‘சின்ன பிராயத்தில இவம் எப்பிடி இருந்தாம்? வவுறு தள்ளி, கண்ணு தள்ளி, கையும் காலும் மெலிஞ்சு அல்லோ பாக்க ஐயமாட்டு எப்பிடி இருந்தாம். ஆரும் அறியல. அது தேர தோயமாக்கும். நானில்லயா உம்மா தோயத்த எடுத்து வுட்டேன்.’ ஆசியா மாமி என்னைக் காட்டி சொலையா மைனியிடம் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.
‘மாமிக்குப் பழைய கதையளவொ ஒண்ணும் மறக்காது ‘ உள்ளேயிருந்து முர்ஷிதா அக்கா சாயாவோடு சிரித்துக் கொண்டே வந்தாள்.
‘மச்சான் எங்க போயிரிக்கி அக்கா’ நான் கேட்டேன்.
‘காட்டுக் கொளத்துக்குக் குளிக்கப் போச்சுது. இன்னா இப்ப வந்திரும் ‘
‘தேர தோயம்னாக்கா சும்மா இல்ல. உயிரோட தேரையப் பிடிச்சு அத எண்ணையில பொரிச்சுத் தள்ளைக்கும் பிள்ளைக்கும் கை கால்ல தடவணும். இல்லையா தேரையப் பிடிச்சு ஒரு செரட்டைக்குள்ள கமுத்திப் போட்டு அதில பிள்ளைய இருத்திக் குளிக்க வெய்க்கணும். இல்லேன்னாக்கா தோயம் வுடாது. பட்சித் தோயம் பக்கித் தோயம் ஓரொண்ணுக்கும் ஒவ்வொரு முறிவாக்கும்.. பட்சித் தோயத்துக்கு வடமாலை போடலேன்னாக்கா தீராது…’’ஆசியா மாமி பேசிக்கொண்டேயிருந்தாள். மாமிக்கு எப்படியும் எழுபது வயதுக்கு மேல் இருக்கும். காதர் மச்சானின் உம்மா. என் வாப்பாவின் பெரியம்மா மகள். மாமிக்குத் தெரியாத கை வைத்தியம், தர்கா, நேச்சை, ஓதுதல் ஏதுமில்லை. திருவனந்தபுரம் பீமா பள்ளி முதல் ஆத்தங்கரைப் பள்ளி வரை அவள் போகாத பள்ளிகள் இல்லை. குடும்பங்களில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளிலும் அவள் பங்கு எப்போதும் பிரதானமாக இருக்கும். ‘அண்ணனுக்க மொவன்’ என்று என்னை எல்லோரிடமும் ஆசையாக அறிமுகப்படுத்துவாள். சிறுவயதிலிருந்தே பழைய கதைகளின் பெட்டகமாக இருந்தாள். அவள் பாசமும் நினைவுகளும் ஒருபோதும் தப்பினதில்லை.
நான் சாயா குடித்து முடிக்கவும் காதர் மச்சான் குளித்துவிட்டு வந்தார்.
‘மச்சினா என்ன மெலிஞ்சு போயிட்ட விலாங்கடிக்கப் போவ வேண்டியதுதானா?’
‘எப்டி இருக்கியோ மச்சான் .’ நான் சேரில் இருந்து எழுந்து கேட்டேன்.
‘நல்லா இருக்கோம் மச்சினா எல்லாம் அவனுக்க பறக்கத். வா ஒனக்க அக்கா ஓட்டாடையும் ஆட்டெறச்சியும் வெச்சிரிக்கா. தின்னிட்டு ஒரு ஸ்தலம் வர போணும் அதுதான் விளிச்சேன்.’ நான் கேக்கும் முன்னே மச்சான் சொன்னார்.
♦♦♦
எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து காதர் மச்சனோடுதான் சுத்திக்கொண்டிருக்கிறேன். நடந்து, சைக்கிளில், பைக்கில், இப்போது காரில். சிறுவயது ஊர்சுற்றல் , சினிமா, ஆறு குளம் நீச்சல் எல்லாம் மச்சானோடுதான் கழிந்தது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் மச்சான் துபாயில். அதுவரை இங்கேதான் அத்தர் கடை வைத்திருந்தார். நல்ல திடகாத்திரமான உருவம். க்ரோக்கடைல் அல்லது லா கோஸ்ட் பிராண்டட் டி ஷர்ட். ஊரில் லுங்கி, வெளியே போக வேட்டி. எப்போதாவது இள நீலம் அல்லது வெள்ளை நிற மார்டின் சட்டை. கருத்த உடலும் அடர்ந்த தாடியும் மச்சானுக்குக் கூடுதல் கம்பீரம். எனக்கும் அவருக்கும் ஒரு எட்டு பத்து வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் இந்த வித்தியாசம் எங்களுக்குள் எந்தத் தடையையும் வைத்ததில்லை. வயதுக்கேயுரிய எல்லாச் சேட்டைகளையும் நாங்கள் இணைந்தே செய்திருக்கிறோம். கல்லூரிக் காலம் மட்டும் எனக்கு வெளியூரில் கழிந்தது . மச்சான் அபுக்கார்பிள்ளை ஆசானிடம் அடிமுறை, வைத்தியம் எல்லாம் பயின்றவர். இதுபோக நாடன் வித்தைகள் பலதும் அறிந்தவர். எல்லாம் ஆசியா மாமியின் வளர்ப்பு.
‘மச்சினா மூணுநாள் ஆச்சு போணும் போணும்னு இருந்து முடியல. இன்னைக்கு எப்படியும் பெயிரணும்னு நெனச்சேன். அதான் ஒன்ன வுளிச்சேன் உனக்குத் தெரியுமில்லா அப்போ கடையெல்லாம் யாவாரம் இல்லாம பொளிஞ்சு பொத்துக் கெடந்தது. அப்ப நீ திண்டுக்கல்ல படிச்சிட்டிருந்த. கடம் ஏறிட்டு. வாப்பாக்க பேர்ல ஒண்ணும் கெடயாது. சொலையாக்க கல்லியாணம் வேற நெருங்கி நிக்குது. எனக்கு நிவர்த்தி ஒண்ணும் இல்ல. உம்மா நெதமும் ராவுல இருந்து ராத்திரி ராமானம் வர பொலம்பித் தள்ளுவா. ரொம்ப நொடிஞ்சு கெடந்த சமயம். என்ன செய்யேதுக்குன்னு தெரியேல. இப்பளத்தப் போல போனு ஒண்ணும் கெடயாது. எனக்க கூட்டாளி கொளச்சக் காரன், நம்ம ஒரிக்கா போனமில்லா. மீன் பிரியாணி எல்லாம் வெச்சுத் தந்தானே கபூர். அவனாக்கும் ஒருநாளு என்னையத் தேடி வந்தான். அவனுக்க வாப்பா நம்ம ஆசானுக்க கூட்டுக்காரராக்கும். நான் இன்னா ஒன்ன விளிக்கேது மாரி மாப்பிள ஒரு எடம் வர வான்னு வுளிச்சிட்டுப் போனான். எனக்கு இஷ்டமேயில்ல. வுளிக்கானேன்னு போனேன். நம்ம வெளத்தமூடு தைக்காவுக்கு. உனக்குத் தெரியுமில்லா பாளையத்தில இருந்து ஒண்ணாம் தெரு போற முடுக்கில கோவி வூட்டுக்கு மேக்க ஒரு சின்ன தைக்கா. அதுக்க நேர மின்னே ஒரு புளியமரம். அங்கதான் புளிமூட்டு உப்பாயப் பாத்தேன். எங்க இருந்தாக்கும் வந்ததுன்னு தெரியாது. கேட்டியா நல்லா நீளக் கருத்த தாடி. எப்படியும் அம்பது வயசு இருக்கும். ஆனா என்னைக் காட்டியும் ஒரு அஞ்சு வயசுதான் மூப்புபோல உருவம். இடுப்புல ஒரு துண்டு. சட்டை கெடயாது . கையில ஒரு கம்பு. தலையில உருமா கெட்டு. மிண்டுகதும் பறயதும் கெடயாது. மொகத்தப் பாத்தா பச்சப் பிள்ள போல ஆனா அந்தக் கண்ணைப் பாக்க ஒக்காது மச்சினா அப்படி ஒரு கூரும. கபூரு மாடத்தில வெளக்குக் கொளுத்தி வெச்சான். பூ போட்டான். திரி கொளுத்தினான். நான் புளிமூட்டு உப்பாய பாத்துக்கிட்டேயிருந்தேன். எனக்குப் பாருவையை எடுக்க முடியேல. கபூரு கண்ணை மூடி யாசீன் ஓதிட்டிருந்தான். நேரம் போவுது நான் கண்ணடைக்காம உப்பாயப் பாக்கேன். உப்பா என்ன நெனச்சிதுன்னு தெரியேல. மேல வானத்தைப் பாத்து எதோ ஒதிச்சு. நேர எனக்கக் கிட்ட வந்து கையிலிருந்த நாரங்காயத் தந்திட்டுத் திரும்பிப் பாக்காமப் போயிட்டுது. சொன்னா நம்ப மாட்டாவோ. அடுத்த மூணாவது நாளு ஆசானுக்க தம்பிக்க மொவன் இஜாஸ் என்ன துபாய்க்குப் போறதுக்கு வுளிக்கான். கையில அஞ்சு பைசா கெடையாது. அடவு வெய்க்க உருப்படியளும் இல்ல. ஃப்ரீ விசா. டிக்கட்டு நானே போடுகேன்னு சொல்லான் இஜாஸ். என்ன நடந்திது எப்படி நடந்திது எப்படி துபாய் போனேன்னு தெரியாது. மார்கெட்டுல பழம் ஹோல்சேல் கம்பெனில ஜோலி. ஆறு மாசத்தில ரெண்டு மடங்கு சம்பளம். வருசத்துக்கு ரெண்டு மாசம் லீவு. ஒரு வருசத்தில கடம் தீந்து, அடுத்த வருசம் சொலையாவுக்கு நிக்கா எல்லாம் நடந்திது. நிக்காவுக்கு நீயும் உண்டுல்லியா. துபய் போய்ட்டு வந்து இறங்கின ஒடனே நேர புளிமூட்டுக்குத்தான் போனேன். உப்பா அங்க இல்ல. அங்கின உள்ள எல்லாருகிட்டயும் கேட்டேன். ஆருக்கும் தெரியேல. எங்க போய் தேடேது. புளிமூட்டுக்குக் கிட்ட அந்த உருவம் நிக்கேது போல இரிக்கி. எனக்கு ஒருமாரி தலை கெறங்குது. புளியமரத்துக்குக் கீழ அப்படியே தொப்படிக்க இருந்தேன். கரைச்சலா வருது. கண்ணீர் விட்டு அழுதிட்டேன் மச்சினா. யாரோ என்ன விட்டுட்டுப் போனதுபோல ஒரே மறுக்கமா போச்சு. அந்த லீவு பூரா நெதம் புளிமூட்டுக்குப் போவேன். உப்பாவக் காணல. ஒவ்வொரு லீவுக்கு வரும்பளும் புளிமூட்டுக்குப் போவேன்.
பொறவு இங்க சொலையாவ கெட்டிக்குடுத்த இடத்துக்குக் கிட்ட எடம் வேங்கி வீடு போட்டது. முர்ஷிய கெட்டினது எல்லாம் உனக்கும் தெரிஞ்ச கத. வீடு போடும்ப கூட புளிமூட்டு மண்ணு ஒருபிடி எடுத்துக் கொண்டு வந்தாக்கும் தொடங்கினேன்.’
மச்சான் நெகிழ்ந்து போயிருந்தார். வண்டி போய்க்கொண்டிருந்தது.
♦♦♦
அழகிய மண்டபத்திலிருந்து வண்டி வலது பக்கம் திரும்பியது. மச்சான் தீவிரமாக எதையோ யோசித்தபடி ஓட்டிக் கொண்டிருந்தார். இங்கு மேக்காமண்டபதில் கொடிமூட்டு தங்ஙள் தைக்கா ஒன்று இருக்கிறது. மச்சான் ஒருவேளை அங்குதான் அழைத்துப் போகிறாரோ. இந்த மாதிரி விஷயங்களுக்குப் போகும்போது அதை வெளியில் சொல்லக் கூடாது என்றொரு வழக்கம் உண்டு. ஜின்னுகளும் சைத்தான்களும் கேட்டுவிட்டுக் கூடவே வந்து போக விடாமல் தடுத்துவிடும். மச்சானும் அதுதான் சொல்லவில்லை. சிறு வயதில் ஆசியா மாமி கொடிமூட்டு அபூபக்கர் தங்ஙள் தர்காவின் கதை சொல்லித் தந்திருக்கிறாள். தங்ஙள் அவர்களின் சொந்த ஊர் தென்காசியாம். அந்தக் காலத்தில் ஊரெல்லாம் காலரா தீனம் வந்து மக்கள் கொத்துக் கொத்தாக மரித்துப் போனார்களாம். வீடுகளெல்லாம் ஊரெல்லாம் மையத்துகள். ஜனாசாக்களை அப்படியே போட்டுவிட்டு மக்கள் ஊரைக் காலி செய்து போய்விடும் அளவுக்கு இந்த நீக்கம்பு தீனம் கடும் ஆட்டம் ஆடியது. அபூபக்கர் தங்ஙள் குதிரையில் வந்து இறங்கி ஒரு கொடிமரத்தை நட்டு இங்கு வந்து அமர்ந்தார். காலரா ஊருக்குள் நுழைந்து வேலையைக் காட்டத் தொடங்கியது. அது ஒரு கார்த்திகை மாசம். தங்ஙள் குதிரையில் ஏறி நாலு முக்கு சாலையில் வாள் கொண்டு காலராவை அடித்து விரட்டினார். ஊர் நீக்கம்பு தீனத்திலிருந்து தப்பித்தது. பிறகு ஒருநாள் குதிரையைக் காணவில்லை. தங்ஙள் எங்கு போனார் என்று தெரியவில்லையாம். இப்போதும் கார்த்திகை மாசம் கடைசிப் பத்து நாட்கள் அவர் நினைவாகத் தொழுகை நடத்துகிறார்கள்.
வண்டி நினைத்ததுபோல கொடிமூட்டு தர்கா அருகே நின்றது. மச்சான் பரபரப்பாக இருந்தார். அவர் கண்கள் அலைபாய்ந்துகொண்டே இருந்தன. நானும் அவர் பின்னே இறங்கி என்ன செய்வதென அறியாமல் நின்றேன். உள்ளே மோதினாரிடம் ஏதோ கேட்டார். பிறகு வெளியே வந்தார். ஜங்க்ஷன் கடையில் திரியும் பழமும் பூவும் வாங்கிவிட்டு மீண்டும் அந்த வட்டவடிவத் தர்காவின் உள்ளே போய் நெடுநேரம் கண்மூடி அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் கறகறவென வழிந்துகொண்டேயிருந்தது.
‘நம்ம கொளச்ச கபூர் இந்த எடைக்கு வுளிச்சிருந்தான் மச்சினா. புளிமூட்டு உப்பாய இங்க தங்ஙள் தைக்காவுல ஆரோ பாத்தாவோண்ணு. எனக்கு இருப்பு கொள்ளேல. லீவு கிட்டினதும் ஓடி வரணும்னு நெனச்சேன். உப்பா எங்க போச்சிதுன்னு தெரியேல. கண்மறைவா இரிக்கட்டும். ஆனா எப்படியும் எனக்குக் காணிச்சு குடுக்கும் மச்சினா. எனக்கு எல்லா ஒலி, ரலி மாருவளுக்க தொண உண்டும். யா அல்லாஹ் ரப்பில் ஆலமின்.
மச்சானின் கண்கள் சிவந்திருந்தன.
♦♦♦
‘மோனே ஒனக்க காதர் மச்சான் வந்திரிக்கீ. பாக்கப் போவேலியா ?’உறக்கப்பாயில் கிடந்த நான் உம்மாவின் சத்தத்தில் விழித்தேன். அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா. கடந்த லீவுக்கு காதர் மச்சான் வந்திருந்தபோது வாங்கித் தந்திருந்த நோக்கியா 3310 போன் என் அருகில் கிடந்தது. கடந்த வருடங்களாக எப்போதும் ஒவ்வொரு முறையும் இரண்டு மாத லீவில் மச்சான் வந்ததிலிருந்து போவதுவரை நான்தான் மச்சானுக்குத் துணை. அவ்வப்போது அழைத்து நல்லது கெட்டதுகளை விசாரித்துக் கொள்வார்.
மச்சான் ஏன் வருவதற்கு முன்னோ வந்தபின்னோ அழைக்கவில்லை. வருத்தமாக இருந்தது. பயணக் களைப்பில் இருப்பார் சாயந்தரமாகப் போகலாம். ஆனாலும் இனம்புரியாத சோர்வு தட்டியது.
வரும் ஞாயிறு காட்டுவா பள்ளிக்குப் போய் சமைத்துச் சாப்பிட்டு வர நண்பர்கள் குழு முடிவு செய்திருந்தார்கள். காதர் மச்சானையும் கூட்டிப் போக வேண்டும். பள்ளிப்பிராயத்தில் நானும் மச்சானும் அவருடைய நண்பர்கள் சிலரும் போயிருக்கிறோம். அப்போதெல்லாம் எங்கோ வெகு தொலைவில் இருப்பதுபோலத் தோன்றும். காலம் போகப் போக தூரங்கள் குறைந்துவிடுகின்றன.
காட்டுவா பள்ளி வேளிமலை அடிவாரத்தில் இருக்கும் குன்றின் மேல் உள்ள பள்ளி. காட்டுபாபா பகர்தீன் சாய்பு ஒலியுல்லாஹ் அவர்களின் தர்ஹா. ஆசியா மாமிதான் காட்டுவா அப்பாவின் கதையையும் சொல்லித் தந்திருந்தாள். ஒருமுறை ஐந்து கள்வர்கள் ஐந்து பெண்களைத் துரத்திக் கொண்டு இந்தக் குன்றில் வந்திருக்கிறார்களாம். எதிரில் வந்த காட்டுபாபாவிடம் பெண்கள் அடைக்கலம் கோர அவர் அது தொழுகை நேரம் ஆதலால் அந்தப் பெண்களைத் தொழுகையில் அமரச் சொல்லியிருக்கிறார். கள்வர்கள் பெண்கள் மீது அம்பு எய்திருக்கிறார்கள். அம்பு எய்தவுடன் எய்த கள்வனின் கண் பறிபோயிருக்கிறது. தொழுகை முடிந்து பாபா அம்பைப் பிடுங்க கண்பார்வை திரும்பியிருக்கிறது . பாபா அவர்களின் பாதுகாப்பிலேயே பெண்களைக் கூட்டிப்போகச் சொல்லிவிட்டுக் கண் பார்வை திரும்பியவனிடம் கீழே ஆட்களிடம் போய் இங்கொரு சடலம் கிடக்கிறது என்று சொல் என்றிருக்கிறார்கள். மக்கள் வந்து பார்க்க அவருடைய தலைப்பாகையும், மிதியடியும் கோலும் மட்டும் இருந்திருக்கிறது. அவரைக் காணவில்லையாம். காட்டுபாவா ஒலியுல்லாவின் தர்காவும் பக்கத்திலேயே சமையல் செய்து ஓய்வெடுக்கும் அரங்கும் அமைந்திருந்தார்கள். முன்பு கல் கட்டிடமாக இருந்தது. பிறகு கான்க்ரீட் கட்டடமாகியிருக்கிறது. மலையருவியின் நீரோடை ஒன்று வற்றாமல் எப்போதும் அருகில் ஓடிக்கொண்டேயிருக்கும். குளிக்கவும் சமைப்பதற்கான நீருக்கும் குறைவில்லை. படர்ந்த ஆலமரம் ஒன்று. அந்தத் தர்காவின் வேண்டுதல் மரபுப்படிக் கீழே குன்றில் ஏறுவதற்கு முன் கையில் ஒரு கல்லை நேர்ந்தபடி எடுத்து வர வேண்டும். மேலே வந்ததும் ஆலமர மூட்டில் அதைப் போட்டுவிட வேண்டும். நேர்ச்சை நிறைவேறும் என்பது நம்பிக்கை. மலையின் அழகும் அந்தப் பசுமையும் சுனையின் குளுமையும் ஒவ்வொரு முறையும் மனத்தையும் உடலையும் புத்தம்புதிதாய் ஆக்கிவிடும். நண்பர்களுக்கு காதர் மச்சானைத் தெரியும். அவரும் எல்லோரோடும் கலந்துவிடுவார். ஞாயிறு காட்டுவா பள்ளிக்குக் கட்டாயம் மச்சானைகே கூட்டி வர வேண்டும்.
மதியம் சொலையா மைனியின் மூத்த மகன் ரியாஸ் வந்து ‘‘குட்டியாப்பா மாமா வுளிக்காங்கோ வரணுமாம்,’’ என்றான்.
‘நீ போ நான் வார்றம் மோனே ‘
மச்சானுக்கு என்ன ஆச்சு. போன் வுளிச்சா போதுமே. என்றபடியே போனைப் பார்த்தேன், நோக்கியா சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆயிருந்தது. பேட்டரி மாற்ற வேண்டியதுதான். உம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
♦♦♦
மனசுக்குள் எதோ சலனம். எதிர்பார்த்ததைப் போலவே மச்சான் சோர்ந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
மச்சினா எப்டி இரிக்கா? வேல ரெடி ஆயிருச்சா? மாமி என்ன செய்யா? விசாரணைகளுக்குப் பிறகு வழக்கம் போல முர்ஷிதா அக்கா சாயா கொண்டு வைத்தாள். அவள் முகத்திலும் சுரத்தில்லை. சாயா குடிப்பதுவரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்த மச்சான் முடியாமல் கட்டிலில் படுத்துவிட்டார்.
கிட்னி ஸ்டோன் மச்சினா. ஒரு ஆறு மாசமாட்டு இரிக்கி. ஒரு வாரமா பயங்கர நொம்பலம். கழியல்ல. அங்க உள்ள ஆசுபத்திரில எக்ஸ் ரே எடுத்துப் பாத்தாச்சு. மாத்திரையிலே கரையேது மாரி இல்ல. அங்க பாக்கலாம்னா கூடயிருந்து வெச்சுப் பாக்க ஆளில்ல. கூட வேல பாக்க தொடுவேட்டிலேருந்து ஒருத்தன் ஊருக்குப் போணும்னு இருந்தான். பைய்ய டிக்கட்டு போடச் சொன்னேன். கூட வந்து விட்டிட்டுப் போனான். வலி கூடுதலாட்டு இரிக்கி மச்சினா. அடுத்த வாரம் திங்களாச்ச திருவனந்தபுரத்துக்கு ஆசுபத்திரிக்கி போணும்னு இரிக்கோம். மச்சானைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஆறுதல் வார்த்தைகளுக்கு எந்தப் பயனுமில்லை. கல்லுருக்கி பச்சிலை. கை வைத்தியம் எல்லாம் மச்சானுக்குத் தெரியாதது இல்லை. ஆசுபத்திரிக்கிப் போவதற்கு மச்சானே தயார் என்றால் வலி கடூரம் என்று அர்த்தம். மச்சானின் பலத்தை லாவகத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். சட்டெனச் சோர்ந்து உட்காரும் ஆள் இல்லை அவர். விலாங்கு பிடிக்கப் போகும்போது எறி சூண்டையைப் போட்டுவிட்டு ராத்திரி முழுக்க நின்றுகொண்டே இருப்பார். ஒரு சலனமிருக்காது. ஊரில் மௌத்துகளின்போது லீவுக்கு வந்திருந்தால் அசராமல் ஒற்றை ஆளாய்க் குழி தோண்டுவார். மரம் வெட்டு, கல் உடைப்பு, விறகு வெட்டு, தேங்காய் பறிப்பு எல்லாவற்றிலும் மச்சான் முதல் ஆள். உண்மையில் அவரைப் படுக்கையில் பார்க்கச் சகிக்கவில்லை.
♦♦♦
மச்சானிடம் ஞாயிறாச்ச காட்டுபாவா பள்ளிக்குப் போவதைச் சொல்லவில்லை. காலையிலேயே சுபேர் வண்டியோடு வந்துவிட்டான். மொத்தம் பத்துப் பேர் ஐந்து வண்டிகள். நான் கொஞ்சம் சோர்வாகவே கிளம்பினேன். மக்கள் உற்சாகமாகக் கத்திக்கொண்டே வண்டியில் முந்துவதும் வேகமெடுப்பதுமாக அரைமணி நேரத்தில் அடிவாரத்துக்கு வந்துவிட்டோம். சமையல் பொருட்கள், சமையல் தளவாடங்கள் எல்லாம் மாற்றி மாற்றிச் சுமந்து கொண்டோம். முன்பு ஒற்றையடிப் பாதைதான். இடுப்பளவு பூஞ்சட்டை, தருவைப்புல், நாணல், கோரைப்புல் என வளர்ந்திருக்கும். சில நேரம் நீரோடை வழியாக நனைந்துகொண்டே மேலே ஏறுவதும் உண்டு மலை ஏறத்தொடங்குகையில் நான் எதோ நினைவு வந்தவனாகக் குனிந்து மச்சானை நினைத்துக்கொண்டே கையடக்கக் கல் ஒன்றை எடுத்துக் கொண்டேன். நோயிலிருந்து மச்சானை மீட்டெடு இறைவா மனம் வேண்டத் தொடங்கியது. அல்லாஹூத்தாலாவின் திருநாமத்தால் காட்டுவா ஒலியுல்லாஹின் புகழால் பாத்திஹா ஓதி சபுஹாய் துவா செய்கிறேன். தகாத்தனை சதிமான மறையரு ஓதாய் உமது பறக்கத்தால் தொடங்குகிறேன்.
கல் கைகளுக்குள் புதைந்து இருந்தது. மனம் எல்லாம் கல்லிலிருந்தது. மச்சானின் உடல் முழுக்க மனத்தால் நீவி விட்டேன். அல்லாஹ்! படைத்தவனே! இந்த நல்ல மனிதரின் வலியை நீக்குவாயாக! அவரது சிறுமைகளைப் பொறுத்து அவருக்கு சுகம் கொடுப்பாயாக! நண்பர்கள் கேலியும் கிண்டலுமாய் மலையேறிக் கொண்டிருந்தார்கள். வழியில் இருந்த வெள்ளைக்கார சாமியாரின் ஆஸ்ரமம் பற்றிக் கதை ஓடிக்கொண்டிருந்தது. மழைக்காலம் தொடங்கியிருந்ததால் இடையிடையே கருமேகங்கள் திரள்வதும் கலைவதுமாக மேலேறும் களைப்புத் தெரியவில்லை. சிறு குன்று. ஐந்தாறு வளைவுகள் அவ்வளவுதான். இதமான குளிர் காற்று. மழை மணம். பாதி ஏறியதும் அடத்தி கூடிய உயரமான மரங்கள் தென்பட ஆரம்பித்தன. பள்ளத்தாக்கின் அந்தப்புறம் தூரத்தில் வேளிமலையின் நீல அழகு. எத்தனை பேர் நம்பிக்கைகளோடு இந்தப் பாதையில் நடந்திருப்பார்கள். எத்தனை பேர் பிரார்த்தனைகளை இந்தக் காற்று கேட்டிருக்கும். மேலே ஏற ஏற நண்பர்களுக்குக் களைப்பையும் மீறி உற்சாகம் தொற்றிக் கொண்டது. அது மலைகளின் தன்மை. உயரமான பிரதேசங்களின் தன்மை. உடல் உயரத்துக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வித்தை.
எல்லோரும் சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்க நான் கையில கொண்டுவந்திருந்த கல்லைப் பார்த்தேன். ஒருபுறம் மஞ்சள் நிறம். மறுபுறம் கறுப்பு நிறம். நல்ல வழுவழுப்பான கூழாங்கல். நீர் அரித்து அரித்து ஏற்பட்ட நீர் ரேகைகள். கொஞ்ச நேரம் உள்ளங்கையில் வைத்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு மெல்ல எழுந்து ஆலமர மூட்டில் குவியலாய்க் கிடந்த கற்களுக்கு நடுவே மீண்டும் பிரார்த்தித்துக்கொண்டே அதை மிக மெதுவாய் வைத்தேன்.
நண்பர்கள் நீரோடையில் குளியலை ஆரம்பித்திருந்தார்கள், நானும் சேர்ந்துகொண்டேன். அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. ஒருபக்கம் சமையல் நடந்துகொண்டிருந்தது. குளித்து முடித்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. நெடுநாட்களுக்குப் பிறகு இயற்கையோடு இணைந்த குளியலும் சாப்பாடும். சுத்தமான மலைக்காற்று. நுரையீரல் விரிந்து உள்வாங்கிக் கொண்டது. சாப்பிட்டு முடித்ததும் கண்களைக் கிறக்கியது. மண்டபத்தில் சுகமான உறக்கம். வழமையின் சோர்விலிருந்து உடலும் மனமும் விடுபட்டு ஆழ்ந்த உறக்கம்.
முதலில் நான்தான் கண்விழித்தேன். மீதமிருந்த சாப்பாட்டை ஓரமாகக் கொட்டிவிட்டுச் சமையல் பாத்திரங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில் நண்பர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள். புதிய பேட்டரி மாற்றியிருந்த நோக்கியா இடையிடையே கம்பெனி மேசேஜ்களைப் பெற்று உர் உர் என்று சொல்லிக்கொண்டிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒருவழியாகத் தயாராகி சமையல் பாத்திரங்களை யார் யார் தூக்குவது என்கிற வழக்கமான சர்ச்சைகள் முடிந்து கிளம்ப ஆரம்பித்தார்கள்.
எல்லோரும் ஒவ்வொருவராய் நடக்கத் தொடங்க நான் மேலே படியேறி காட்டுபாவா பள்ளிக்கு உள்ளே போய் மச்சானுக்காக துவா செய்தேன். இங்கு எந்த இடத்தில காட்டுபாபாவின் கோலும் மிதியடியும் தலைப்பாகையும் கிடைத்திருக்கும். அவர் எங்கே போயிருப்பார். படியிறங்கி வருகையில் கொடிமூட்டுத் தங்ஙளையும் நினைத்துக் கொண்டே வந்தேன். பாபாவின் பள்ளி சற்று மேடான இடம் அங்கிருந்து கீழே முதல் வளைவில் நண்பர்கள் ஒவ்வொருவராய் நடந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. ஓய் எனக் கத்தலாமென்று கையைக் குவித்தேன். நண்பர்களுக்கு முன்னே தூரத்தில் மூன்றாவது வளைவில் ஒருவர் தலையில் உருமா கட்டு, கையில் ஒரு கோல், சட்டையில்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார். எனக்குக் கையும் காலும் ஓடவில்லை. ஒரு முழு நிமிடம் அங்கேயே படிக்கட்டில் அமர்ந்தேன். சட்டென நினைவு திரும்பி ஓடினேன். நண்பர்கள் முன்னே போயிருந்தார்கள். முதல் வளைவு, ரெண்டாம் வளைவு, மூன்றாம் வளைவு. நான் தலைதெறிக்க ஓடி வந்திருந்தேன் மூச்சு வாங்கியது. உத்தேசமாக மேலிருந்து நான் பார்த்த இடத்தின் அருகில் நின்றிருந்தேன். முட்டியில் கைவைத்து மூச்சு வாங்கிக் கொண்டே என் முன்னே சற்றுத் தூரத்தில் தரையில் பார்த்தேன். கையளவு அடக்கமுள்ள ஒரு கல். அருகில் போய்க் கையிலெடுத்தேன். நல்ல வழுவழுப்பான கல். ஒரு பக்கம் மஞ்சள் நிறம். மறுபக்கம் கறுப்பு நிறம். சிலீரென நெஞ்சில் ஓர் அதிர்வு . நோக்கியா அதிர்ந்தது.
‘மச்சினா ‘காதர் மச்சானின் குரல் உற்சாகமாய்க் கேட்டது.

பின் தலித் கோட்பாட்டின் மூல முன்மாதிரியாகத் திகழ்பவர் எஸ்.ஜே.சிவசங்கர். படைப்புக்கும் கோட்பாட்டுக்குமான உறவு சன்னமாக மாறிவரும் சூழலில் இரண்டையும் இணைக்கும் இணை கோடாய் இயங்கி வருபவர். கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், சத்தம் அவளை வஞ்சிக்கவில்லை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும், கறுப்பர்களின் காலம், அம்பேத்கர் கடிதங்கள், பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் போன்ற மொழியாக்கங்களையும் எழுதியுள்ளார். மாய யதார்த்தம், கற்பனவாதம், பின் தலித்யம் உட்பட பல கோட்பாட்டுத் தளங்களைப் புனைவாக்கும் பரிட்சார்த்தங்களைச் செய்து பார்ப்பவர். குமரி மாவட்டப் பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
Leave a Reply