மொழியின் வண்ணங்களைக் குழைத்துக் கவிஞன் வரையும் சித்திரத்தில் என்ன இருக்கும்? அந்தத் தருணத்தில் அவனை / அவளை எவையெவை பாதித்திருக்கின்றனவோ அவை எல்லாம் இருக்கும். கவிஞனுடைய வாழ்வின் முழுமையில் ஒரு பகுதியாய் விளங்குவது கவிதை. கவிதை அல்லாத வாழ்வு சாரமிழந்து போன வாழ்வு. உயிரூட்டமுள்ள ஒரு கவிஞனின் கவிதைகள் அவனுக்கு விதிக்கப்பட்ட / நேர்ந்த வாழ்வை எதிர்கொள்ளும் முயற்சியிலேயே விளைகின்றன. அப்படிப் பிறப்பவையே அசலான கவிதைகள். வெள்ளை ரோஜாச்செடியைக் கொண்டு வந்து செம்மண் நிலத்தில் ஊன்றி வளர்த்தாலும், வண்டல்மண் நிலத்தில் ஊன்றி வளர்த்தாலும் அது வெள்ளை நிறத்தில்தான் மலரும்.
கவிஞர் நுட்பவினைஞனின் முதல் தொகுப்பான பருவத்தின் திண்ணிய இரவுகள் அவரது இளமைப் பருவத்தின் நாளாகமமாக நம் முன் வைக்கப் பட்டிருக்கிறது. இந்த இளமைப் பருவம் அவருக்கு எதையெதை கையளித்திருக்கிறது?
சாதியமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஓர் இளைஞனின் காதல், காமம் சார்ந்த அவனது வாழ்வனுபவங்கள் என்னவாக இருக்கும்? அவனது சாதியின் காரணமாக அவனுக்குக் கட்டாயமாக்கப் பட்டிருக்கிற தனிமையும், ஏமாற்றமும் எப்படிப்பட்டவை? அதைத்தான் கசப்பின் சுவையோடும், நிராசையின் மணத்தோடும் நிகழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன!
கவிஞனின் அவள் குறித்து நமக்குத் தெரிய வருவதென்ன? அவள், ”காமம் இளங்கொடியென பரவியிருந்தவள்”. ”தூரப் பச்சை நில நினைவில் – இடைவழி நழுவ விட்டுத் துடைத்தெறிந்துவிட்டுப் போய் விட்டாள்”. அவள் போன பின் அவர்களது ”ஆலிங்கன அறையின் வன்னதிரொலி” கேட்கிறது. ”கண்களை உருட்டிக் கொண்டு – நிலைத்திருக்கிற முகம் – காலத்தை – த்தச் சீப் பே” என்கிறது.
இவ்வாறான வெறுமை ஏன் இக்கவிஞனை சூழ்ந்தது?அவள் ஏன் ”தூரப்பச்சை நில நினைவில் – இடைவழியில் போனாள்?” ஏனெனில், ”எவருக்கும் அடிபணிந்து போக அவசியமில்லாத கனவுக்குள் நுழையக் கூட கைகளைக் கட்டியபடிப் போக வேண்டியவனாக” இவன் இருக்கிறான். ”வறட்சியோ, வெள்ளமோ எதுவாகினும் என்ன தரப்போகிறது என்ற கவலை தேவையற்ற நிலமில்லாதவன்” இவன். ”பணிப்பதிவேடு பார்த்து சாதியறிந்தவன் விளி வழியே வர்ணக்குணம் ஊடுருவும்” மெல்லிய இலக்கானவன்.
காலங்காலமாய் மனிதர்களின் காமம் அதிகாரத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. காமமென்பது இனப்பெருக்கத்தோடு தொடர்புடையது. இனப்பெருக்கத்திற்கான உரிமை அதிகாரமுடையவர்களுக்கே உரித்தானதாக வைக்கப்பட்டிருக்கிறது.
தற்காலத்தில் பரஸ்பரம் தொடுதல் கூட தேவையில்லாத பிம்பங்களுடனான புணர்ச்சி பல்கிப் பெருகி எங்கும் காணக் கிடைக்கிறது. சந்தையின் பொருட்டு அது பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதிகாரமற்றவர்களும் ஓரமாய்த் தனியாய்ப் புணர்வதற்கான சாத்தியத்தை வழங்கும் இவ்வகைக் காமம் பரவலான விநியோகத்திற்கு உகந்ததாய் இருக்கிறது. அத்தகையக் காமம் இத்தொகுப்பில் நெடுகப் பேசப்பட்டிருக்கிறது!
நீலப்படம், நிர்வாணத்தைப் படமாக்கினோம் என இரு கவிதைகள் பேசுகின்றன.
இளைஞனும், இளைஞியும் தனித்தனியே தன்பாலின சேர்க்கைக் காணொளியைப் பதிவிறக்குகிறார்கள் என ஒரு கவிதை கவலைப்படுகிறது.
சமகாலத்தின் காதலும் காமமும் ஜோடனைகள் இல்லாமல் இயல்பாகப் பேசப்படுபனவாக நுட்பவினைஞனின் கவிதைகள் விளங்குகின்றன. மோஸ்தருக்காகவோ அல்லது ஏற்பின் சாத்தியங்களை மனதில் கொண்டோ எழுதப்பட்டனவாக இக்கவிதைகள் இல்லை என்பது இக்கவிதைகளின் பலம்.
தமிழ்க்கவிதையியல் கூடலும், கூடல் நிமித்தமும் என்ற உரிப்பொருளுக்குரிய திணையாகக் குறிஞ்சித்திணையைச் சொல்கிறது. குறிஞ்சித் திணைக்குரிய காலமும், பொழுதும் முறையே குளிர்காலமும், யாமமும் ஆகும். அந்த இலக்கணப்படியே கூடல் நிமித்தமான இக்கவிதைகளில் யாமமும் இரவும் இடம் பெறுகின்றன.
”விடியவிடாமல் – பலவந்தமாய் இழுத்து வைத்து – வியாக்கியானம் பேசித்திரிந்த – பருவத்தின் திண்ணிய இரவுகளைப்” பேசுகிறது ஒரு கவிதை.
”நடுநிசியில் – கள்ளமற்றுக் கூடிய பூனைகள் – யன்னலுக்கு அப்பால் குறுகுறு கண்களைத் தூக்கிச் செல்பவளை” முன்வைக்கிறது ஒரு கவிதை.
“இரவில் பின்யாமத்தில் மணலுதிர ஆடிய பெருங்கூத்து” வருகிறது ஒரு கவிதையில்.
இப்படியாய் இந்தக் கவிதைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தொடரும் மரபின் தொடர்ச்சி இருக்கிறது.
தெருநாயின் மேலே ஆமணக்கு விதைகளைப் போலே முளைத்திருக்கும் உண்ணிகளைப் போல இந்தியர் மனங்களில் சாதி குடியேறி இருக்கிறது. உண்ணிகளற்ற தெரு நாய்களை நாம் காண முடியாதது போல சாதியுணர்வற்ற இந்தியர்களையும் காணமுடியாது.
ஒரு தலித் இளைஞனின் காதல் உணர்வுகளுக்குள்ளே மட்டுமல்லாமல், ஒரு தலித் கவிஞனின் காதல் கவிதைகளின் உள்ளேயும், சாதியின் நர்த்தனமே ஊடாடிக் கிடக்கும். நாம் இதுவரைப் பேசிய நுட்பவினைஞனின் கவிதைகளிலும் சாதி குறித்த விமர்சனங்களும், சாதி குறித்த பார்வைகளுமே பின்னணியாக அமைந்திருக்கின்றன. ஓர் எளிய மனிதனின் சமூக வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தும் சாதியைப் பேசாமல் மானுட விடுதலை நாடும் கவிஞனின் கவிதைகள் இருந்துவிட முடியுமா?
கவிஞன் தனது பால்யம் முழுவதும் ஆணவக்குற்றங்களைப் பார்த்து வந்தவன். அலுவலகங்களிலும் கூட அவன் வர்ணக் குணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சாணிப்பாலூற்றி மனிதன் கொல்லப்படுகிறான். செந்நீர் ஒழுக தலித்தின் சிரம் கொய்யப்படுகிறது.
ஆக, இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்து வளர்கின்ற ஒவ்வொருவர் வாழ்வையும் சாதி ஆக்கிரமித்திருக்கிறது. ஆக்கிரமிப்பு வன்முறை சார்ந்தது. எதிர்த்தரப்பின் பலவீனம் நீடிக்கும் வரை நீடித்திருப்பது. ஆக்கிரமிப்புக்கு எதிரான பக்கமிருப்பவர்கள் சதா தமது வலுவைத் திரட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஆக்கிரமிப்பை, அதன் கொடூரத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆக்கிரமிப்பு முறியடிக்கப்படும் தருணம் வரை அது தொடர வேண்டும்.
மனிதார்த்த மதிப்பீடுகளின் தர்க்கம் கொண்டு சாதி தொடர்ந்து இடைவிடாமல் இடிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்ற தலித், முற்போக்குக் கவிஞர்களின் நீண்ட தொடர்ச்சியில் ஒரு கண்ணியாக நுட்பவினைஞனின் கவிதைகளும் விளங்குகின்றன.
மேற்சொன்ன தலித், முற்போக்குக் கவிதைகளின் பொதுத்தன்மைகளுள் குறிப்பிடத் தக்கனவாக விளங்குவது வெளிப்படையாக அரசியல் பேசுவது, சமகால அரசியல் மீது இடையீடு செய்வது ஆகும். அவற்றையும் இத்தொகுப்பிலுள்ள சில கவிதைகள் சமரசமின்றிச் செய்கின்றன. இத்தொகுப்பிலுள்ள இந்துத்துவ எதிர்ப்புக் கவிதைகளை அதற்கான சான்றாக நாம் காட்ட முடியும்.
ஆடம்பரமில்லாத, துறுத்தாத ஓர் அழகியல் சார்ந்த கவிதைமொழி கவிஞருக்குச் சாத்தியமாகி இருக்கிறது. நுட்பமான உணர்திறனும், உணர்வு மயமான மனமும் வாய்க்கப் பெற்றவர்கள் அசலான கவிஞர்கள் ஆவர். அத்தகையவர்களிடமிருந்து தொடர்ச்சியாக, மேம்பட்ட தரத்திலான கவிதைகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அந்த விதத்தில் நுட்பவினைஞன் என்னும் கவிஞனின் அடுத்தடுத்த பரிணாமம் எத்தகையதாக விளங்கும் என்று காண ஒரு சக படைப்பாளியாக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.








Leave a Reply