ஆய்வாளர் ம.மதிவண்ணனின் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற வரலாற்று ஆய்வு நூலைக் கருப்பு பிரதிகள் வெளியிட்டுள்ளார்கள். நூலின் தலைப்பு படிக்கும் எல்லோருக்கும் ஒருவித ஐயத்தை எழுப்பியுள்ளதை உணர முடிகிறது. பலநூறு ஆண்ட சாதிக் கதைகள் போல, இவர்களும் தங்களுக்கென்று ஒரு ஆண்ட கதைகளைச் சொல்லத் தொடங்கியுள்ளார்கள் எனப் பல பெரியாரிய, மார்க்சிய ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாகத் தலித்துகளுக்கு வரலாறு என்ற ஒன்றே கிடையாது, அவர்கள் அடிமைகளாய் இழிவானவர்களாய் இருந்தார்கள், காலந்தோறும் அவர்கள் துன்பத்திலேயே உழன்றார்கள் என்பன போன்ற கருத்துகள்தான் இப்போதும் இருக்கின்றன. அதிலும், தலித் அருந்ததியர்கள் மீது ‘அவர்கள் தமிழர்கள் அல்ல, வந்தேறிகள்’ என்கிற கூடுதல் வன்மம் வேறு. ஆக, ‘வரலாறு’ என்ற ஒன்று இல்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதன் பொருள் தலித்துகளை மேலும் வலுவிழந்தவர்களாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகக் கட்டமைத்து, உளவியல் ரீதியாகத் தங்களுக்குக் கீழானவர்கள் என்பதை அவர்களே உணரும் வண்ணம் கருத்துகளைக் கட்டமைப்பதுதான் அதன் நோக்கம்.
எனவே, இத்தகைய கருத்துகள் கோலோச்சும் காலத்தில் மாமேதை டாக்டர் அம்பேத்கர் சொல்வதை நினைவுகூருவது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘வரலாற்றை அறியாதவன் வரலாறு படைக்க முடியாது’ என்பதுதான் அது. இந்நூலின் சாராம்சம், சக்கிலியர்கள் என்றாலே இழிவானர்கள், சக்கிலி என்பது மிக இழிவான சொல், சக்கிலியர்கள் காலந்தோறும் மலமள்ளும் தொழிலைச் செய்தார்கள் போன்ற ஆதாரமற்ற கட்டுக் கதைகளை அறிவியல்பூர்வ ஆய்வின் வழி மறுக்கிறது. நூலின் நோக்கம், வரலாறு இல்லை என்பதைக் கட்டுடைத்து எங்களுக்கென்று ஓர் வரலாறு இருக்கிறது, அது பௌத்தம் என்கிற மானுடச் சமத்துவத்தின் கீழ் பரந்து விரிந்திருந்தது என்கிற தீர்க்கமான ஆய்வு முடிவுகளைக் கொண்டுள்ளது.
அதோடு நில்லாமல், ‘உண்மை என்பது சூரியன் போன்றது. அதனை எவராலும் மறைக்க முடியாது’ என்கிற கௌதம புத்தரின் கூற்றின் படி, பகடை, பகடு, மாதாரி, மாதிகா, அருந்ததியர், பாணர், வானர், கோசங்கி என்றழைக்கப்படுகிற சக்கிலியர்கள் என்பவர்களின் உண்மையான வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது என்பதில் ஆரம்பித்து, அதன் வழியே புத்தருக்கும் (பௌத்தம்) இவர்களுக்கும் என்ன உறவு?, கௌதம புத்தர் ஆரம்பித்து வைத்த பசுப் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்களாக எப்படிச் சக்கிலியர்கள் செயல்பட்டார்கள்?, நடுகல்லின் வரலாறு என்ன?, சக்கிலிய அரசர்கள் யார்?, அவர்கள் ஆண்ட பகுதிகள் என்ன?, அவர்கள் வெட்டிய குளங்கள், ஏரிகள், அணைகள் எங்கெங்கு இருக்கின்றன? என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, இத்தகைய உண்மைகளை ஏன் தமிழ் வரலாற்றாசிரியர்கள் மறைத்தார்கள்? மார்க்சியப் பின்னணி கொண்ட ஆய்வாளர்களும் ஏன் மறைத்தார்கள்? அதன் பின்னால் இருந்த உளவியல்கள் என்னென்ன? ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த வரலாற்றிலும் உள்ள பிழைகள் மற்றும் கட்டுக் கதைகள் என அனைத்தையும் ஆராய்ந்திருக்கிறார் ஆய்வாளர் ம.மதிவண்ணன்.
இழிவாகச் சொல்லப்படுகிற ஓர் இனக்குழுவின் பெயரில் எப்படி இத்தனை பெருமிதங்கள் இருக்கின்றன? சக்கிலிக் கோட்டை என்பதையும், பெரிய சக்கிலிச்சி ஏரி என்பதையும், சக்கிலியன் அணை என்பதையும் பெருமித உணர்வோடு தானே சூட்டியிருப்பார்கள்? என்கிற கேள்விகளைப் பொதுச் சமூகம் நோக்கி எழுப்புகிறார். அப்படியெனில் இன்று சக்கிலியன், சக்கிலிச்சி என்கிற பெயர்களின் மீது சுமத்தப்பட்ட இழிவு என்பது அண்மைக் காலங்களில் சுமத்தப்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் கேத்த நாயக்கன் புதூரில் ‘பெரிய சக்கிலிச்சி ஏரி’ என்ற ஏரி இப்போதும் இருக்கிறது. இது ஆறாம் நூற்றாண்டு காலப் பகுதியைச் சேர்ந்தது. அதோடு தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் சக்கிலிப்பட்டி என்ற ஊர் இருக்கிறது. இவற்றுள் சக்கிலி ஏரியும், சக்கிலிப் பட்டியும் சேலம் மாவட்டம் ஆறகளூரைத் தனது தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த வாணகோவரையன் என்கிற வானர் குலத்தைச் சேர்ந்தவனது காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்த அவனது வழித் தோன்றல்கள் காலத்திலோ ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தரவுகளின் அடிப்படையில் மிகத் தீர்க்கமான முடிவுகளை முன்வைக்கிறார்.
சக்கிலியர்களின் வரலாற்றை ஆராயும் இந்நூலில் மிக முக்கியப் பகுதியாகவும், ஆச்சர்யமான ஆய்வு முடிவுகளைக் கொண்டதுமாக எனக்குத் தோன்றியது சக்கிலியர்களின் ‘குலமரபுச்சின்னம்’ குறித்த பகுதிதான். யானை மற்றும் மாடு எவ்வாறு சக்கிலியர்களின் குலமரபுச் சின்னமாக இருந்தது என விவரிக்கும் பகுதி இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றைத் தலைகீழாக்குகிறது. யானை என்கிற அடையாளத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு, யானை மூலம் பௌத்தத்திற்கும் சக்கிலியர்களுக்கும் உள்ள தொடர்பு, மாடு (காளை, பசு)க்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு, இதன் வழியே சக்கிலியர்களின் வரலாற்றோடு தொடர்புடைய ஓர் உயிரினமாக மாடு வந்து கொண்டே இருப்பதன் வரலாற்றுப் பின்னணி என அதிஅற்புதத் தகவல் திரட்டை அளிப்பதோடு, படிப்பவர்களுக்கு அதன் உண்மைத்தன்மையைக் கடத்த தனது தேர்ந்த மொழிநடையில் விளக்கியுள்ளார்.
வரலாற்றை உற்று நோக்கினால் காலம் காலமாக ஒரே தொழிலைச் செய்து வரும் சமூகம் என்பது எதுவுமில்லை என்ற புரிதலை ஆசிரியர் நமக்களித்து, அதன் அடிப்படையில் சக்கிலியர் சமூகம் வரலாறு நெடுகிலும் என்னென்ன தொழில்களைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் தன் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு முன்வைக்கிறார். இறுதிப் பகுதியாக, சக்கிலியர்களின் வீழ்ச்சி என்கிற பகுதியில் ஒட்டுமொத்தமாக அல்லாமல் ஒவ்வொரு பகுதியில் எப்படி அவர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்தார்கள், நாயக்கர்களின் ஆட்சிக் காலம், பாளையக்காரர்களின் ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் வருகை என அதற்குப் பின் நடந்த சக்கிலியர்கள் மீதான உளவியல் தாக்குதல்கள், அவர்களின் தொழில் மாற்றங்கள், அவர்கள் ஏன் தமிழ் தவிர்த்த மற்ற மொழிகளையும் பேசுபவர்களாக இருக்கிறார்கள் என அனைத்தையும் ஆராய்ந்து நமக்குத் தருகிறார்.
ஆய்வாளர் ம.மதிவண்ணன் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற நூலுக்காக ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் தன் வாழ்நாளில் செலவு செய்து, வெறுமனே ஆண்ட அரசர்களின் வரலாற்றை மட்டும் தராமல், அவர்கள் பின்னணி என்ன, ஏன் வீழ்ந்தார்கள் அல்லது வீழ்த்தப்பட்டார்கள், பௌத்தப் பின்னணி எனத் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற சில வட இந்தியப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, காலங்காலமாகத் தலித் அருந்ததியர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிற இழிவை நீக்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை.
மாமேதை டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்கிற ஓர் நூல் எப்படித் தலித்துகள் மட்டுமல்லாமல் மானுடச் சமத்துவத்தை விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் இருக்க வேண்டுமோ, அதுபோல இந்த நூலும் சமத்துவம் விரும்புகிறவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என அனைவரும் இதனை தங்கள் வீடுகளில் வைத்திருக்க வேண்டும். ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற நூல் சமூக அரசியல் தளம் மட்டுமல்லாமல், மானுடவியல் ஆய்வு என்கிற தளத்திலும் மிக முக்கியக் கவனம் பெறும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. ஏனைய மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வரலாறும் இனி அந்தந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட வேண்டும் என்கிற ஓர் உத்வேகத்தை அளித்தால் அதுதான் இந்த ஆய்வு நூலின் வெற்றியாக இருக்கும் என ம.மதிவண்ணன் அவருடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய கருத்தும் அதுவே. ஜெய்பீம்.

அன்பு சாக்கியன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெரியார் பல்கலையில் இளங்கலை காட்சித் தொடர்பியலும், முதுகலை இதழியல் மக்கள் தொடர்பியல்த் துறையையும் பயின்றவர். ஈரோடு எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் உதவிப் பேராசிரியராகவும், நீலம் பதிப்பகத்தின் முன்னாள் உதவி ஆசிரியராகவும் இருந்தவர். பின், இயக்குநர் பா.இரஞ்சித்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், தற்போது திரைத்துறையில் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ‘வெற்றிடம்’ என்கிற யூடியுப் சேனலையும், வலைத்தளப் பக்கத்தையும் நடத்தி வருகிறார்.
Leave a Reply