ஒளிப் பழம்
அடர்த்தியான இலைகளுடன் மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இலைகளிடையே இறங்கிய சூரிய ஒளி மரத்தடி நிழலில் சிதறிக் கிடந்தது. பார்ப்பதற்கு ஒளியே பழங்களாகி விழுந்தது போல் இருந்தது.
மரம் சொன்னது, ”இந்தப் பழங்களை யாரும் எடுக்கவும் முடியாது, கடிக்கவும் முடியாது.”
நாற்காலியின் மகிழ்ச்சி
இரண்டு மர நாற்காலிகள் பேசிக் கொண்டன.
ஒரு நாற்காலி கேட்டது, ”இதுவரை பல பேர் உன்மேல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களின் யார் உட்கார்ந்ததை மகிழ்ச்சிக்குரியதாக நினைக்கிறாய்?”
மற்றொரு நாற்காலி சொன்னது, ”என்னை ஒரு தச்சர் செய்தார். செய்து முடித்த பிறகு என் மீது உட்கார்ந்து பார்த்தார். அதைத்தான் மகிழ்ச்சிக்குரியதாக நினைக்கிறேன்.”
சிங்கமும் மானும்
சிங்கம் ஒன்று படுத்திருந்தது. மான் ஒன்று அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்ததும் பயந்து ஓடியது. சிங்கம் அந்த மானைப் பார்த்து, ”ஓடாதே நில். உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் நான் சொல்வதைக் கேள்” என்றது.
அதைக் கேட்டு மானும் நின்றது.
சிங்கம் சொன்னது, ”இப்போது என் வயிறு நிறைந்து இருக்கிறது. வயிறு நிறைந்த பிறகு நான் வேட்டையாட மாட்டேன். அப்போது நீ என்னைப் பார்த்து ஓடத் தேவையில்லை.” அதற்கு மான் சொன்னது, ”உன் வயிறு நிறைந்து இருப்பது உனக்கு மட்டும்தான் தெரியும். எனக்குத் தெரியாது. அதனால் நான் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதுதான் எனக்கு நல்லது.”

வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.
Leave a Reply