கற்களை எறிந்து அவனை எழவிடாமல் செய்து குதிரையுடன் புதைத்து விட்டனர். விசயத்தை கேள்விப்பட்ட பாப்பம்மாள் சாபமிட்டவாறு அழுதாள். உறவினர்கள் அவளையும் கொன்று தோட்டத்தில் புதைத்தனர். பிறகு புதர்கள் மறைவில் அவளுக்குப் பீடம் ஒன்று கட்டப்பட்டது. இதற்குக் குத்துக்கல் என்று பெயர். தெருவும் குத்துக்கல் தெரு என்றழைக்கப்படுகிறது. இங்கு மேடும் கல்லும் இணையானதாகிறது. அழிவு நடந்த இடம் மேடு என்றால் புதைவிடத்தில் கல் நடப்பட்டது எனலாம். இத்தெய்வங்களுக்கு வழங்கப்படும் கதை உண்மையைத் தழுவி வழக்காறு ஆகியிருக்கிறது. சாத்தன் கொல்லப்பட்ட முறை நந்தன் கதையைத் தழுவியிருக்கிறது. உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கும் போது ஏற்கெனவே புகழ்பெற்றிருக்கும் கதை, பல வடிவத்திற்குள்ளும் இணைத்துக் கொள்ளும் போக்கு இதனைக் கூறலாம். இவ்வாறு வழக்காறு, இலக்கியம், நிகழ் சம்பவம் ஆகியன ஒன்றையொன்று பாதித்திருக்கிறது. தூத்துக்குடி, தஞ்சை, சிதம்பரம், செய்யாறு என்ற பரப்பில் இக்கதை பரவலாகத் தொடர்பு கொண்டிருக்கிறது.

இவற்றை அப்படியே நிறுத்தி விட்டுப் புராணக் கூத்து கதையாடல்கள் பக்கம் செல்லலாம்.

III

மாண்டார் நினைவுகள் மக்களால் எல்லாத் தளங்களிலும் விரித்துக்கொள்ளப்பட்டது அல்லது தாங்கள் அறிந்த மாண்டார் நினைவுகளை எல்லாத் தளங்களுக்குள்ளும் கொணர்ந்தனர். தமிழ் இலக்கிய மரபில் கோவலனின் இறப்பே சிலப்பதிகாரக் கதையின் அடிநாதமானது. நீலகேசி, குண்டலகேசி ஆகிய காப்பியங்களில் கணவனைக் கொல்ல பேயாய் அலைந்த பெண்களின் கதைகளே. கண்ணகி, நீலி ஆகியோர் வழிபாட்டுக்கு உரியவர்களாகியிருக்கின்றனர். பிற்காலக் கதைப்பாடல்களே இறந்தவர்கள் பற்றிய மக்களின் நினைவுகள் தாம். கதைப்பாடல்களில் வரும் காத்தவராயன், மதுரை வீரன், முத்துப் பட்டன் ஆகியோர் மன்னர்கள் இல்லையாயினும் சாதாரண மனிதர்களிலிருந்து ஏதோவொரு வகையில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றனர். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு புராணங்களும் மன்னர் நிலையிலுள்ள குழுகளுக்கிடையேயான போர்கள் பற்றியதாகவே இருக்கின்றன. கும்பகர்ணன்,ராவணன், பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் போன்றவற்றை ஒட்டிய அழிவுதான் இக்கதைகளின் பிரதானப் பகுதிகள்.

வட தமிழகத்தில் பரவலாகத் தெருக்கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. வீட்டின் சுக துக்கங்கள், பண்டிகை நாட்கள், கோயில் விழாக்கள் ஆகியவற்றை ஒட்டி கூத்துகள் நடைபெறும். இவற்றுள் நாடகத்திற்கான கதை பாரதம், ராமாயணம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கதைகள் உள்ளூர் எதார்த்தத்திற்கேற்பத் திரும்ப எழுதப்பட்டு நடிக்கப்படும். இவ்வாறு திரும்ப எழுதப்பட்டு நடிக்கப்படும் கூத்துகள் பெரும்பாலானவற்றின் உள்ளடக்கம் மாண்டவர் தொடர்புடையதாகவே இருக்கின்றன. கூத்தில் பாத்திரங்கள் மாண்டு போகும் போதும், பிற பாத்திரங்கள் பாடி அழும் போதும் பார்வையாளர்கள் கூத்தோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்து விடுவர். அந்தப் பாத்திரம் நல்லவனா?கெட்டவனா? என்பது அவர்களுக்கு முக்கியமில்லை. மாண்டு போவது மட்டும் கூத்தின் மையமாக அமையும் போது மக்கள் அதனோடு ஒன்றிணைந்து விடுவர். அவர்கள் வாய் விட்டு அழுவதும் உண்டு. அந்த வகையில் மூன்று கூத்துகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கர்ண மோட்சம் :

மகாபாரதத்தில் கர்ணன் போரிட்டு மடியும் பகுதி மட்டும் கர்ண மோட்சம் என்ற கூத்தாக நடிக்கப்படும். திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் கர்ணன். எனவே அவனைத்  தாழ்ந்த சாதியினனாகப் பார்க்கும் போக்கு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பாரதப் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரியும் அவன் மீது அம்புகள் தைத்தாலும் உயிர் போகாவண்ணம் அவன் செய்த தருமம் காத்து நிற்கும். அப்போது முதிய அந்தணன் வேடத்தில் வரும் கிருஷ்ணன் அவன் செய்த தருமங்களின் பலனைக் கொடையாகக் கேட்பதாகவும், இல்லையென்று சொல்லியறியாத கர்ணன் அதனைக் கொடுத்த பின்னால் சாவதாகவும் அக்கதை சொல்லும். இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பண்புக்கூறுகளுடன் இக்கொடை மாற்றிக் காட்டப்படும். பின்னர், தானம் கேட்டவன் கிருஷ்ணன் என்பதைத் தெரிந்து கொள்கிறான் கர்ணன். அப்போது கிருஷ்ணனிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறான்: முதலாவதாக, அவன் இறந்தவுடன், தாய் குந்திக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவள் போர்க்களத்திற்கு விரைந்து வந்து கர்ணன் தன் மகன் என்றும் அவன் தாழ்ந்த சாதி இல்லை என்றும் அறிவிப்பாள் என்பது இதன் பொருள். இரண்டாவதாக, கிருஷ்ணரின் பாதங்களை அடைவதற்காக அதாவது, பிறப்புச் சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மற்றவர்களுக்கு உணவளிக்கும் (அன்னதானம்) நற்செயல்களை நிறைவேற்ற விரும்புகிறான். தாழ்ந்த சாதிக்காரரின் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்பதால், இந்தப் பிறவியில் அவனால் உணவு தானம் மட்டும் வழங்கப்படாதிருந்தது. கிருஷ்ணன் கர்ணனுக்கு இந்த உதவிகளை அளித்து, அடுத்த ஜென்மத்தில் தனது சொந்த மகனை சிவபெருமானுக்கு உணவாக அளித்துச் சிறுத்தொண்டர் நாயனாராக மீண்டும் பிறப்பார் என்றும், அதன் பிறகு அவர் மோட்சம் அடைவார் என்றும் கூறுகிறார். பிறகே கர்ணன் இறக்கிறான். கர்ண மோட்சம் கூத்து விடிய விடிய நடைபெறும். வானம் வெளுக்கத் தொடங்கும் போது கர்ணன் உயிர் பிரியும். மகன் இறந்ததைக் கேட்டுக் கதறியழுதவாறு ஓடோடி வருவாள் குந்தி. மக்கள் கதையோடு ஒன்றி அவன் சாவுக்காகக் கதறி அழுவதுமுண்டு. இந்தக் கூத்து ஊரில் யாரேனும் இறந்த பின்னால் கருமாதி நாளில் மட்டுமே நடத்தப்படும். இந்தக் கூத்தை நடத்தினால் கர்ணன் மோட்சம் பெற்றதைப் போல இறந்தவர் மோட்சம் பெறுவார் என்பது மக்களின் நம்பிக்கை.

அபிமன்யு சண்டை:

இதேபோல மற்றுமொரு கூத்து அபிமன்யு சண்டை. வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுன் மகன் அபிமன்யு. பாரதப்போரின் இறுதியில் சக்கர வியூகம் என்ற போர்த் தந்திரம் கடைபிடிக்கப்படுகிறது. அதை உடைக்க வேண்டியிருக்கிறது.

அபிமன்யு  சக்கர வியூகத்திற்குள் நுழையும் ரகசியத்தை அறிந்திருந்தான்.

அதேவேளையில் அதிலிருந்து வெளியேறத் தெரியாது. பாண்டவர்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்று ஆதரவளிப்பார்கள் என்று சொன்னதன் பேரில், அபிமன்யு சுழலும் சக்கர அமைப்பில் நுழைந்தான். 13 ஆம் நாள் கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கர வியூகத்திலிருந்து வெளிவரத் தெரியாமல் துரோணர் கிருபர் கர்ணன் அஸ்வத்தாமன் பிரஹத்பாலன் கிருதவர்மன் ஆகிய அறுவரால் தாக்கப்பட்டு நிலைகுலைந்து பின் துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம் செய்து அவனைக் கொன்று தானும் மரணமடைகிறான். சக்கரவியூகத்தில் அருச்சுனன் தவிர்த்த மற்ற பாண்டவர்களை உட்புக இயலாதபடி, ஜெயத்திரதன் தடுத்துவிடுகிறான். இதனால் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஜெயத்திரதனை மறு நாள் போரில் கொல்வேனென்று அர்ச்சுனன் சபதம் ஏற்கிறான். இந்தக் கூத்தும் கிராமப்புறங்களில் பரவலாக நடத்தப்படும். அபிமன்யு அழிவிற்காக மக்கள் மனமிறங்குவர்.

களப்பலியும் படுகளமும்: 

மற்றொரு கூத்து அரவாண் களப்பலி. பாரதப் போரில் சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞனைக் களப்பலியாக்க விரும்பி அரவாணிடம் ஒப்புதல் பெறுகிறார்கள் கௌரவர்கள். இதனை தெரிந்துகொள்ளும் கிருஷ்ணன் அரவாணின் தியாகத்தைப் பாண்டவர்களுக்கானதாக மாற்றிவிடத் திட்டமிடுகிறான். அரவாண் தியாகம் செய்வதற்காக இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறான். ஒன்று தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது. இரண்டு 18 நாள் போர் முடியும் வரை உயிர் போய் விடாமலிருந்து போரைக் காணும் சக்தி இருக்க வேண்டும் என்கிறான். அதன்படி “இன்றிரவு உன்னைத்தேடி அழகியபெண் வருவாள். அங்கு தெரியும் (அரக்கு) மாளிகையில் அவளுக்காகக் காத்திரு”என்று அரவாணுக்குச் சொல்லப்படுகிறது. நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக காந்தர்வத் திருமணம் நடந்து மாளிகைக்குள் செல்கிறான் அவன். கிருஷ்ணன் ஒரு பெண்ணை அனுப்பினான் என்றும், அவனே பெண்ணாக மாறினான் என்றும் இரு வடிவங்கள் இருக்கின்றன. திரெளபதி கோயில் கூத்து மரபில் கண்கள் மூலம் போர் முழுவதையும் பார்ப்பதற்கு கிருஷ்ணன் வரம் வழங்குகிறான். இறுதியில் தன்னத்தானே பலிகொடுத்துக் கொள்கிறான் அரவான். தன் தலையை வெட்டிக் கொண்ட அரவாண், ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் வெட்டுண்ட தலையுடனும் காட்சி அளிக்கும் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இப்போதும் உள்ளூர்க் கோயில்களில் பார்க்கலாம். உள்ளூர் திரெளபதி கோயில்களிலும் துரியோதனன் களப்பலி கூத்தை ஒட்டி அரவாணின் இதே நிலையிலான சிலைகளை எழுப்பிக் கொள்வதையும் பார்க்கலாம். இவ்வாறு மகாபாரதத்தில் சிறிய பாத்திரமாக வரும் அரவாண் எளிய மக்களிடம் விரிவாக இடம் பெறுகிறான்.

இதே போன்ற மற்றொரு கூத்து துரியோதனன் படுகளம். துரியோதனன் இறந்ததைக் கேட்டு மாரில் அடித்துப் பாடுவாள் அவன் தாய் காந்தாரி. அவளது ஒப்பாரியைக் கேட்பதற்கென்றே பெண்கள் சுற்றி நிற்பர். ராமாயணத்தில் கும்பகர்ணன், ராவணன் போரில் மடியும் காட்சிகளும் உருக்கமாகக் கூறப்படும்.

பெருவாரியான மக்களால் உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கப்படும் இக்கூத்துகளில் பெரும்பான்மையான கதைகள் சாவு தொடர்பானவை. போர்க்களத்தில் மாண்டுபோகும் விதம், அதற்கு முன்பும் பின்பும் நடக்கும் உணர்ச்சிப் பரிமாற்றங்கள், ஒப்பாரி, ஓலம் ஆகியவையே இக்கதைகளின் மையம். மனிதர்களின் நனவிலியாக மாளுதலும், ஓலங்களும் படிந்திருக்கின்றன. அவர்களின் எல்லா நடவடிக்கைகளிலும் அந்நினைவு ஏதேனுமொரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இக்கதைகளில் நினைவு கூரப்படும் யாரும் நீத்தவர்கள் இல்லை.மாறாக மாண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகைகளின், திருவிழாக்களின் தோற்றக் கதைகளிலும் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளே ஊடாடுகின்றன. மாபலி வதம் செய்யப்பட்ட கதையின்மேல்தான் ஓணம் நடத்தப்படுகிறது. பிற்கால புராணிக முருகன் கதையில் பதும – அசுரனுக்கு எதிராகச் செய்த சூரசம்ஹாரம் திருவிழாவாக நினைவுகூரப்படுகிறது. கார்த்திகை தீபம் பொங்கல் மாதந்திர பெளர்ணமி ஆகியவை நீத்தாருக்கான நினைவுகள் என்றால், தீபாவளி மாதந்திர அமாவாசைகள் ஆகியவை மாண்டாருக்கான நினைவுகளாக இருக்கின்றன. நரக – அசுரன் கொல்லப்பட்டதற்காக நினைவுகூரப்படுவதே தீபாவளி. இதேபோல கோயில்கள் மற்றும் தெய்வங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் அளவில் வழங்கப்படும் கதைகளில் அழிபாடு பற்றிய குறிப்புகள் இருப்பதைக் கவனிக்க முடியும். குறிப்பாக மாரியம்மன் குறித்து வழங்கப்படும் ‘சுயம்பு’ கதைகளில் பூமிக்குள் இருந்த அம்மனின் சிலை மீது கடப்பாரையோ, ஏர்முனையோ பட்டதால் ரத்தம் வழிந்தது என்று சொல்லப்படும் போக்கைக் காணலாம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்ற ஊர்ப்பெயரே மாரியம்மன் முகத்தில் பட்ட கடப்பாரையால் வழிந்த இரத்தம் என்றுதான் சொல்லிக்கொள்ளப்படுகிறது. மாரியம்மனையும் ரேணுகாம்பாளையும் இணைக்கும் கதையில் தலை வேறு உடல் வேறு என்று வெட்டப்பட்ட உடல்களின் இணைப்பே கூறப்படுகிறது. மாரியம்மனின் தலையை மட்டுமே சிலையாக வைத்து வணங்குகிற கோயில்கள் இருக்கின்றன. கோயில்கள், தெய்வங்கள் மட்டுமல்லாது உள்ளூர் அளவிலான திருவிழாக்களின் தோற்றக் கதைகளைக் கேட்டுப் பார்த்தால் அவற்றில் ஏதேனும் அழிவு அல்லது மாண்டு போனமை குறித்த அம்சம் காரணமாக இருப்பதை அறிய முடியும்.

IV 

நந்தன் போன்ற வழக்காற்றுக் கதைகள் தொடங்கிப் புராணக் கதைகள் வரையில் அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இவர்களில் யாரும் இயல்பாக இறக்கவில்லை. அதாவது நீத்தவர்களாக இல்லை. மாறாக மாண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லாக் கதைகளிலும் கொல்லப்படுதலில் பொதுத்தன்மை இருக்கிறது. அதாவது சாபம், தந்திரம், பழிக்குப் பழி ஆகிய காரணங்களால் கொல்லப்படுகின்றனர். கொல்லப்படுவதற்கான காரணங்களிலும் பொதுத்தன்மைகள் இருக்கின்றன. அதாவது அவர்களின் இறப்பிற்கும் பிறப்பிற்கும் ஒரு தொடர்பு காட்டப்பட்டிருக்கிறது. அவர்களின் பிறப்பு முறையாக அமையாமல் ஒரு ‘மீறலில்’ நடந்திருக்கிறது. இந்தப் பிறப்புக்கும் ஆளுவதற்கும் தொடர்பு இருக்கிறது என்று காட்டப்படுகிறது. அதனாலேயே கொல்லப்படுவதற்கான நியாயத்தினை இக்கதைகள் கட்டமைத்திருக்கின்றன. நந்தன் தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் சோழ ராஜாவுக்கும் பிறந்தவன். நந்திவர்மன் வைப்பாட்டியின் மகனுக்குப் பிறந்தவன் என்று சொல்லப்படுகிறான். அரவாண் அர்ஜுனனுக்கும் பழங்குடி மரபினளான நாகக் கன்னிகை உலூபிக்கும் பிறந்தவன் ஆகிறான். கர்ணன் திருமணமாகாத தாய்க்குப் பிறந்து அந்தப் பழியை வாழ்க்கை முழுவதும் சுமந்து வருகிறான்.

இந்தக் கதைகள் யாவும் உருவாக்கப்பட்டவை, பரப்பப்பட்டவை. வழக்காறுகளுக்கும் எழுத்துப் பிரதிகளுக்குமான ஊடாட்டத்தில் வளர்ந்தவை. மேலோரால் உண்டாக்கப்பட்டு ‘கீழோரிடமும்’, கீழோரின் வடிவத்தில் கீழோரிடமும் – அதுவே பிறகு மேலோரிடமும் புழங்குபவை. உண்டாக்கிய எஜமானிடமிருந்து நழுவிச் செல்வதுதான் மொழியின், கதையின் தன்மை. எனவே இந்தக் கதைகளை நேரடிப் பொருளில் மட்டுமல்லாது குறியீட்டுப் பொருளிலும் கருதிப் பார்த்து வாசிக்க வேண்டியுள்ளது. அதற்கான சாத்தியங்களை இக்கதைகள் தருகின்றன.

பிறந்து வாழ்ந்து முடிந்தவர்களின் நீத்தல் பெருந்துயரத்திற்குரியதில்லை. அது பரிபூரணமாகக் கருதப்படுகிறது. தானாக உயிர் போகும் வரை அந்த உடல் காத்திருக்கிறது. பிறப்பற்ற நிலை என்று அது கருதப்படுகிறது. அதனாலேயே சிரமண மரபில் நீத்தல் என்பது கழிவெண்பிறப்பு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இக்கதைகளில் யாருடைய உயிரும் இறந்துபோகும் வரை காத்திருக்கவில்லை. வலிந்து இடையிலேயே நீக்கப்படுகிறது. அதாவது நீத்தலில் பிறப்பு அற்ற நிலை எட்டப்படுகிறது. பிறப்பே சாவுக்குக் காரணமாகிறது. பிறப்புதான் அவர்களின் பிரச்சினைக்குக் காரணமாகிறது. இந்த வகையிலும் எல்லா மரணங்களும் ஒன்றில்லை என்பதும் நீத்தாரும் மாண்டாரும் வேறு வேறு என்பதும் புலப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட இக்கதைகளில் இப்பாத்திரங்கள் கொல்லப்பட்ட விதம் நம் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது யாரும் இம்மன்னர்களிடம் நேரடியாக மோதி ஜெயிப்பதாகக் கூறப்படவில்லை. ஒரு தந்திரம் அல்லது சூழ்ச்சி செய்யப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். இவற்றிலுள்ள பொதுத்தன்மைகளைப் பார்க்கலாம். மண்மாரி பெய்தது, மண் கோட்டை இடிந்தது, மண்மேடு உருவானது, பொறிப் பந்தல் அல்லது பொய்ப் பந்தல் , பொறி வைத்தல், சக்கர வியூகம், அரக்கு மாளிகை, அறம்பாடுதல், சத்தியம் வாங்குதல் என்பதான வழிமுறைகளே இக்கதைகளில் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன. இந்த வழிமுறைகளில் நெருக்கமான ஒற்றுமைகள் உள்ளன. கிட்டத்தட்ட இவை யாவும் ஒரேவிதமான வழிமுறைகளே. இந்த வழிமுறை எந்தக் கதையிலிருந்து எந்தக் கதைக்குச் சென்றது என்கிற ஆய்வு ஒரு பக்கம் இருந்தாலும், கொல்லும் வழிமுறை பற்றியான நினைவு பல இடங்களிலும் ஒரே மாதிரி பரவியிருந்திருக்கின்றன. மணற்கோளால் இடங்கள் அழிவது பற்றியான பரவலான நினைவுகள் இருக்கின்றன. மணற்கோளால் சோழர்களின் நகரமான உறையூர் அழிந்தது என்கிற இலக்கியப் பதிவு கூட இங்குண்டு. குறிப்பாக நதியின் இயற்கையான திசைவழியை மாற்றி விடுவதால் செயற்கையாக மணல்மேடு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றன. இன்றைய கீழடி கூட முந்தைய வைகையின் திசைவழியை மாற்றியதால் மூடிப்போன ஊர் என்று கருதப்படுகிறது. இப்போதும் கீழடிக்கு அருகிலிருக்கும் ஊரின் பெயர் மணலூர். அங்கும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல இடங்களில் மணல் மேடு என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன. இன்றைக்கும் “மண்வாரி தூற்றிச் சபிக்கும்” வழக்கம் வெகுமக்களிடம் புழங்குகின்றன. மணற்கோள், மணல் புயல் ஆகியவற்றால் ஊர் அழிந்து போனதன் தொடர்ச்சியாக இந்த வழக்கம் உருவாகியிருக்கலாம்.

இந்தக் கதைகளை வாசிக்கும் போது இரு வேறு மரபுகள் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படும் உறவுகளும் முரண்களும் தென்படுகின்றன. இந்தச் சந்திப்பால் இருவேறுபட்ட குழுகளுக்கு இடையே ஏற்பட்ட கலப்பைப் பார்க்க முடிகிறது. கலப்புச் சார்ந்த பதற்றம், எதிர்ப்பு, மறுப்பு ஆகியவற்றையும் இக்கதைகளினூடாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவே இக்கதைகளாக மாறுவதற்கான காரணமாயிருக்கலாம். இரு வேறுபட்ட மரபுகளுக்கிடையிலான சந்திப்பு ரத்தக் கலப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இரு வேறுபட்ட மரபுகளுக்கு இடையே நடந்த விவாதங்களாகவும் கூட இருக்கலாம். மேடை, பந்தல், கோட்டை போன்றவை விவாதம் நடந்த இடங்களுக்கான குறியீடுகளாகவும் இருக்கலாம். மொத்தத்தில் இந்தக் கதைகளில் இரு வேறு மரபுகள், ஒரு மரபை மற்றொரு மரபு உள்வாங்குதல் அல்லது அழித்தல் போன்றவையே அடிநாதமாக இருக்கின்றன. இந்த மரபுகளுக்கிடையே வென்றது யார்? தோற்றது யார்? என்ற ‘உள்மெய்’ஒரு புறமிருந்தாலும், அது ஒரு கதையாக ஆக்கப்படுகிறது. கதையில் இருப்பது போலவே நடந்ததாக நம்பப்படுகிறது. அந்தக் கதையில் உள்ளது போல் நடந்திருக்க வேண்டியமில்லை. ஆனால் அக்கதைதான் அப்போராட்டத்தைக் காட்டும் ஒரே சான்றாக இருக்கிறது. எனவே நம்முடைய விவாதம் கதை காட்டும் வடிவத்தை ஒட்டியே அமைகிறது. இங்கு உண்மை என்பது முக்கியமில்லை. எல்லாமே கதைகள்தாம். இங்கு போராட்டம் போராக இல்லாமல் கதைகளை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. கதைகளின் பரவல் போர் ஏற்படுத்திய விளைவுகளைக் காட்டிலும் ஆழமாக இருக்கிறது.

இந்தியாவில் / தமிழகத்தில் பரவலாக மேடுகள் இருக்கின்றன. அவை மாண்ட நினைவுகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன. அது ஒரு கதைதான்  என்று நாம் நினைத்தால், பழங்கால மனிதர்கள் வாழ்ந்தற்கான தடயங்களும் அங்கு கிடைக்கின்றன. தொல்லியல் என்னும் ‘அறிவியல்’ இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மாண்டவர்களின் நினைவுகள் துரத்துவதைக் கதைகளாக மாற்றி அவற்றிடமிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்கின்றனர். மக்களின் குற்றவுணர்வுக்கு இக்கதைகள் வடிகால் ஆகும் போது அழுது, வழிபட்டு நிம்மதியடைகிறார்கள்.

மாண்டார் நினைவுகளுக்கு மக்களிடமிருக்கும் செல்வாக்கை ஒட்டி சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளும், மோதல்களும் அந்நினைவுகளுக்கேற்பக் கதையாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படிப் பார்த்தால் இந்தக் கதைகளின் அடிப்படையாக இருப்பது மாண்டமைதான். அது குறித்த சமூகத்தின் தத்தளிப்பின் மீது கதைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதனால்தான் வெகுமக்களிடையே புழங்கும் இந்த எல்லாக் கதைகளும் மன்னர்கள் தொடர்புடையது போலவே இருக்கின்றன. இவை ஆண்ட மன்னர்கள் மாண்டு போனதைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. ஆண்ட, போரிட்ட மன்னர்களுக்காகத்தான் இத்தகைய வருத்தங்களையும் நினைவுகளையும் கொண்டுள்ளனர்? இல்லை அவற்றைத் தாண்டி அக்கதைகளுக்குள் வேறெதோ இருக்கிறது. பாரதத்தில் மன்னர் மரபுகளுக்கிடையே நடந்த சகோதரச் சண்டையை மக்கள் தங்கள் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி பார்த்தனர் என்ற விளக்கத்தை நாம் அறிந்திருக்கிறோம். இங்கு நாம் அவற்றைத் தாண்டியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இங்கு மன்னர்களின் கதை மூலம் இரண்டு நிலை காட்டப்படுகிறது. ஒன்று ஆண்ட நிலை, மற்றொன்று மாண்ட நிலை. கதைகளில் சொல்லப்பட்ட மன்னர்கள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இவ்விரண்டு நிலைகளையும் குறியீடுகளாகக் கருதி வாசிக்கும் போது வேறு அர்த்தங்களுக்கான சாத்தியங்கள் கூடக் கிடைக்கலாம். இக்கதைகளில் ஆண்ட நிலை, மாண்ட நிலை மட்டும் சொல்லப்படவில்லை. இரண்டு நிலைக்கும் இடையில் கலப்பு, பிறப்பைத் தாழ்வாகக் காட்டுவது, கொல்வதற்காகத் துரத்துதல் அல்லது காத்திருத்தல், சூழ்ச்சி செய்தல், கொல்லுதல் என்னும் நிகழ்வுகளே தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஆண்ட நிலை, மாண்ட நிலை என்பவை ஒரு குழு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தாழ்ந்ததைக் காட்டுகிறது. அவற்றில் சாதி, தகுதி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. சமூகத்தில் நடந்த ஓயாத முரண்களுக்கிடையில் நடந்த மாற்றங்களையே இவ்விரு நிலைபாடுகளுமே காட்டுகின்றன. இந்தத் தலைகீழாக்கங்களை அப்படியே சொல்வது கதைகளின் நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் நடந்து விட்ட தலைகீழாக்கங்களைத் தக்க வைப்பதற்காகவே பல்வேறு கந்தல் கதைகளை இணைத்து இக்கதைகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை பின்னல்கள் போர்முறையை விட வலிமையுள்ளதாக மாறியிருக்கின்றன. அக்கதைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டியது இரண்டைத்தான். அந்த அவர்கள் தந்திருக்கும் அர்த்தத்திலேயே வாசிப்பதிலிருந்து வெளியேறிக் குறியீடுகளைச் சேகரித்து ‘உள்மெய்’களை வாசிக்க வேண்டும். இரண்டு மாற்றுக் கதைகளை உருவாக்க வேண்டும்.

அடிக்குறிப்பு.

1)பௌர்ணமி, அமாவாசை போன்ற சொற்களை வைத்தே இந்த வேறுபாட்டை விளக்கிவிட முடியும். முழு நிலவிலிருந்து தேய்பிறை தொடங்கி மொத்தமாக நிலவு மறையும் நாள் அமாவாசை. நிலவு மறைந்த நாளிலிருந்து மெல்ல மெல்ல வளர்பிறை ஆரம்பித்து முழுநிலவு தோன்றும் நாள் பெளர்ணமி. வெகுமக்கள் தளத்தில் இந்த இரண்டு நாட்களுமே இறப்பைக் குறிப்பதாகக் கருதப்பட்டிருக்கிறது. நிலவை மனித உடலோடு ஒப்பிட்டுக் கொண்டதன் தொடர்ச்சியே இந்நம்பிக்கை. நிலவு மறைந்த அமாவாசை போல் உடல் மறைந்து போகிறது. (சு)வாசம் அமர்ந்த நாளே அமரவாசி / அமாவாசி / அமாவாசை என்று குறிப்பிடுகிறார் அயோத்திதாசர். இப்போதும் மக்கள் அமாவாசை நாளில் வீட்டில் இறந்தோரை நினைத்து வழிபாடோ, விரதமோ மேற்கொள்கின்றனர். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ( மகாளிய அமாவாசை), தை அமாவாசை, மாசி அமாவாசை (மாசிகளரி) போன்ற நாட்களில் வீட்டில் இறந்தாரையோ குல தெய்வங்களையோ வழிபடுகின்றனர். அறிஞர்கள் பலரின் கருத்துப்படி இன்றைய குலதெய்வங்களை இறந்து போன முன்னோர்கள் என்று கொள்ளுவோமானால் அமாவாசை நாளின் வழிபாடு இறந்தோர் வழிபாடு என்பது உறுதிப்படுகிறது. ஐப்பசி அமாவாசையில் நரக-அசுரன் இறந்ததாகக் கருதப்பட்டு தீப- ஆவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்போதும் நீண்ட நாட்களாக நோய் நொடியில் தவிக்கும் வயது முதிர்ந்தோர் இருக்கும் வீடுகளில் அமாவாசை வந்தால் இறந்து விடுவரோ என்று அஞ்சும் நிலை இருப்பதைப் பார்க்கலாம்.

இறப்பைத் தொடர்புப்படுத்தி அமாவாசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் அமாவாசையோடு பெளர்ணமியும் இறப்பைக் குறிக்கும் நாளாகத்தான் இருக்கிறது. ஆனால் அது அவ்வளவாக அறியப்படுவதில்லை. அமாவாசை நாளில் நிலவு மறைந்து போவது போலவே உடலும் / சுவாசமும் மறைகிறது என்று சொன்னால் அதிலொரு பொருத்தம் இருக்கிறது. ஆனால் முழு நிலவு மலரும் நாளை உடல் மறைந்து போகும் நாளோடு எப்படி  ஒப்பிடமுடியும்? என்று தோன்றலாம். இவ்விடத்தில்தான் நீத்தார் என்ற சொல் மேலெழுகிறது. அதாவது எல்லாச் சாவையும் போலில்லாமல், நிறைவாழ்வு எட்டித் தானாக மறைந்தோரைக் குறிக்க பெளர்ணமி என்ற சொல்லே பொருந்துகிறது. பூரண வாழ்வு வாழ்ந்து மறைவது மறைதல் (அமாவாசை) அல்ல. அது மற்றுமொரு பிறப்பு அல்லது மற்றொன்றிற்கு நிலவொளி போல வழிகாட்டும் என்பது அதன் பொருள். புத்தரின் பிறப்பு அமாவாசை அல்ல. மாறாக பெளர்ணமியில் அமைகிறது. ஏனெனில் அவர் மறையவில்லை. அவரின் நெறி அல்லது ஞானம் மற்றவர்களுக்கு ஒளியாக வழிகாட்டும் என்று பெளத்தர்கள் கருதுகின்றனர். இது பெரும்பாலும் மனிதர்களையல்லாமல் துறவிகளைக் குறிப்பதாக இருந்திருக்கலாம். அதனால்தான் இப்போதும் துறவிகள் தங்கியிருந்த குகைகள் காணப்படும் மலைகளின் பௌர்ணமி நாட்களில் மலைவலமும் வழிபாடும் நடக்கின்றன. அவர்கள் வழிகாட்டிச் சென்றவர்கள் என்ற பொருளில் அம்மலைகளில் பெளர்ணமி வெளிச்சத்தோடு தீபத்தையும் ஏற்றுகிறார்கள். கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளில் மலைகளில் தீபமேற்றுவது இறந்தாரின் நினைவாகத்தான். தை மாதத்தின் பெளர்ணமி தைப்பூசம் என்றும், சித்திரையின் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி என்றும், வைகாசியின் பெளர்ணமி வைகாசி விசாகம் என்றும் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையில் போல இறந்தாரை வழிபடாமல், இந்த பெளர்ணமிகளில் தெய்வங்களையே வணங்குகின்றனர். அவர்கள் மக்களுக்கு வழிகாட்டி இறந்த துறவிகளின் குறியீடுகளாக இருக்கலாம்.

ஆனால் அமாவாசை இறப்பு அப்படியல்ல. அது இறந்த இல்லறத்தோரைக் குறிக்கிறது. அவர்கள் துறவிகள் போன்றோர் அல்லர் என்று கருதப்பட்டிருக்கலாம். எனவே, இல்லறத்தோரை மட்டுமல்லாமல் நிறை வாழ்வை எட்டாமல் மாண்டு போய் ஆவியாக உலவுவோரை வணங்கக் கூடியதாகவும் அமாவாசை இருந்திருக்கிறது. அமாவாசை மரணம் ஆவியோடு தொடர்புடையது என்பதால்தான் அமாவாசை நாட்களில் மயானச் சடங்குகள், மயானச் சடங்குகள், சுடுகாட்டுப் பூசைகள், பில்லி சூனியம் வைத்தல் – அகற்றுதல் போன்றவை நடக்கின்றன.


 

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    June 3, 2025
  • ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    June 3, 2025
  • மகரந்தத் துகளியல்

    மகரந்தத் துகளியல்

    June 3, 2025
  • மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ

    மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ

    June 3, 2025
  • இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு

    இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு

    June 3, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அரசியல் (1)
  • அறிவியல் (1)
  • ஆய்வு (1)
  • இலக்கியம் (4)
  • உரையாடல் (1)
  • கட்டுரை (7)
  • கதை (1)
  • கவிதை (5)
  • குறுங்கதை (1)
  • சிறுகதை (2)
  • சூழலியல் (2)
  • நாட்குறிப்பு (1)
  • நாவலின் ஒரு பகுதி (1)
  • நுண்கதை (1)
  • மொழிபெயர்ப்பு (1)

Archives

  • June 2025 (20)

Tags

Unknown Sea சிறார் கதைகள் சுந்தர காளி நீதிமணி பிரிய தர்ஷினி புளிமூட்டு உப்பா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    June 3, 2025
  • ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    June 3, 2025
  • மகரந்தத் துகளியல்

    மகரந்தத் துகளியல்

    June 3, 2025

Categories

  • அரசியல் (1)
  • அறிவியல் (1)
  • ஆய்வு (1)
  • இலக்கியம் (4)
  • உரையாடல் (1)
  • கட்டுரை (7)
  • கதை (1)
  • கவிதை (5)
  • குறுங்கதை (1)
  • சிறுகதை (2)
  • சூழலியல் (2)
  • நாட்குறிப்பு (1)
  • நாவலின் ஒரு பகுதி (1)
  • நுண்கதை (1)
  • மொழிபெயர்ப்பு (1)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top