விடுதி அறையில் என்னோடு இருந்த தோழி ஒருத்தி ஜானு. அதிகம் பேசியதில்லை. எப்போதாவது பார்த்தால் சிரிப்பாள். பதிலுக்கு நானும் சிரிப்பேன்.
ஜானுவைக் குறித்துக் கூறவேண்டும் என்றால் அறையில் இருந்த இரண்டு ஒல்லியான பெண்களில் அவளும் ஒருத்தி. இன்னொருத்தி நான். கருமை கரந்த வெளிர் நிறம் அவள். உடலைக் காட்டிலும் ஒல்லியான முகம். சிறிய கண்கள். மிகச் சாதுவான பூனை ஒன்றின் தோற்றம் அவளுடையது. தேர்ந்தெடுத்த ஒரு சிலரோடு மட்டும் பழகும் ஜானு அதிகம் பேசாத பெண். எப்போதேனும் எதாவது கேட்டால் கேட்பவருக்குப் பதிலுரைப்பாள் அவ்வளவே. அறையில் அவளது நடவடிக்கைகளை வைத்து அவள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் பெண் என்று நாங்களாகவே யூகித்து வைத்திருந்தோம்.
ஒருநாள் இரவு உணவு வேளையில் ஜானு என்னருகில் வந்து அமர்ந்தாள். புதிதாக இருந்தது. அதுவரை அவள் அப்படி என்னோடோ வேறு யாருடனோ அமர்ந்ததில்லை என்றாலும் எதையோ பேச எத்தனிப்பதாக எனக்குத் தோன்றியது. அருகில் அமர்ந்தவள் தொடர்ந்தாள்.
கீதா.
ம்ம்.
“ஒன்னு கேட்பேன். தப்பா எடுத்துப்பியானு தெரியல.”
அவள் குரலில் ஒரு தயக்கம் தெரிந்தது.
கேளு. பரவால.
“இல்ல.. வந்து..” தயக்கத்தோடு இழுத்தாள்.
“உன்ட போட்டுக்க எதாவது நல்ல ட்ரெஸ் இருக்குமா? எங்கிட்ட எல்லாம் பழசானதா இருக்கு.”
ஒரு நிமிடம் நிதானமாகக் கேட்டேன்.
“ட்ரஸ்ஸா?”
ம்ம்
இதை.. ஏன் இவள் என்னிடம் கேட்க வேண்டும் என்று யோசித்தேன்.
ஒன்று என் ஆடை மட்டும்தான் அவளுக்குச் சரியாக இருக்கும். அடுத்து அந்த மாதம் வாங்கியிருந்த சம்பளத்தில் வீட்டிற்கு அனுப்பியது போக முதல்முறை புதிதாக இரண்டு ஆடைகள் வாங்கியிருந்தேன். நீல வண்ணம் ஒன்று. சந்தன நிறத்தில் ஒன்று. நீல நிற ஆடையை ஓரிரு முறை கல்லூரிக்கு உடுத்திச் சென்றிருந்தேன். சந்தன நிற ஆடை அதுவரை உடுத்தப்படாமல் அப்படியே இருந்தது. இது அறையில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
இதுவரை பார்த்தால் ஒரு சிரிப்பைத் தவிர்த்து எதையுமே வெளிபடுத்தாத ஜானு என்னிடம் மட்டுமல்ல நான் பார்த்து அந்த அறையில் கேட்கும் முதல் உதவி அதுதான். அதுமட்டுமின்றி ஆடையை வைத்துக்கொண்டு இல்லை என்று கூற மனம் வரவில்லை. அதனால்”சரி” என்று தலையசைத்தேன்.
மறுநாள் காலை எழுந்ததும் சந்தன ஆடையை அவளிடம் நீட்டினேன்.
உடுத்தினாள்.
அழகாக இருந்தது.
“நல்லாருக்கில்ல” என்றாள் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு. அவ்வளவு பூரிப்போடு நான் அவளை அப்போதுதான் பார்த்தேன்.
“ஆமாம் நல்லாருக்கு”.
“எனக்காகவே தெச்ச மாதிரி இருக்கு”. சிறுபிள்ளையைப் போல தன்னால் முடிந்தவரைத் தன்னையே சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டாள்.
“ஆமா. உனக்காகவே தெச்ச மாதிரிதான் இருக்கு”.
ஜானு சேர்ந்தது போல சில வார்த்தைகள் பேசுவதை இன்றுதான் கேட்கிறேன். அதனாலோ என்னவோ அவள் கூறுவதையே கிளிப்பிள்ளை போலத் திரும்ப ஒருமுறை கூறிக் கொண்டிருந்தேன்.
தாங்ஸ் கீதா. அழகான ட்ரெஸ்ஸ கொடுத்துருக்க.
இசைவாகத் தலையசைத்தேன்.
….
அன்று இரவு மணி எட்டைக் கடந்திருந்தது. அப்போதுதான் உணவு முடித்து அறையின் வெளிப்புறம் இருந்த கல் இருக்கையில் வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும் திடீரென என் முன் தோன்றினாள் ஜானு. வந்ததும் உன்னைத்தான் தேடினேன் என்றாள். ஓ.. ஏன்?
அவள் நடையும் பாவனையும் அதுவரைப் பார்த்திராத பாங்கில் அமைந்திருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஒருவேளை நான் அப்படி கற்பனை செய்துகொண்டேனோ என்னவோ. எதுவாக இருந்தாலும் அந்த ஆடை அவளுக்கு அத்தனை நேர்த்தியாக இருந்தது. அவள் புதியவளாகத் தோன்றினாள். மனிதன் ஒவ்வொரு புதிய உடைக்கும் புதிய மனிதனாக மாறிப் போவது விந்தையாகத்தான் தோன்றியது.
என்ன?. போன வேலை என்னாச்சு? என்றேன். நான் என்ன கேட்டேன் என்பதையே அவள் கவனிக்கவில்லை.
“ஏய் கீதா. இந்த ட்ரெஸ் எவ்ளோ டி? என்ன ஒரு 1000 இருக்குமா?” என்றாள்.
முதலில் விசித்திரமான கேள்வியாகத் தோன்றியது. “ஏன் கேக்குற?” என்றேன்.
சொல்லு சும்மா. எவ்ளோ இருக்கும்.
தையல் காசோட 500 ஆச்சு.
பின் ஆகாயத்தைப் பார்த்தாள். யாரோ அழைப்பதுபோல வாயிலை ஒரு முறைப் பார்த்தாள். பிறகு மீண்டும் என்னைப் பார்த்தாள். வினாக்குறிக்கும் தொனியில் நான் அவளைப் பார்த்தேன்.
“இன்னைக்கு என் மாமா வந்தாங்க.” சற்று வெட்கம் கலந்த தொனியில் கூறினாள்.
“ஓ.. சரி.. நீ எதாவது இன்டர்வியூ போவியோனு யோசிச்சேன்.”
நான் சொல்வதை அவள் பொருட்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை அவள் கூற வருவதை இன்னும் முடிக்கவில்லை போல என்றும் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் மிதமிஞ்சிய சந்தோசத்திலும் அளவிற்கு அதிகமான துக்கத்திலும் இருக்கும் மனிதர்கள் தன் முன்னிருக்கும் யாரோட வார்த்தைக்குச் செவி கொடுப்பதே இல்லை.
“இன்னைக்கு மட்டும் இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குனு ஒரு பத்து முறையாவது சொல்லிருப்பாங்க. அது மட்டுமில்ல. கடைசியா கெளம்பும்போது கூட இந்த நிலா வெளிச்சத்துல நீ எவ்ளோ அழகா இருக்கனு ரசிச்சுச் சொன்னாங்க தெரியுமா?” என்று புதிதாக என் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிச் சிரித்தாள். இதையெல்லாம் கூறும்போது அவள் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவளை இன்னும் அழகாகக் காட்டியது.
“ம் சரி. அப்புறம்” என்றேன்.
“சின்ன வயசுல இருந்தே அவர எனக்குப் பிடிக்கும். ஆனா அத நான் அவருகிட்ட சொன்னதில்லை. இன்னைக்கு அவரே சொல்லும்போது, சந்தோசத்துல எனக்கு என்ன சொல்றதுனே புரியல. எல்லாம் இந்த ட்ரெஸ்ஸோட லக் டி. அவர் என்ன சும்மாதான் பார்க்க வந்தாரு போல. இந்த ட்ரெஸ்ஸாலதான் ஒரு நாள் முழுக்க எங்கூடவே இருந்துருக்காரு. இந்த ட்ரெஸ் எனக்கு அவ்ளோ அழகா இருந்துருக்கு..”
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தவளை ஏதோ ஒரு தேவதைக் கதையை நாடகமாகப் பார்ப்பதைப் போல பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
“என்ன.. சும்மா பாத்துட்டே இருக்க. எதாவது சொல்லு” என்றாள்.
“நடக்கனும்னு இருக்குறது கண்டிப்பா நடக்கும். ட்ரெஸ், கம்மல், நோட், புக்னு பொருள் எதுவும் அதுக்குக் காரணமாகாது. உனக்குத் தோணின மாதிரி அவருக்கும் தோணிருக்கலாம்ல நேரம் பாத்து இன்னைக்குச் சொல்லிருக்காரு.”
“அப்புறம் அவர பாக்க நீ எந்த ட்ரெஸ் போட்டுப் போயிருந்தாலும் அழகா தான் தெரிஞ்சிருப்ப. ஏன்னா நீ அழகுதான். அது மட்டுமில்ல.. உனக்குப் பிடிச்ச ஒருத்தரப் பாக்கப் போகும்போது இயல்பாவே ஒரு வித அன்பு உன்ன இன்னும் அழகா நிக்க வச்சிரும்..”
நான் சொல்வதைக் கேட்டதும் சத்தமாகச் சிரித்தாள்.
“அப்பப்பா.. இப்படிலாம் பேச எந்த புக்க படிக்கனும்.. சரி விடு. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எந்த அளவுக்குன்னா சொல்ல முடியாத அளவுக்கு. இன்னைக்கு நாள் ஏன் இவ்ளோ சீக்கிரம் ஓடுது கீதா. பகல் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துருக்கலாம்.” ஜானு பேசிக்கொண்டே இருந்தாள். அது பார்க்கப் புதிதாகவும் நன்றாகவும் இருந்தது. காதல் இப்படிதான் முற்றிய பித்து நிலையில் தள்ளிவிட்டு விழுந்து புரளும் மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கும் போல என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். அன்று இரவு எப்படியோ ஓடியொழிந்தது. அடுத்தநாள் ஜானு என் ஆடையை நன்றாகத் துவைத்துக் காயவைத்து மடித்து என்னிடம் நீட்டினாள். பழைய புன்னகை மீண்டும் உயிர் பெற்றிருந்தது அவளிடம். தாங்ஸ் டி என்றாள். நான் தலையசைத்தேன். அதன் பிறகு ஜானுவும் நானும் இரண்டு முறைகள் ஒன்றாக அமர்ந்து பேசியிருந்தோம்.
காலம் தாழ்ந்து பிறந்த குழந்தை ஜானு. முதல் பட்டதாரிப் பெண். வயதான தாய் தந்தையைப் படிப்பு முடித்து வேலைக்குச் சென்று நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் ஜானுவின் பெரிய கனவு என்று கூறியிருந்தாள். அந்தப் பருவத்திற்கான தேர்வு முடிந்தது. விடுமுறையில் மாணவிகள் ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்றனர். அந்த மாதப் பணி காரணமாக ஒருவாரம் நான் விடுதியிலேயே தங்கியிருக்க நேர்ந்தது.
“முதல்முறையாக அந்தச் சந்தன நிற ஆடையை உடுத்திக்கொண்டு அலுவலகம் வந்திருந்தேன். பார்க்க அழகாகத்தான் தோன்றியது. நானே எனக்கு மிகநேர்த்தியாக இருப்பதுபோல ஒரு தோற்றம். குறிப்பாக குங்கும நிறத் துப்பட்டா ஒரு புதிய உணர்வை வழங்கியது. நானும் இன்று புதிய மனிதிதான் என்று நானே கூறிக் கொண்டேன். அன்று ஒருநாள் எல்லோரும் என்னை மட்டுமே பார்ப்பதாக உணர்ந்தேன். பேருந்தில் சன்னல் காற்றில் ஆடும் துப்பட்டா புதிதாய் முளைத்த இறகு போல தோன்றியது. அன்றிலிருந்து என்னிடமிருக்கும் மிக அழகான நேர்த்தியான ஆடையாக அந்தச் சந்தன நிற ஆடை மாறியிருந்தது.
அப்படியே விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்திருந்தன. ஒரு நாள் காலை எழுந்தபோது ஜானு போல் யாரோ ஒரு பெண் அறையில் அமர்ந்திருந்தாள். எழுந்து கண்களைத் தேய்த்து மீண்டும் பார்த்தேன். ஜானுதான். எப்போ வந்த என்றேன். அவளிடம் பதில் இல்லை. நான் எழுந்து பணிக்குச் செல்லும் வரை அவள் என்னோடு எதுவும் பேசவில்லை. இரவு மீண்டும் அறைக்கு வந்தேன். அவளும் நானும் மட்டுமே இருந்த அறையில் பெரும்பாலும் மௌனமே சூழ்ந்திருந்தது. அவளை எதுவும் தொந்தரவு செய்ய மனமில்லாமல் அப்படியே விட்டிருந்தேன். வழக்கமாக அமரும் கல் இருக்கையில் அமர்ந்திருந்த சமயம் தயங்கித் தயங்கி அருகில் வந்த ஜானு என்னைப் பார்த்ததும் மனமுடைந்து அழுதாள். எனக்கொன்றும் புரியவில்லை. என்ன கேட்பது, ஏன் அழுகிறாள், என்னவாக இருக்கும் என்று பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் எதுவும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
அழும் மனிதர்களை அப்படியே விட்டு விடுவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் முதல் ஆறுதல். ஜானு வெகுநேரம் அழுதாள். சிறிது நேரம் கழித்து அழுத களைப்பில் சற்று ஆசுவாசமடைவதாகத் தெரிந்தது. பிறகு மீண்டும் அழுதாள். மீண்டும் ஆசுவாசம். போதுமானவரை பொறுமை காத்து பிறகு கேட்டேன், என்னாச்சு? மாமாக்கு…. மாமாக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று தேம்பினாள். சின்ன அதிர்ச்சிதான். ஆனால் நான் வெளிக்காட்ட விரும்பவில்லை. அவள் கூறுவதைக் கேட்க மட்டுமே செய்யும் குறிக்கோளோடு அமர்ந்திருந்தேன். ஒரு வாரம் முன்னாடி.. “ஆனா.. ரெண்டு நாள் முன்னாடி தான நீ ஊருக்கும் போன..?” என்றேன்.
ஆமா. அதுக்கப்புறம்தான் தெரியும்.
“அதுவரைக்குமே உன்ட அவர் இதைப் பத்திப் பேசலையா”?
“இல்லை. எக்ஸாம் இருந்ததால நான் பேசல.”
“சரி.. விடு. என்ன பண்ண முடியும். இதுக்கு மேல.”
“எங்கிட்டயும் ப்ரொபோஸ் பண்ணினாரே..” மீண்டும் வீறிட்டு அழத் தொடங்கினாள்.
என்ன சூழ்நிலையோ.. இப்படி பாதியிலேயே விட்டுப் போறாங்கனா அவங்க உனக்கானவங்க இல்லை என்றேன். நான் கூறும் எந்த வார்த்தையும் ஜானுவின் காதுகளைக் கூட எட்டாது என்பதும் எனக்குத் தெரிந்தே இருந்தது. அவள் அழுதபடியே இருந்தாள். அவ்வளவு அன்பும் கரைந்து கொண்டிருந்தது. துளித் துளியாக. விட்டுச்செல்லும் மனிதர்கள் அந்த நிமிடத்திற்கு முன்புவரை எத்தனை முறை தன்னை நம்பிக் காத்திருக்கும் மனிதர்களை நினைத்துப் பார்த்திருப்பார்கள்? கண்டிப்பாக ஒரு முறைகூட அப்படி எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நினைத்துப் பார்க்கும் பட்சம் அங்கு அப்படி ஒரு விலகுதலே நிகழாமல் போயிருக்கும் தானே. ஒரு வேளை நினைத்தும் விலகல் சாத்தியம் என்றால் அந்த உறவில் அத்தனை உண்மை இல்லை என்பதை நிச்சயமாகக் கொள்ளலாம். உண்மையில்லாத உறவுக்குப் பிரிவு மட்டும்தான் தீர்வும் கூட.
இந்தக் காதல் இப்படியானதாக இருந்திருக்க வேண்டாம்தான். வலி எதனால் எப்படிக் கிடைத்தாலும் அதற்கு உகந்த ஒரே மருந்து காலம் மட்டும்தான். நாட்கள் நகர்ந்தன. கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. ஜானு இன்னும் சற்று அமைதிக்குள் மூழ்கினாள். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. இயல்பான பேச்சும் பழைய புன்னகையும் என எதுவும் இப்போது அவளிடம் இல்லை. என்னால் முடிந்ததெல்லாம் அவளது நினைவைத் தூண்டி மீண்டும் துயரத்தில் அவளைத் தள்ளும் என அந்தச் சந்தன நிற ஆடையை உடுத்தாமல் தவிர்த்தது மட்டும்தான். கல்லூரியில் எத்தனையோ விழா நாட்கள் வந்து சென்றன. தோழிகளின் திருமணம், வளைகாப்பு என எந்த நிகழ்விற்கும் அந்த ஆடையை மட்டும் அதன்பிறகு உடுத்தவேயில்லை.
Artist: Omar Obaid

ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.
Leave a Reply