Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
Thadari.com
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மெய்ப்பொருள்

ரமேஷ் பிரேதன்
ரமேஷ் பிரேதன்
June 3, 2025
மெய்ப்பொருள்

பெண்:
அடைபட்டுவிட்டேன். எங்கு? எப்படி என்பதை அறியேன். இரவு, பகல், நாள், திங்கள், ஆண்டு என்பன போன்ற கால அளவுகள் எனக்குத் தெரியாது. இங்கு நான் அடைபட்டு ஒரு நூற்றாண்டு இருக்கலாம். வெளியேற முடியவில்லை. வழி தெரியவில்லை. இந்தக் கட்டடம் ஒரு கோவிலா? அரண்மனையா? சிறைச்சாலையா? என்னவென்று தெரியவில்லை. கருத்தரித்ததும் அம்மாவின் கருவறையிலேயே தங்கிவிட்டேனா? அங்கேயே வளர்ந்து ஆளாகி நிற்கிறேனா? அவளும் என்னைப் போல ஒரு பெண்தானே? ஏன் என்னைப் பிதுக்கி வெளியேற்றவில்லை?

அம்மாவின் கருவிலேயே வளர்ந்து ஆளாகி இந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாமல் எது என்னை முடக்கி வைத்திருக்கிறது? ஓயாத எனது பேச்சு கேள்விகளாலானது. கேள்விகளின் சுமைகூடி என்னை அழுத்துகின்றன. வெளியேறும் வழி தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது; இங்கு நான் மட்டும் அடைபட்டில்லை. என்னைப் போல் பலர் இருக்கின்றனர். வெட்டவெளியில் யார்யாரோ வந்துபோன காலடித் தடங்கள் மண்தரையில் பதிந்திருக்கின்றன. அவற்றில் விலங்குகளின் காலடித் தடங்களும் இருக்கின்றன.

சிறைக்குள் அல்லது கருவறைக்குள் இருக்கும் காடு. அதன் எட்டிய விளிம்பில் இருண்ட மலைத்தொடர். அங்கு வேட்டுவர்களின் நடமாட்டம். அந்த இனக்குடியில் என் அம்மாவும் இருக்கலாம். அம்மா என்ற ஒருத்தி இருந்தால் அப்பா என்ற ஒருவர் இருக்கத்தானே செய்வார்? அப்பாவுக்கும் அம்மாவுக்குமான வேறுபாடு ஈனுவதால் விளைவது. நான் இன்னும் ஈனப்படாதவள். அம்மாவின் கருவறைக்குள்ளேயே வளர்ந்து அலைந்து திரிந்து அந்த இடத்தைப் பரந்த வெளியாய் ஆக்கியவள். அங்கு ஓர் ஆற்றைக் கண்டடைந்தவள். ஆற்றுப் போக்கில் நடந்து ஒரு கடலைப் பார்த்தவள்.

மழை பொழியும்போது தலைக்குமேலே வெளி இருப்பதையும் அங்கே முகில் கூட்டம் திரண்டு கருப்பதையும் தெரிந்து கொண்டேன். பரிதியும் நிலவும் தோன்றும் பொழுதுகளை இரவு, பகல் எனப் பிரித்தறிய கற்றுக்கொண்டேன். இதுவரை யாருடனும் பேசியதில்லை. அதனால் மொழியின் பயன்பாடு யாதெனத் தெரியாது. நான் சிந்திக்கிறேன்; அது மொழியாலானது. எனது மெய்யோடு ஒட்டிய மொழிமட்டுமே மெய்ப்பொருளானது. நானேவொரு மெய்ப்பொருள் என்பதை அறியவந்தபோது தூரத்து அருவி விழும் வட்டப் பாறையில் நின்று ஒருவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னைப் போல் இல்லை என்பதால் அவனை ஆண் என அறுதியிட்டேன். அதே நொடி நான் அடைந்திருப்பது அம்மாவின் கருவறை அன்று, இதுவொரு நிலப்பகுதி என்ற முடிவுக்கு வந்தேன். கருவறையில் எனக்கு மட்டும்தான் இடமிருக்கிறது என்ற அறிவு இயல்பிலேயே வாய்க்கப் பெற்றவள் என்பதால் அவனை இந்தப் பொதுவெளியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கவில்லை. அவனால் எனக்கு எந்தவித இடையூறும் நேராதநிலையில் அவனை நான் தாக்கிக் கொல்லத் துணியமாட்டேன். இப்போதுதான் எனது மொழிக்கிடங்கில் கொலை என்ற ஒரு சொல் பிறந்து சேகரமாகிறது. பிற என்ற ஒரு மாந்த இருப்பைக் கண்டதும் அதன் உடன் விளைவாகக் கொலை என்ற ஒரு சொல் தோன்றியதை நினைத்து வியக்கிறேன்.

ஆண்:

நானும் அவளைக் கண்டேன். இந்த நிலப்பகுதிக்கு வெளியிலிருந்து வந்தவளாக இருக்கலாம். தேவையற்ற ஓர் இருப்பாக இருந்தால் அவளை இங்கிருந்து வெளியேற்றி விடுவேன். அயலார் இந்நிலத்துக்கு ஒவ்வாதவர். இந்தச் சூழலை அவர்கள் மாசுபடுத்திவிடுவர். முதலில் மொழியையும் பிறகு இனத்தையும் பாழ்ப்படுத்தி அவற்றின் இயல்பைத் திரித்து விடுவர். அவளை எட்டி நின்று நோட்டமிடவேண்டும். அவளுடன் முதலில் தாவரங்களும் அடுத்து விலங்குகளும் பழகவேண்டும். இச்சூழலை உருவாக்கிய ஐம்மூலகங்களும் அவளை உள்வாங்கிச் செரிக்கவேண்டும்.

ஆதிக்கமனம் உயிர்கள் அனைத்திற்கும் இயல்பானவை. குமுகமனம் கட்டமைக்கும் அறத்தின் வழியொழுகும் தன்மை அவளிடமிருக்கிறதா என்பதை அறியவேண்டும். அவள் யாராக இருப்பாள்? அவளுடம்பிலிருந்து வெளிப்படும் சூலக நிணவாடை இம்மண்டலம் முழுவதும் குமைகிறது. ஈன்று புறந்தள்ளப்பட்ட உடம்பின் ஆதிநெடி. விலங்குகள் மோப்பமுற்று அவளைப் பின்தொடர்ந்து கடித்துக் குதறி இரையாக்கிக் கொள்ளலாம். அன்றி, அவள் அவற்றைத் தனக்கு உணவாக்கிக் கொள்ளலாம். எது எப்படியிருந்தாலும் அவளிருப்பு எனக்கு இடையூறாகவே இருக்கும்.

அவள் பெண்ணாகவிருப்பதால் இனப்பெருக்கத்திற்கு உதவியாக இருக்கலாம். எனினும் இனத்தூய்மை கெடுவதைக் குமுகம் ஏற்காது. நான் எதிர்கொண்டதைப் போல அவளை வேறோர் ஆண் எதிர்கொண்டால் வல்லுறவுகொள்ள முயன்றிருப்பான். அவளுடன் பேசினால் எனது மனவமைப்பை உள்வாங்கிக் கொள்ளும் திறன் அவளுக்கு இருக்குமா? அன்றி, அவளது மனக்கட்டமைப்பை என்னால் உள்வாங்கிக்கொள்ள இயலுமா? அயலாரை எதிர்கொண்டு தன் இருப்போடு இணைத்துக்கொள்வது அத்தனை எளியதா?

அவள் போக்கில் இம்மண்டலத்தில் சுற்றித் திரியட்டும். இருப்பினும் எனது எண்ணம் அவளைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். பெண்ணிருப்பு எனக்குப் புதியதில்லை; எனினும், அயலிருப்பு புதியது. நான் பேசும் மொழி அவளுக்குப் புரியுமா? மொழிவழியாக அவளை ஊடுருவி என்னால் புரிந்துகொள்ள முடியுமா? இருவருக்கும் பொதுவான ஊடகம் ஏதுமிருக்காது என எண்ணுகிறேன். கொடுக்கல், வாங்கல் உறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் புணர்ச்சியைத் தவிர வேறில்லை எனச் சொல்கிறார்கள். நான் சார்ந்த குமுக வழக்கமும் அப்படியே சொல்கிறது.

நாளை அவளை எதிர்கொள்ள நேர்ந்தால் அருகில் சென்று பார்க்கவேண்டும். இயன்றால், பேசவேண்டும். உடம்பைத் தீண்டும் வன்முறை கூடாது. மொழியால் உறவுகொள்ளும்போது எல்லாவிதமான வன்முறைகளும் செயலிழந்துபோகும். உணவுக்கும் புணர்ச்சிக்கும் தவிர வேறெதற்கும் விலங்குகள் வன்முறையில் ஈடுபடுவதில்லை. அவளைப் பார்த்தது முதல் புணர்ச்சியைப் பற்றிக்கொண்டு மனம் உழல்கிறது. புணர்ச்சியைக் கடந்து இந்த உடம்பில் தோண்டியெடுக்கப் பல உயரிய தாதுக்கள் உள்ளன. அவள் முகம் மங்கி மறதிக்குள் அமிழ்கிறது. எனது மறதிக்குள் புதையும் அவள் முகத்தைத் தோண்டியெடுக்க வேண்டும். வில் அம்பால் சமையும் எனது இனக்குடிக்கான உணவு; அதை அவளுக்குப் பரிமாறவேண்டும். உணவுவழி உறவு வளரும். உறவுவழி இருவருக்கும் நடுவே மொழிப்பொதுமை உண்டாகும்.
பெண்:
அவனை இதற்குமுன் பார்த்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. எனக்கான இடத்தில் அவன் இருக்கிறானா இல்லை அவனுக்கான இடத்தில் நான் இருக்கிறேனா என்ற குழப்பம் எண்ணவோட்டத்தை அவனை நோக்கித் திசைமாற்றி விடுகிறது. தனித்து வாழ்ந்து பழகிவிட்டேன். இன்னோர் இருப்பை எதிர்கொள்வதற்குத் தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது. பிற இருப்பைக் கையாள்வது எப்படி என்ற வழிமுறை எனக்குத் தெரியாது. தனியோர் இருப்புக்கு அழிவில்லை. கூட்டமாக இருப்பதாலேயே இடர்பாடுகளின் குப்பைக் கிடங்காகக் குமுகம் கட்டமைகிறது.

அவனிடம் என்னை எப்படி அறிமுகம் செய்துகொள்வது எனத் தெரியவில்லை. நான் யார் என்று எனக்கே தெரியாதபோது எனது இருப்பை அவனுக்கு எப்படிப் பொருள்படச் செய்வேன்? அவனை எனக்கான இரையாக்கிக்கொள்ள முடியுமா? அதற்கு மனம் ஒப்புமா? பொருளில்லாத சொல் இல்லை. சொற்களின் பொருண்மையாலான மொழியால் அவனுடன் உறவாடவேண்டும். மொழி எங்களை ஒருவருக்கொருவர் பகையறுத்துக் காதல்கொள்ளச் செய்யும். எங்களுக்கான பொதுமொழியைக் கண்டடையவேண்டும். மொழியால் ஆகாதது ஏதுமில்லை எனத் தோன்றுகிறது.

நாளை அவனை அதே அருவிப் பாறைமேல் பார்க்கமுடியுமா? இந்த அடைபட்ட வெளியிலிருந்து வெளியேற அவனிடம் உதவி கேட்கலாமா? அவனும் என்னைப் போலவே அடைபட்டவனாக இருந்தால் இந்த மண்டலத்தைவிட்டு வெளியேற இருவரும் ஒன்றாக முயற்சிக்கலாம். முதலில் அவனைக் கண்காணிக்கவேண்டும். என்னைத் தனக்கான வேட்டை விலங்காக அவன் கருதினால் இருவருக்குமிடையே வன்முறை வெடிக்கும். இருவரில் ஒருவர் கொல்லப்படுவர். அவனுக்கு என்னைக் கொல்லக் காரணம் பசிக்குத் தேவையான உணவு. எனக்கு அவனைக் கொல்வதற்கான காரணம் விடுதலைக்கான முன்னெடுப்பு.

ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிறிதொன்றைக் கொல்வது அறமாகுமா? விடுதலையின் மூலவித்துப் பசியாகும்; நானும் அவனும் இந்தப் புள்ளியில் ஒன்றிணைவோம். அவனுக்குப் பசியைப் போல எனக்கு விடுதலை. இந்த மூடுண்ட வெளியிலிருந்து வெளியேறவேண்டும். ஒருமுறை பார்த்த ஒன்றை மறுமுறை பார்க்கக் கூடாது. ஒவ்வொரு நொடியும் புதியவொன்றை எதிர்கொள்வதில்தான் மனத்தில் விடுதலை கூடிவரும். ஒவ்வொரு முறையும் புதிய பசி; உணவுக்கான வேட்டை விலங்கும் புதியதே. புதியவொன்றைக் கண்டடைவதே விடுதலை.

நான் பேசினால் அவனுக்குப் புரியுமா? இதுவரை நான் பேசியதில்லை. அவனுக்குப் பேசத்தெரிந்த மொழியில்தான் எனக்கு நானே பேசிக்கொள்கிறேனா? அதுசரி, மொழி என்பது எப்படி இருக்கும்? எனது சிந்தனையைப் போல இருக்குமா? எனது வாய்வழியே வெளியேறும் ஓசை அவனுடம்பைத் தொடும்போது மொழியாகிவிடுமா? ஒரு மொழியை உண்டாக்கி வளர்த்தெடுக்க இருவர் வேண்டும். என்னுடன் அவன் சேர்ந்தால் இருவராகிவிடுவோம். எமக்குள் புதிய மொழி, பொதுமொழி விளையும். அதனால், இருவரும் வன்செயலைத் தள்ளிப்போடலாம். பேச்சுவழியே புதிய குமுகாயம் வளர்ந்தெழும். எனக்குத் தேவை மாற்று வெளி; அங்கே விடுதலைக்கான புதிய கருப்பொருளை உண்டாக்கவேண்டும். அவனை நம்பலாமா?
ஆண்:
மொழிப்பொதுமை எப்படி உண்டாகும்? அவளை அறிய மொழியைத் தவிர வேறு ஊடகமில்லை. உணவாக அவளை உட்கொள்ள மொழி தேவையில்லை. ஆனால், மனமும் சிந்தனையும் இரண்டறக் கலக்க மொழியின் உதவி வேண்டும். அதற்கு இருவருக்குமான பொதுவான மொழியை உருவாக்க வேண்டும். மொழிவழியே ஒரு பொது மனவெளியைக் கட்டமைக்கவேண்டும். பெண்மொழியும் ஆண்மொழியும் ஒருங்கிணையும் மொழித்தளத்தில் இருவரும் ஒருவரையொருவர் ஊடாடிப் பழக வேண்டும். மொழிவழியே எங்களுக்கான உடம்பிலக்கணம் உருவாகும்.

இந்த இரவுப் பேராற்றைக் கடக்க அவளைப் பற்றிய எண்ணம் கட்டுமரம் ஆகட்டும். விடிந்ததும் எதிர்க்கரையில் அவளைத் தேடியலையவேண்டும். வானத்தை முட்டும் மரச்செறிவின் பச்சை இருட்டில் அந்தக் கருத்த உடம்புக்காரி பார்வைக்குத் தட்டுப் படுவாளா? ஏதோவோர் ஏக்கம் என்னை மிச்சம் வைக்காமல் அரித்துக் கொண்டிருக்கிறது. இனக்குடியின் குடில்களில் ஆங்காங்கே எரியும் விளக்கு வெளிச்சம் அடரிருட்டில் விண்மீன்களின் அழகை ஒத்திருக்கிறது. இந்தக் குடிகளிடம் அவளை அழைத்துவந்து அறிமுகம் செய்யவேண்டும். தனியொருத்தியைக் குமுகமாக்க வேண்டும். குமுகமும் அவளை மெல்ல மெல்ல உள்வாங்கிக்கொள்ளும்.

இந்த விடியல் அவளை எனக்கு எப்படி அடையாளம் காட்டும்? இங்கிருந்து எந்தத் திசையில் செல்வது? அருவிக்குச் செல்லும் வழித்தடத்தைக் கணக்கிட்டு இன்றும் அங்கு வருவாளா? எனக்கு இது புதிய உணர்வு. முன்பின் அறிமுகமில்லாதவளைப் பற்றிய எண்ணச் சுழலில் சிக்கி உழல்வது. இந்த மனநெருக்கடி குமுக மனத்தின் விளைவு. தனியொருவருக்கு இப்படியான மனத்தத்தளிப்பு நேராது. நேற்று என்னைப் பார்த்தாளா? பார்த்தது போலத்தான் இருக்கிறது. திகைப்பு, அச்சம், படபடப்பு என எல்லா உணர்வுகளும் முண்டியடித்து, கவண்கல்பட்ட மரத்துப் பறவைகள் போலப் பதறினாளே. அவளுடன் பழகி, இந்தக் காட்டுக்குள் புதிய பகுதியை முதன்முதலாக அறிவதைப் போல அதன் மரம், செடி, கொடி என அனைத்தையும் தொட்டறிய வேண்டும். ஆற்றங்கரையில் தென்பட்ட புதிய கூழாங்கல் அவள்.

நடுப்பகலை எட்டிவிட்டேன். தூரத்து அருவி பாறையில் விழும் ஓசையெழுகிறது. அந்த நீரொலியில் ஆதி நிணவாடை கலந்து காற்றில் பரவுகிறது. அங்கு அவள் இருக்கலாம். இந்த வாடை அவளுடம்பிலிருந்துதான் எழுகிறது. குமுகமணம் கலவாத தூய பெண்வாடை. இப்படியொரு வாடை ஓர் உடம்புக்கு வாய்ப்பது அரிது. எல்லா உடம்புகளும் அவை சார்ந்த குமுகவாடையும் சேர்ந்தே அடையாளப்படும். அவளுடன் நான் பழகினால் எனது உடம்பின் வாடை அவளுக்குள்ளும் அவளது உடம்பின் நிணவாடை எனக்குள்ளும் ஊடுருவும். குமுகக் கூட்டு மனத்தின் மணத்தை அவளுக்குள் விதைக்க வேண்டும்.

அருவி கொட்டும் மலையுச்சிக்கு மேலே வெட்டவெளி. உச்சிக் கதிரொளி அருவியோடு தரையில் வீழ்கிறது. அங்கு எழும் நீராவி மண்டலத்தில் உண்டாகும் நிறப்பிரிகையில் ஏழுவண்ணம் துலங்குகிறது. நிறப்பிரிகையை ஊடுருவிப் பார்க்கிறேன். நான் நின்ற அந்த வட்டப்பாறைமீது நிற்கிறாள். அருகில் செல்லத் தயக்கமாக இருக்கிறது. குமுகத்துக்கு வெளியே எந்தப் பெண்ணுடனும் இதுவரை பேசியதில்லை. அயலாரை அணுகுவது பாதுகாப்பற்றது. அவளிடம் கொலைக்கருவி ஏதுமில்லை. நீரில் நனைந்து அம்மணமாக நிற்கிறாள்.

பெண்:
நான்மட்டுமே இருக்கிறேன்; என்னைச் சுற்றி எதுவுமில்லை என்றே இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், என்னைத் தாண்டி எல்லாம் இருக்கின்றன என்பது நேற்றிலிருந்து புரியத் தொடங்குகிறது. எல்லாம் சேர்ந்து உருவான நான் ஒன்று இல்லை, பல என்பதும் புரியத் தொடங்குகிறது. சிந்திக்கும் மொழியில் புதிய சொற்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. எனக்குள் மொழிப்பயிர் செழித்து வளர்கிறது. இது என்னில் என்னை மீறிய ஒரு விளைவாக நிகழ்கிறது. இந்த மொழி அவனிடம் என்னைக் கொண்டு சேர்க்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவன் இருப்பு என்னை என்னமோ செய்கிறது. எனது இசைவின்றி உள்நுழைந்து வினைபுரிகிறான். நான் எனக்கு அடைபட்டவள் போல இருந்தாலும் பிறர் உள்நுழையத் திறந்தே இருக்கிறேன். ஓர் உடம்பு குமுகமாகப் பரிணமிக்க அதன் இசைவு தேவையில்லை போலும். எனது உடம்பு என்னைத் தாண்டி இயங்குகிறது; அதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவனைப் பார்த்த நாள்முதல் என்னில் இவ்வித மாற்றம் நிகழ்கிறது. நான் அவனை நோக்கி ஈர்க்கப்படுவது எனக்கு நல்லதில்லை. நான் முதன்முதலாக என்னைக் கண்டு அச்சம்கொள்கிறேன்.

என்னுள் புதிதாக விளைந்திருக்கும் அறிதல் நான் இதுவரை அறியாத ஒரு குமுக வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அவன் சார்ந்த குமுகமனம் என்னுள் ஊடுருவி கிளைகளைப் பரப்பி நிலத்தில் விழுதுகள் பாய்ச்சி என்னைத் தனக்குள் ஓர் அங்கமாய் ஈர்த்துக் கொள்கிறது. பெரிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக என்னை உணரச் செய்கிறது. இதனால், எனக்கான தனித்த இயக்கம் தடைபடுமோ என்ற கேள்வி எழுகிறது. தனித்தியங்கியே பழக்கப்பட்டவளுக்குக் கூட்டுமனத்தின் உடம்புந்துதல் ஒருவிதக் கிளர்ச்சியைத் தந்தாலும், உள்ளுக்குள் அச்சம் சுரக்கிறது.

நேற்று நடுப்பகல் அவன் என்னை நெருங்கி வரும்போது நான் கொட்டும் அருவிக்குள் ஊடுருவி மறைந்து போனேன். எனது விலகல் அவனை வருத்தப்பட வைத்திருக்கும். அந்த ஆண்முகத்தை நன்றாகப் பார்த்தேன். அந்தக் கண்களில் ஒருவிதத் தவிப்பு இருந்தது. ஆண்தன்மையின் சிடுக்கோடு இருந்தான். என்னைப் பற்றிய ஓயாத எண்ணத்தால் தன்னைச் சிக்கலாக்கிக் கொண்டானோ, தெரியவில்லை. எனக்குள் விளையும் புதிய மொழியை அவனுடன் பகிர்ந்து கொள்ளும் துடிப்பு என்னையும் மீறி வெளிப்பட்டுவிடுமோ என்ற கூச்சம் பாதங்களைச் சறுக்கியது.

பேச்சை ஒத்திப்போடுவதில் தவறில்லை. எனது மனவோட்டத்தைத் தூரத்திலிருந்தே அவனால் வாசிக்க முடிகிறது. அவன் என்னைக் குறுக்கும் நெடுக்குமாகப் பிரித்துப் படித்தபடியே இருக்கிறான். என்னைப் படிக்கும் அவனைப் பொருள் விளங்கிக் கொள்கிறேன். ஆனால், அவனுக்கு நான் விளங்காப் பொருளாகிவிடக் கூடாது. இன்று அவனை எப்படி எதிர்கொள்வேன் எனத் தெரியவில்லை. என்னை நோக்கி வரும் அவனை எதிர் நிறுத்தும் இடைவெளியின் தூரம் என்னவாக இருத்தல் வேண்டும்?
ஆண்:
அவள் ஒருத்தியா அல்லது பல்வேறுபட்ட இருப்பா? நேற்று அவளைத்தான் கண்டேனா? அருவிக்குள் ஒரு பேருருவாக எழுந்து கரைந்து மறைந்தாள். அயலானைக் கண்டு விலகிச் செல்வதில் பொருள் இருக்கிறது. பிறர் மீதான அச்சவுணர்வே மாந்த மனத்தின் அடிப்படை. குமுகாயக் கட்டமைப்பே பிறர் மீதுகொள்ளும் அச்சவுணர்வால் ஆனதுதானே. அச்சத்தின் அடிப்படைமேல் கட்டியெழுப்பப்பட்ட குமுகம் வேறொன்றின் மேல் தாக்குதல் செய்ய எந்நேரமும் முன்னேற்பாடுடனேயே இருக்கும். தனியொருத்தி என்னை எதிர்கொள்ளும்போது தாக்குவதற்கான முன்னேற் பாட்டுடனேயே தன்னை முன்னிறுத்துவாள்.

அவளுக்கு நான் யார்? அவள் அவளுக்கானவள். அவளிடம் எனக்கோர் இடத்தைக் கேட்டுப்பெற என்ன உரிமை இருக்கிறது? உடம்பும் மனமும் தனியுடைமை; அவற்றைப் பொதுவில் வைக்கமுடியாது. அவளிடம் அவளைத் தவிர வேறு எதுவுமில்லை; என்னிடம் மட்டும் என்னைத் தவிர வேறு என்ன இருக்கிறது? கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உடம்பைத் தவிர வேறெதுவுமில்லை. உடம்பு உயிர்ப்பொருட்களால் ஆனது இல்லை; அது வரலாறால் ஆனது. ஒருவரின் வரலாறு மற்றவரை மருட்டக் கூடியது. நான் சுமக்கும் எனக்கான வரலாற்றைக் கண்டே அச்சம் கொள்கிறாள்.

அவள் கரைந்து மறைந்த அருவி விழுந்து ஓடும் நீர்ப்பாட்டையையே பார்த்துக் கொண்டு நின்றேன். ஓடும் நீரை அள்ளி முகர்ந்தேன். ஆதி நிணநெடி. மூதாயின் வாடை. இந்த வாடையை நான் சார்ந்த குமுகப் பெண்களிடம் முகர்ந்ததுண்டு. மாந்த உடம்பின் முதல் வாடை. இதற்குப் பால் வேறுபாடு இல்லை. ஓருடம்பு இறக்கும்போது இந்த வாடை அந்த உடம்பை மீண்டும் ஆட்கொள்ளும் எனப் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். முதலும் முடிவுமான சூலக நிணவாடை வளர்ந்து நிற்கும் இந்தப் பெண்ணிடம் இன்னும் உடம்பைவிட்டு நீங்காமலிருக்கிறது.

அருவி கொட்டுமிடத்தில் இன்றும் அவளைப் பார்க்கப் போகிறேன். வேட்டைக்குச் செல்லவேண்டிய இந்தக் கால்கள் நாள்தோறும் யாரோவொருத்தியைக் காணச் செல்கின்றன. அவள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். அவளது உருவத்தில் மாற்றங்கள் நிகழ்வதைப் பார்க்கிறேன். இப்போது தன்னுடம்பை ஆடையால் மூடியிருக்கிறாள். தலைமுடியில் பூச்சூடி இருக்கிறாள். தொடக்க நாட்களில் பேய்த்தன்மையோடு வெளிப்பட்டவள் இப்போது பெண்தன்மையோடு தன்னைக் காட்சிப்படுத்திக் கொள்கிறாள்.

எனக்கு முன்னே அருவியை நோக்கி நடக்கிறாள். முழங்கால்களில் அணிந்திருக்கும் தண்டைகள் கணீர் கணீரென ஒலிக்கின்றன. யட்சியைப் போல இருக்கிறாள். இவள் எக்குடியின் தாய்த்தெய்வம் என்ற கேள்வி எனக்குள் ஏன் எழுகிறது? நடந்து நடந்து அருவிக்குப் புதிய ஒற்றையடி வழிப்போக்கை உண்டாக்கி வைத்திருக்கிறாள். அவள் பார்வைக்குப் படாமல் அடிமரங்களின் பின்னே மறைந்து மறைந்து செல்கிறேன். நீர் விழும் ஓசை எழுகிறது. எதிரே நிலத்துக்கும் வானுக்குமாக நீர்மரம் அடர்ந்து செங்குத்தாக நிற்கிறது. அவளது உடம்பை உரசிய சாரல் என் முகத்தை நனைக்கிறது. அருவியில் நனைகிறாள். பேருருக்கொண்டு மலையுச்சிவரை வளர்ந்து நிற்கிறாள். அருகில் சென்றால் அவளது கால்முட்டி உயரம்கூட நான் இருக்கமாட்டேன்.

பெண் :
எனது பார்வையில் எதிர்ப்படும் அவனை எனக்கான உடனிருப்பாக எப்படி ஏற்றுக் கொள்வது? அவனால் பதற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் மாறிமாறி ஆளாகிறேன். எனக்காக நாள்முழுவதும் அருவியோடும் திசைவழியில் என்னைத் தேடி நடக்கிறான். அவனை என்னால் தவிர்க்கவோ ஏற்கவோ இயலவில்லை. வரவர அவனது முகத்தில் ஆர்வம் குன்றி வருத்தம் மேலிடுகிறது. நீர்ச்சுவரின் எதிரெதிர்ப் பக்கங்களில் நிற்கிறோம். மங்கலாக எங்களுக்குக் காட்சியாகிறோம். காடு அதிர்ந்து பறவைகள் கிளர்ந்து பறக்க அவன் குரலெடுத்துக் கத்துகிறான். ஏன் இந்த வாதை?

பாறைகள் சரிந்து சமைந்த மாடக் குகையொன்றில் நீள்வடிவக் கல்மீது உருண்டைக் கல்லொன்றை வைத்து, அதில் கண்கள், வாய், நாக்கு வரைந்த பெண்முகத்தை மலர்த்தூவி வணங்குகிறான். அந்தக் கல்லுருவத்தின் முன்நின்று வேண்டுகிறான். தன்னால் இயலாததை அந்த உருவம் தனக்காகச் செய்துமுடிக்கும் என நம்புகிறான் போலும். இது அவனது குடிவழி வழக்கமாக இருக்கலாம். அவன் என்னை வசியம் செய்ய அந்தப் பாறையுருவத்திடம் வேண்டுகிறானா? தனக்கு மீறிய ஏதோவொன்றை என்னை நோக்கி ஏவுகிறான். ஏவலுக்கு நான் ஆட்படுபவளா?

தொடக்கத்தில் தனது குடிகளுடன் வேட்டைக்குச் சென்றவன் இப்பொழுதெல்லாம் நிலத்தை உழுது பயிர்செய்யச் செல்கிறான். கண்ணெதிரே நடக்கும் மாற்றங்களைப் பார்க்கிறேன். விதைகளைப் பொறுக்கி வந்து ஊருக்குப் புறத்தே விதைத்தவை எல்லாம் இன்று வளர்ந்து காய்த்துக் குலுங்குகின்றன. காட்டிலிருந்து தேர்ந்தெடுத்தத் தாவரங்களால் தனக்கொரு தோட்டத்தை வளர்த்தெடுக்கிறான். ஏற்கெனவே, தாவரவுண்ணிகளைப் பழக்கித் தன்னருகே வைத்து அவற்றை இனப்பெருக்கம் செய்து வளர்த்து வந்தவன் இன்று அவற்றின் இறைச்சியையும் பாலையும் தனக்கான உணவாக்கிக் கொண்டிருக்கிறான். அன்று பார்த்த அவன் இன்று இல்லை.

நானும் மாறிவருகிறேன். ஆடையுடுத்துகிறேன். அவன் வணங்கும் இறைவியை ஏனெனத் தெரியாமல் நானும் வணங்குகிறேன். நான் சூடிடும் பூக்களை இறைவிக்கும் சூட்டுகிறேன். அவன் அங்கு வழக்கமாக வரும் நேரத்தைத் தவிர்த்து மற்றப் பொழுதுகளில் அந்தப் பாறையுருவத்துடன் பேசுகிறேன். நான் பேசும் மொழி என்னவென்று எனக்கே தெரியாதபோது அதற்குப் புரியுமா? ஒன்றையொன்று வேறுபடும் ஒலித் தொகுப்பிற்குப் பெயரிடும்போதுதான் ஒரு குறிப்பிட்ட மொழி பிறக்கிறது. அந்த இறைவியுடன் பேசிப் பேசி எனக்கான மொழியை உருவாக்கிக் கொண்டேன். மொழி என்னைப் பொழுதுகள் தோறும் வேறுவேறாக வளர்க்கிறது.

அவனைப் பார்க்கச் சென்றாலும் மறைந்து நின்றுதான் பார்க்கிறேன். தொடக்கத்தில் நான் எதற்குள்ளோ அடைபட்டிருப்பதான எண்ணம் என்னைப் படுத்தியெடுத்தது. என்றைக்கு அவனைப் பார்த்தேனோ அன்றுமுதல் ஒரு விடுபட்ட உணர்வு என்னுள் வளர்கிறது. பாறையுருவத்துடன் பேசிப் பழகுவதிலேயே வளர்ச்சிப்போக்கு என்னுள் நிகழும்போது, உயிர்ப்புள்ள அவனுடன் பேசிப் பழகினால் என்னவென்னவாக மாறுவேன் எனத் தெரியவில்லை. தனித்திருப்பதில் இல்லை, கூட்டமாக இருப்பதில்தான் விடுபட்ட உணர்வு மேலோங்கும். முதலில் அவனை மொழியாலும் அடுத்து, அந்த இறைவியை முன்வைத்து விரல்களாலும் தீண்டவேண்டும்.
ஆண்:
அவளிடம் இன்றுவரை எதுவும் பேசவில்லை; இன்னும் நேருக்கு நேராக அவளை எதிர்கொள்ளவில்லை. விலகிச் செல்வதிலும் ஓர் உறவு வளரத்தான் செய்கிறது. எட்டி நின்று பார்ப்பதிலும் பார்த்து விலகுவதிலும் ஓர் அழகு மிளிரவே செய்கிறது. இறைவியிடம் அவள் வந்துபோகும்போது விட்டுச்செல்லும் தடயங்களில் எங்களுக் கிடையில் உண்டாகப் போகும் உறவுக்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. நெருங்கிப் பேச இன்னும் சில ஆண்டுகள் எங்களைக் கடந்து செல்லலாம். காலத்தின் நெடுந்தொலைவிலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டே அருகிவருகிறேன். அவளை நெருங்கிவரும் அதேபொழுதில் இடைவெளி வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

காட்டுக்கு வெளியே வாழும் சிற்றூர்ப் பகுதிகளுக்குச் சென்றுவருகிறாள். அங்கே புதிய உறவுகளைப் பெற்றிருப்பாள். அந்நிலத்து இனக்குழு மாந்தவாடை இறைவிக்கு அவள் சூட்டும் மலர்களில் கமழ்கிறது. தனித்திருப்பதைவிடக் குமுகமாக இருப்பதில் திறமான வளர்ச்சியை எட்டிவிடுவாள். தனக்கான குமுக அடையாளத்தை அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இருவேறுபட்ட பாலமைப்பிலிருந்தும் மனவமைப்பிலிருந்தும் குமுகவமைப்பிலிருந்தும் ஒன்றிணையும் தன்னிலைகளின் உறவுநிலை திடமாகக் கட்டமையும். சிலபொழுது அவளைத் தேடி மலையடிவார ஊருக்குச் செல்கிறேன்.

அந்த ஊரிலும் எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்கப் போவதுபோல அவளைத் தேடுவேன்; பார்வையில் படமாட்டாள். அவளது குடில் எங்கிருக்கிறது என்றும் எனக்குத் தெரியாது. அவள் முகத்தை மனத்துக்கண் இன்னும் எழுதிவைக்கவில்லை. எதிரில் அருகிவந்தாலும் எனக்கு அவளை அடையாளம் தெரியாது. அவளுக்கான ஓரிடத்தில் அவளை வைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பாக்கும்போதுதான் அவளுருவம் பார்வைக்கு அடையாளப்படும். அதுபோல, காட்டில் அருவிக்கரையிலோ இறைவியுறையும் குகைமாடத்திலோ அவள் வாடை கமழும்; பிறயிடங்களில் அவள் உடம்பின் வாடையைத் தனித்தறிய முடியாது.

அவளைப் பார்த்தத் தொடக்கத்தில் ஓர் அலைக்குடிப் பெண்ணாக இருந்தாள்; இன்று ஒரு நிலைக்குடிப் பெண்ணாகத் தன்னளவில் வளர்ந்திருக்கிறாள். காலம் மாந்தரைக் கடந்துசெல்லும்போது வாழும் சூழலில் மாற்றத்தை நிகழ்த்திச் செல்கிறது. காலம் எதிலும் அடைபடுவதில்லை; அதனோடு ஒன்றி இயங்குவதில் விடுதலையை மாந்தரால் நுகர முடிகிறது. தாயின் கருவறையில் பத்துத் திங்கள் அடைபட்டிருந்த காலத்தைத் தவிர்த்து மாந்தர் வெளிவந்து காலத்துடன் கலந்த பிறகு வேறெதிலும் அடைபடுவதில்லை. விட்டுவிடுதலை என்னும் கருதுகோள் கருவறை வெளியேற்றத்தில் தொடங்குகிறது. ஈன்று புறந்தள்ளப்பட்டதே விடுதலை.

அவளிடம் பேசிப் பழகினால் அவளுக்குள் அடைபட்டுவிடுவேன்; இதே வினை என் மூலமாக அவளுக்கும் நிகழலாம். ஒருவரையொருவர் எதிர்கொள்வதையும் உரையாடுவதையும் தவிர்த்தல் என்பது ஒருவரிலொருவர் அடைபடுவதை ஒத்திப் போடுவதாகும். பேசாமல் விலகிச் செல்வதிலும் ஒருவித அன்பு விளையத்தான் செய்கிறது. நான் அவள்மீதுகொண்ட அன்பு மலையிலிருந்து கீழிறங்குவதிலும் அவள் என்மீதுகொண்ட அன்பு கீழிருந்து மலைமீது ஏறிவருவதிலும் வெளிப்படுகிறது. ஒருநாள் நடுக்காட்டில் நடுப்பகலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு விலகினோம்.
பெண்:
இந்த மலையடிவார இனக்குடியில் ஒருத்தியான பிறகு நான் எனக்குள் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். ஊர் என்னைப் பன்மை செய்தது. என்னைப் பலர் சொந்தம் கொண்டாடினர். எண்ணிலடங்காக் கால்களும் கைகளும் உடம்பில் முளைத்தன. ஆனால், தலைமட்டும் ஒன்றாகவும் அதில் ஒருபக்க முகத்தோடும் இருந்தேன். முகமே எனது மொத்த இருப்பின் அடையாளமானது. என் முகத்தில் பலர் தங்களைத் தேடினர். அதன் வழி எனக்கான கதையை உருவாக்கி என்னிடமே கையளித்தனர். முகத்தைக்கொண்டு வரலாற்றின் ஒரு பகுதி எழுதப்படுகிறது.

அவன் என்னைத் தேடி ஊருக்குள் அலைவதை அறிந்தேன். அவனுடைய மலைவாடை சில இடங்களில் குமைந்ததையும் முகர்ந்தறிந்தேன். கொடுப்பதற்கோ எடுப்பதற்கோ அவனிடம் எதுமில்லை; என்றாலும். புதிய ஒரு நிலப்பகுதியும் அதைச் சார்ந்த கதைகளும் அவனிடம் இருக்கின்றன. அவற்றை அறிந்து தெளிவதின் வழியாக நான் விரிவடைவேன். உடம்பைத் தாண்டிய அறிதல் அதில் ஓயாமல் நிகழும் கதைகளில் இருக்கிறது. ஆம், ஓருடம்புக்கு அழிவுண்டு; அது வெளிப்படுத்திய கதைக்கு அழிவில்லை. அவனை அறிந்துகொள்ளவே அவனை நோக்கி ஈர்க்கப்படுகிறேன்.

மலையுச்சியை அடைய பல பாதைகள் உள்ளன; இருந்தாலும், நடந்து நடந்து எனக்கான தனிப் பாதையை உருவாக்கிக் கொண்டேன். மலையில் புதர்ந்தெழுந்த காட்டையும் அதன் மறைபொருளையும் அறிந்துகொள்ள எனக்கான வழிமுறையை வகுத்துக்கொண்டேன். இந்த மலைக்காட்டில் அவனும் ஒரு மறைபொருள். அவனை அறிவது காட்டின் ஒரு பகுதியை அறிவதாகும். நாள்தோறும் புதிய செய்திகளை வழங்கும் காட்டில் அவனும் புதியதாகவே ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறான். காட்டில் தேடித் தேடி புதிய புதிய இனத்தைச் சேர்ந்த மலர்களைக் கொய்துவந்து இறைவிக்குச் சாற்றுகிறேன். அவற்றில் சில இதுநாள்வரை அவனே அறியாதவை.

எனக்கான தனித்த பாதையை அவனும் பயன்படுத்துவதை அறிகிறேன். வழிநெடுக அவனது வியர்வை வாடைக் கிளர்ந்து எனது மூச்சை இடறுகிறது. எனக்கான பாதையில் அவன் வருவதை விரும்பவில்லை; இருந்தாலும், அவனுடைய வாடை என்னை ஈர்க்கிறது. எனவே, அவன் இவ்வழியைப் பயன்படுத்துவதற்கு இசைகிறேன். ஆயிரம் மணங்களால் நிறைந்த காட்டில் அவனது உடம்பின் வியர்வை மணம் தனித்துவமானது. காட்டிலுள்ள மரங்களோ, விலங்குகளோ, ஒவ்வொன்றும் தன்னளவில் ஒருமையானது. ஆனால், அவனோ, காட்டிலுள்ள தாவர இனங்களும் விலங்கினங்களும் ஒன்று கலந்த அனைத்துமானவன். ஆறறிவுக் காட்டுமாந்தன்.

இன்று வழியில் அவன் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்து விட்டேன். யானை தன்னை மறைத்துக்கொள்ளும் மரத்தின் பின்னே மறைந்து கொண்டேன். அவன் என்னைக் கடந்ததும் பின்புறத்தைப் பார்த்தேன். உயரமான கரிய உடம்பின் வாடை காற்றில் ஈரமாகக் கனத்தது. காற்றில் கலந்த காட்டு உடம்பில் அரும்பிய வியர்வையின் உப்புக் கரிப்பு உதடுகளில் படிந்ததை நாவைச் சுழற்றி நக்கிச் சுவைத்தேன். உடம்பு சுரக்கும் நீர்மை எல்லாம் கரிப்புச் சுவைகொண்டதே. குருதிமுதல் கண்ணீர்வரை ஒரே சுவை. எச்சில் மட்டும் கரிப்பதில்லை. பாறை மாடத்தில் வீற்றிருக்கும் இறைவிமுன் சிறு கூடையில் எனக்காகப் பழங்களைப் படையலிட்டிருந்தான்.
ஆண் :
அவளை அடிக்கடி எதிர்கொண்டு விலகிப் போவது இயல்பாகிப் போனது. எனது மனத்திலுள்ள அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வதால், அவள் என்னிடம் சொல்ல நினைப்பதை எதிர்ப் பேச்சின்றிப் புரிந்துகொள்கிறேன். காட்டில் திரிந்து மலர்களைக் கொய்து எனக்குப் பரிசளிக்கிறாள்; நான் பழங்களை அவளுக்குத் தருகிறேன். பூவொன்று பழமாகும் வித்தையைக் கற்றுத் தருகிறேன். இறைவியை முன்வைத்து அவளை நேர்க்கொண்டு நோக்கப் பேராவல் கொள்கிறேன். ஆவல் கட்டுக்குள் அடங்காமல், முன்நின்று அவளை வழிமறித்து எனது படிமத்தைச் சிதைத்துக் கொள்வேனோ என்ற அச்சமும் மேலிடுகிறது.

காதல் நம்மைக் காலத்தைக் கடந்து நிலைநிறுத்தும். காமவுந்துதலால் பலரிடம் பழகியுள்ளேன். முதல்முதலாகக் காமம் கடந்த காதலை இவளிடத்தில்தான் உணர்ந்தேன். இது எனக்குப் புதியவுணர்வு. காதல் என்னை வேறொருவனாக மாற்றிவிட்டது. தானறியாமலேயே என்னை வேறொன்றாக மாற்றிவிட்டாள். புறத்திலிருந்து என்னுள் வினைபுரியும் அவளை இருப்பு கடந்த ஓர் இருப்பாக உணர்கிறேன். இதுவரை அவள் முகத்தை முழுமையாக உள்வாங்கியதில்லை. தண்டை ஒலிக்க இடம்பெயரும் ஒரு யட்சியைப் போல அவளை உருவகிக்கிறேன்.

என்னை ஏற்பதோ மறுப்பதோ அவள் விருப்பம். என்னிடம் எந்த உறவுமில்லாத ஒரு பூவைப் பார்த்து மகிழ்வதைப் போன்ற மனநிலை. பாறையாலான உயிரில்லாத இறைவியிடம் மனம்விட்டு உறவாடுவதைப் போன்ற பொருளற்ற, பொருள் கடந்த பித்தநிலை. அவளை எதிர்கொண்டு பேசினால் இந்த மனவோர்மை குலைந்துவிடும். அவளுக்கு நான் யார்? அங்கு நான் என்னவாக இருக்கிறேன்? இந்தக் கேள்விகள் என்னைக் கொண்டு அவளால் உருவானவை. இதுவோர் உணர்வு; இது உணர்வாகவே இருக்கட்டும். அப்போதுதான் அது எனக்கானதாக மட்டுமே இருக்கும்.

இந்த உறவை இந்தத் திணைக்களத்திலிருந்து வேறு வெளிக்கு மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகிறது. நிலமும் பொழுதும் மாறும்போது வாழ்வியக்கமும் மாறும். மாந்தமனம் வேறொன்றாகப் பொருள் திரியும். அங்கு அவள் இருப்பாளா? அதற்கு அவளும் என்னைப் போலவே சிந்திக்கவேண்டும். இரண்டு மூளைகளின் ஒருமித்த சிந்தனை. பன்மை ஒருமையாக மாறுவதில் காதல் விளைகிறது. அந்த விளைவு அவளுக்கும் நிகழவேண்டும். மொழி கடந்த உணர்வை மொழியால் விளக்கமுடியாது. என்னுடைய மலையையும் காட்டையும் விட்டுப் பிரிவது எங்கனம்?

திணைகள் மாறினாலும் தனிமை மாறுவதில்லை. குமுகத்தில் ஒருவனாகத் தனித்திருக்கிறேன். கூட்டு உடம்பு, கூட்டு மனம் உருவாக வாய்ப்பில்லாதபோது மனப்பாவனையால் எல்லோரும் ஒருமித்திருக்கிறார். இன்று மலைப்பாதையில் அவளை எதிர்கொண்டு நிறுத்தி மொழியால் ஊடுருவ எண்ணியிருந்தேன். அவள் வழியில் எதிர்ப்படவில்லை. இறைவி உறையும் கோவிலில் இருப்பாள்; அவளை அங்குக் காணலாம் என ஓடினேன். அங்கும் இல்லை. புதிய மலர்கள் இறைவிக்குச் சாற்றப்படவுமில்லை. அங்கு அவளுடைய வாடை இல்லை.


 

ரமேஷ் பிரேதன்
ரமேஷ் பிரேதன்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    June 3, 2025
  • ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    June 3, 2025
  • மகரந்தத் துகளியல்

    மகரந்தத் துகளியல்

    June 3, 2025
  • மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ

    மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ

    June 3, 2025
  • இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு

    இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு

    June 3, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அரசியல் (1)
  • அறிவியல் (1)
  • ஆய்வு (1)
  • இலக்கியம் (4)
  • உரையாடல் (1)
  • கட்டுரை (7)
  • கதை (1)
  • கவிதை (5)
  • குறுங்கதை (1)
  • சிறுகதை (2)
  • சூழலியல் (2)
  • நாட்குறிப்பு (1)
  • நாவலின் ஒரு பகுதி (1)
  • நுண்கதை (1)
  • மொழிபெயர்ப்பு (1)

Archives

  • June 2025 (20)

Tags

Unknown Sea சிறார் கதைகள் சுந்தர காளி நீதிமணி பிரிய தர்ஷினி புளிமூட்டு உப்பா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்

    June 3, 2025
  • ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    ”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்

    June 3, 2025
  • மகரந்தத் துகளியல்

    மகரந்தத் துகளியல்

    June 3, 2025

Categories

  • அரசியல் (1)
  • அறிவியல் (1)
  • ஆய்வு (1)
  • இலக்கியம் (4)
  • உரையாடல் (1)
  • கட்டுரை (7)
  • கதை (1)
  • கவிதை (5)
  • குறுங்கதை (1)
  • சிறுகதை (2)
  • சூழலியல் (2)
  • நாட்குறிப்பு (1)
  • நாவலின் ஒரு பகுதி (1)
  • நுண்கதை (1)
  • மொழிபெயர்ப்பு (1)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top