மூன்றாம் நபர்
“நல்லவேளை இங்கு பணியில் சேர்ந்தீர்கள். நீங்கள் வரும் முன்புவரை இந்த பணியை விட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு யாருடனும் ஒத்துப் போவதில்லை. என்னைக் கண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. தலையைக் குனிந்துக்கொண்டு ஒதுங்கி செல்கிறார்கள். நான் அவர்களிடம் சிரித்துவிடுவேனோ, பேசிவிடுவேனோ என்று பயப்படுகிறார்கள்.” தினம் ஒருதடவையாவது இதை அவர் என்னிடம் சொல்வதுண்டு.
அன்று நாங்கள் மதிய உணவிற்குப் பின் புகைப் பிடிப்பதற்காக எங்கள் அலுவலகத்தின் அருகே இருந்த பெட்டிக்கடைக்கு சென்றோம். வழமைப்போல் சிகரெட்டைத் தந்துவிட்டு மீசைக்கார பெட்டிக்கடை தாத்தா மறைந்துப் போனார். கடையும் மறைந்தது. வாகனங்களில் சென்றவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள். நாங்கள் இருவர் மட்டும் தனியாக பேசிக்கொண்டிருந்தோம். அவர் சொல்வது அனைத்திற்கும் ‘ஆமா, சரிதான் , உண்மை’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் எப்போதும்போல் சக ஊழியர்களை வசைப்பாடிக் கொண்டிருந்தவர் புகையை ஊதிவிட்டு “உங்கள் வருகை தான் பணியைத் தொடர வைக்கிறது” என்று மீண்டும் தொடர்ந்தார்.
“நான் அவர்கள் மீது அக்கறை படுகிறேன், நல்லது நினைக்கிறேன். உரிமையோடு பேசுகிறேன். அவர்களும் என்னோடு என்னைப் போல் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதில் என்ன தவறு?” நான் தலையை ஆட்டிக்கொண்டேன். அவர் பேசிக்கொண்டே இருந்தார். இப்போது எங்களருகே மூன்றாவது நபர் ஒருவர் இருப்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு உலகியலில் மையம் கொண்டு உணர்ச்சிகளுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார்.
மூன்றாவது நபரின் பெயர் காலம். அது எங்களைப் பார்த்து புன்னகைத்தது. பதற்றமடைந்தேன். நான் மட்டும் அறிந்த ஒன்றை இன்னொருவர் அறிவதால் உருவாகும் பதற்றம். நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருப்பதாய் நினைத்து அவர் அவரிடமே பேசுவது காலத்திற்கு தெரிந்துவிட்டதை உணர்ந்து, சிகரெட்டை காலில் அணைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இப்போது அவர் பேசுவது எதுவும் என் காதில் விழவில்லை.
வாடை
தேநீர் கடை சுடுநீரில் கொதிக்கும் தேயிலை வாசனை மிக பிடித்த ஒன்று. டீயை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது நீண்டநாட்கள் கழித்து பழைய நண்பன் ஒருவனை சந்தித்தேன். பேசி பல வருடங்கள் ஆயிருப்பினும் விட்ட இடத்திலேயே தொடர்ந்தோம். பேசிக் கொண்டிருக்கும்போது வாழ்க்கை சலிப்பாக போய்க்கொண்டிருக்கிறது, இங்கு இருக்கும் ஏதாவது ஒரு மனிதனிடம் வம்பிற்கு இழுத்து வன்முறையை நிகழ்த்த வேண்டும் போல் இருப்பதாக சொன்னான். வன்முறை இல்லா வாழ்வு அவனுக்கு குற்ற உணர்வை வரவழைத்திருந்தது.
தேநீரை குடித்துவிட்டு கிளம்பத் தயாரானோம். அந்நேரம் நாட்டில் போர் வரவிருப்பதாக தொலைக்காட்சியில் பெண் செய்தி வாசிப்பாளர் சொன்னதும், நண்பன் உட்பட அனைவரும் மாயமாக மறைந்து போனார்கள். சிறிது நேரம் கழித்து இரு பெண்கள் தேநீர் கடையை கடக்கும்போது மூக்கை மூடிக்கொண்டு குமட்டியபடி விரைந்து சென்றார்கள். அப்போது அவர்கள் குசுகுசுவென்று பேசுவது காதில் விழுந்தது. “உவ்வே.. பழைய விந்துவின் துர்நாற்றம்”.
சிரிப்பு
அவள் திருமணத்திற்கு முந்தின நாள் இரவு எங்கள் கடைசி சந்திப்பு நடந்தது. பிரிந்து செல்லும்போது கூட அந்த இருட்டிலும் அவள் சிரித்தது தெரிந்தது. வீட்டில் பார்த்த சொந்தக்காரப் பையனை திருமணம் செய்துக்கொண்டாள்.
அவளுக்கு சிரித்த முகம். சும்மா இருந்தாலும் சிரிப்பது போலிருக்கும். இப்போதெல்லாம் முகம் சுளித்துக்கொண்டு இருப்பதாக எங்கள் இருவருக்குமான தோழி சொன்னாள். கணவன் நெருங்கி வரும்போது முகம் இன்னும் அதிகமாக கோணுகிறது என்று தாம்பத்ய பிரச்சனை வேறு வெடித்துள்ளது. சொந்தங்கள் பேசி பார்த்தும், மருத்துவர்கள் சோதித்தும் முகம் சதாகலாமும் சுளித்துக் கொண்டே இருந்துள்ளது.
என்ன தான் பிரச்சனை என்று ஒருநாள் நேரடியாக சந்தித்தேன். நீண்ட நேரம் மௌனமாக இருந்தவள் தன்னுடைய பர்சை எடுத்து நீட்டிப் பார்க்க சொன்னாள். திறந்துப் பார்த்தால் இடப்பக்கம் தந்தை, அண்ணன் புகைப்படங்களும் வலப்பக்கம் கணவன் புகைப்படமும் இருந்தது. நான் கண்களை சிமிட்டிக்கொண்டு வலதை பார்க்கவா இடதை பார்க்கவா என்று சற்று தடுமாறினேன். அப்புறம் தான் புரிந்தது. இனி ஒருபோதும் அவள் சிரிக்கவே முடியாது என்று.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகம் மற்றும் சினிமா துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
Leave a Reply