லேங்ஸ்டன் ஹியூஸ்
தமிழில் – கதிரவன் அண்ணாமலை
இளம் நீக்ரோ கவிஞர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவர் ஒருமுறை என்னிடம், “நான் ஒரு கவிஞனாக இருக்க விரும்புகிறேன் – ஒரு நீக்ரோ கவிஞனாக அல்ல” என்றார். அதன் பொருளாக நான் கொள்வது, “நான் ஒரு வெள்ளைக் கவிஞரைப் போல எழுத விரும்புகிறேன்”; அதாவது ஆழ் மனதில், “நான் ஒரு வெள்ளைக் கவிஞனாக இருக்க விரும்புகிறேன்” என்பது; அதன் பின்னால் உள்ள அர்த்தம் – “நான் வெள்ளையனாக இருக்க விரும்புகிறேன்” என்பதே. அந்த இளைஞர் அப்படிச் சொன்னதற்கு நான் வருந்தினேன். எந்த மாபெரும் கவிஞனும் தான் தானாக இருப்பதற்கு அஞ்சியதில்லை. தன் இனத்திலிருந்து அக ரீதியாக வெளியேற விரும்பும் இந்த ஆசையுடன், இந்தச் சிறுவனால் எப்போதும் ஒரு மாபெரும் கவிஞனாக முடியாது என்று அப்போதே எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இதுதான் அமெரிக்காவில் உண்மையான எந்த நீக்ரோ கலைக்கும் குறுக்கே நிற்கும் மலை – இனத்தினருக்கிடையில் வெள்ளைத்தன்மையை நோக்கிய உந்துதல், இனத் தனித்துவத்தை அமெரிக்கத் தர நிலைகளுக்குள் வார்த்தெடுக்கும் ஆசை மற்றும் குறைந்தளவில் நீக்ரோவாகவும், பெருமளவில் அமெரிக்கனாகவும் இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம்.
இந்த இளம் கவிஞரின் நேரடியான பின்னணியைப் பார்ப்போம். அவரது குடும்பம் நடுத்தர நீக்ரோ வர்க்கத்தைச் சேர்ந்தது என்று ஒருவர் கூறலாம். எந்த வகையிலும் பணக்காரர்கள் அல்ல. ஆனால் ஒருபோதும் அசௌகரியத்தையோ, பசியையோ அனுபவிக்காதவர்கள். திருப்தியான, மரியாதைக்குரிய, பாப்டிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினர்கள். தந்தை தினமும் காலையில் வேலைக்குச் செல்கிறார் – ஒரு பெரிய வெள்ளையர் கிளப்பில் தலைமை மேற்பார்வையாளர். தாய் சில நேரங்களில் தையல் வேலைகளையும், சில நேரங்களில் நகரத்தின் பணக்கார குடும்பங்களுக்கான விழாக்களையும் மேற்பார்வையிடுகிறார். குழந்தைகள் கலப்பு பள்ளியில் படிக்கின்றனர். வீட்டில் அவர்கள் வெள்ளையர்களின் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் வாசிக்கின்றனர். குழந்தைகள் தவறு செய்யும்போது, “நிக்கர்களைப் போல இருக்காதே” என்று தாய் சொல்கிறார். தந்தையோ, “வெள்ளையன் எப்படி நன்றாக விஷயங்களைச் செய்கிறான் என்று பார்” என்று அடிக்கடி பேசுகிறார். இவ்வாறு ‘வெள்ளை’ என்ற சொல் அனைத்து நல்லொழுக்கங்களின் சின்னமாக இயல்பாகவே மாறிவிடுகிறது. குழந்தைகளுக்கு அது அழகு, ஒழுக்கம், பணம் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. “நான் வெள்ளையனாக இருக்க விரும்புகிறேன்” என்ற முணுமுணுப்பு அவர்களின் மனதில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இளம் கவிஞரின் வீடும், இதுபோன்ற நடுத்தர கருப்பின வர்க்கத்தின் பொதுவான ஒரு வீடு போலத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய வீட்டில் பிறந்த ஒரு கலைஞனுக்குத் தன் சொந்த மக்களின் அழகை புரிந்துகொள்வதென்பது எவ்வளவு கடினமானது என்று ஒருவரால் அறிய முடியும். அந்த அழகைப் பார்க்க அவருக்கு ஒருபோதும் கற்றுக்கொடுக்கப்படவில்லை. மாறாக அதைப் பார்க்காமல் இருக்க, அல்லது பார்த்தாலும், அது ககேசிய (Caucasian) முறைகளுக்கு ஏற்ப இல்லாதபோது, அவர் வெட்கப்பட கற்றுக்கொடுக்கப்படுகிறார்.
இன கலாச்சாரத்தின் அடிப்படையில், தன்னை “உயர்தர” நீக்ரோ என்று அழைத்துக்கொள்ளும் குடும்பம் சிறந்ததை எதையும் வழங்குவதில்லை. மாறாக குறைவான பண்பாடுடைய அல்லது குறைந்த செல்வமுடைய வீட்டை விட இவர்களிடம் வெள்ளையர்களை அதிகமாகப் போலச்செய்யும் போக்கே காணப்படும். தந்தை ஒருவேளை மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ, நில உரிமையாளராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருப்பார். தாய் ஒரு சமூகப் பணியாளராகவோ, ஆசிரியையாகவோ, அல்லது வேலைக்காரியை பணியமர்த்தி, ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருப்பார். தந்தை சற்று கடுமையானவராக இருப்பார், தன்னால் கண்டடைய முடிந்தளவில் வெளிர் நிறமுள்ள பெண்ணையே திருமணம் செய்திருப்பார். கருப்பு நிறமுள்ள முகங்கள் மிகக் குறைவாகவே காணப்படும் தேவாலயத்திற்கு இந்தக் குடும்பம் செல்லும். அங்கே இவர்களே ஒரு நிறக்கோட்டையும் வரைவார்கள். வடக்கில் வெள்ளையர்களின் திரையரங்குகளுக்கும், திரைப்படங்களுக்கும் செல்கிறார்கள். தெற்கில் குறைந்தது இரண்டு கார்களும் “வெள்ளையர்களைப் போல” ஒரு வீடும் வைத்திருக்கிறார்கள். நார்டிக் (Nordic) நடத்தை, நார்டிக் முகங்கள், நார்டிக் கூந்தல், நார்டிக் கலை (ஏதேனும் இருந்தால்), மற்றும் எபிஸ்கோபல் தேவாலயம் வழிகாட்டக்கூடிய சொர்க்கம். இனத்தின் கலைஞராக விரும்புபவர் தன்னையும் தன் மக்களையும் கண்டுபிடிக்க ஏற வேண்டிய மலை உண்மையிலேயே மிக உயர்ந்ததாக இருக்கிறது.
ஆனால், சாதாரணவர்களான கீழ்த்தட்டு மக்களும் இருக்கிறார்கள், அவர்கள்தான் பெரும்பான்மை – ஆண்டவர் போற்றப்படட்டும்! சனிக்கிழமை இரவுகளில் ஒரு மடக்கு மது அருந்தும் மக்கள், தங்களுக்கோ சமூகத்திற்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள், அதிகமாக சாப்பிடாதவர்கள், சோம்பலான உலகம் சுழல்வதைப் பார்க்க அதிகமாகக் கற்றவர்களும் அல்ல. வாஷிங்டனில் ஏழாவது தெருவிலோ, சிகாகோவில் ஸ்டேட் தெருவிலோ வாழும் இவர்கள், வெள்ளையர்களைப் போலவோ வேறு யாரைப் போலவோ இருக்க வேண்டும் என்று கவலைப்படுவதில்லை. அவர்களின் மகிழ்ச்சி பளீரென்று பரவசத்தில் கலக்கிறது. அவர்களின் மதம் ஆர்ப்பரிப்பாக உயர்கிறது. இன்று கொஞ்சம் வேலை, நாளை கொஞ்சம் ஓய்வு. சிறிது நேரம் விளையாட்டு, சிறிது நேரம் பாட்டு. ஓ, நடனமாடுவோம்! இந்தச் சாதாரண மக்கள் நீண்ட காலமாக அவர்களின் அறிவார்ந்த சகோதரர்கள் அஞ்சியதுபோல நாட்டுப்புற ஸ்பிரிச்சுவல் (spirituals) பாடல்களுக்கு அஞ்சுவதில்லை. ஜாஸ் (Jazz) அவர்களின் குழந்தை. அமெரிக்க தரநிர்ணயத்தை எதிர்கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் சொந்தத் தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், எந்தக் கலைஞனுக்கும் வண்ணமயமான, தனித்துவமான செல்வத்தை வழங்குகிறார்கள். ஒருவேளை இந்தச் சாதாரண மக்கள்தான் உலகிற்கு உண்மையான மாபெரும் நீக்ரோ கலைஞனை வழங்குவார்கள் – தான் தானாக இருப்பதற்கு அஞ்சாத ஒரு கலைஞன். உயர்தர நீக்ரோ ஒரு கலைஞனிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். ஆனால் இந்த மக்கள் அப்படியொரு கலைஞன் தோன்றும்போது குறைந்தபட்சம் அவனைத் தனியாக விட்டுவிடுகிறார்கள். அப்படியொருவன் இருக்கிறான் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவனைப் பற்றி அவர்கள் வெட்கப்படுவதில்லை. தங்களுடைய சொந்த அழகை அவர்கள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.
நிச்சயமாக, தன் சொந்த இனத்தில் முன்னேறியவர்கள் அவன் மீது சுமத்தும் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கக்கூடிய அமெரிக்க நீக்ரோ கலைஞனுக்கு, பயன்படுத்தப்படாத மிகப்பெரிய களமொன்று கிடைக்கப்பெறுகிறது. தன் இனத்திற்கு வெளியே செல்லாமலேயே, ‘வெள்ளை’ கலாச்சாரம் மற்றும் உணர்வுபூர்வமாக அமெரிக்க பழக்கவழக்கங்களைக் கொண்ட உயர்தர வர்க்கத்தினரிடையேகூட, ஒரு கருப்பின கலைஞனுக்கு வாழ்நாள் முழுவதும் படைப்புப் பணிக்குத் தேவையான போதுமான கருப்பொருள்கள் உள்ளன. இந்த நாட்டில் நீக்ரோக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையிலான உறவுகளை, அதன் எண்ணற்ற மேல்தோற்றங்கள் மற்றும் அடிநாதங்களுடன் அணுகும்போது, குறிப்பாக இலக்கியம் மற்றும் நாடகத்திற்கு, தீராத கருப்பொருள்களின் வளம் கையில் இருக்கிறது. இவற்றிற்கு நீக்ரோ கலைஞன் தன் இனத்தின் தனித்துவத்தையும், இசை மற்றும் அரவணைப்பின் பாரம்பரியத்தையும், ப்ளூஸில் (Blues) காணப்படுவதுபோல் கண்ணீருடன் கலந்த நையாண்டிச் சிரிப்பாக மாறும் அவனது தனித்த நகைச்சுவையையும் வழங்குகிறான். எனினும், இப்போது நாம் அந்த மலையை மீண்டும் பார்ப்போம்.
பிலடெல்பியாவில் ஒரு முக்கிய நீக்ரோ பெண்மணி, ரேக்வெல் மெல்லரின் (Raquel Meller) அந்தலூசிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடக் கேட்க பதினோரு டாலர்கள் செலுத்தினார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அதே பெண் என்னிடம், நான் “அந்தப் பெண்ணின்” (சிறந்த கருப்பின கலைஞரான க்ளாரா ஸ்மித்தை (Clara Smith) குறிப்பிடுகிறார்) நீக்ரோ நாட்டுப்புறப் பாடல்களை கேட்கச் செல்வதைப் பற்றி நினைக்கவே மாட்டேன் என்றார். பல உயர்தர நீக்ரோ தேவாலயங்கள், இன்றுகூட, தங்கள் வழிபாட்டில் ஸ்பிரிச்சுவல் பாடல்களைப் பயன்படுத்துவதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். வெள்ளையர்களின் பாடல் புத்தகங்களில் உள்ள சலிப்பான இசையையே விரும்புகிறார்கள். “நாங்கள் இறைவனை சரியாகவும் அமைதியாகவும் வணங்க விரும்புகிறோம். ‘கூச்சலிடுவதை’ நாங்கள் நம்பவில்லை. நார்டிக்குகளைப் போல சலிப்பானவர்களாக இருப்போம்” என்று அவர்கள் சாராம்சத்தில் கூறுகிறார்கள்.
இனத்தின் கலையைப் படைக்க விரும்பும் தீவிரமான கருப்பின கலைஞனின் பாதை நிச்சயமாகக் கரடுமுரடானது, மேலும் இடைபடும் மலையும் உயர்ந்தது. சமீப காலம் வரை வெள்ளையர்களிடமிருந்தோ கருப்பின மக்களிடமிருந்தோ அவனது படைப்புகளுக்கு எந்த ஊக்கமும் கிடைக்கவில்லை. செஸ்நட்டின் (Chesnutt) சிறந்த நாவல்கள் அச்சிலிருந்து மறைந்துபோனபோது இரண்டு இனங்களும் அதைக் கவனிக்கவில்லை. டடன்பாரின் (Dunbar) பேச்சு வழக்குக் கவிதைகளின் வித்தியாசமான கவர்ச்சியும் நகைச்சுவையும், அவருடைய காலத்தில், பெரும்பாலும் ஒரு கண்காட்சியில் காணப்படும் வினோதப் பொருளுக்கோ (ஒரு கருப்பின மனிதன் கவிதை எழுதுகிறான்! எவ்வளவு விசித்திரம்!) அல்லது கோமாளிக்கோ கொடுக்கப்படும் ஊக்கத்தைத்தான் பெற்றது.
தற்போதைய நீக்ரோ பாணி என்பது, வளரும் கருப்பின கலைஞனுக்கு நன்மையைவிட தீமையையே செய்யக்கூடும் என்றாலும், குறைந்தபட்சம் இதைச் செய்துள்ளது: நீண்ட காலமாக, மற்ற இனம் முன்னதாகவே கவனிக்காவிட்டால், தன் சொந்த மக்களிடையே மரியாதை குறைவாகப் பெற்ற தீர்க்கதரிசியாக இருந்த அவனை, வலுக்கட்டாயமாக அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. சார்லஸ் கில்பின் (Charles Gilpin) பல ஆண்டுகளாக நீக்ரோ மேடைகளில் நடித்தபோது தன் சொந்த மக்களிடமிருந்து எந்தச் சிறப்பான பாராட்டும் பெறவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் பிராட்வே அவருக்கு எட்டு முறை கர்டைன் கால் வழங்கியபோது, நீக்ரோக்களும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தகர தட்டை அடிக்கத் தொடங்கினர். எனக்குத் தெரிந்த ஒரு இளம் கருப்பின எழுத்தாளர், பகலில் கைத்தொழிலாளியாக இருந்தும், பல வருடங்களாக கருப்பின பத்திரிகைகளுக்கு நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் வெள்ளையர்களின் பதிப்புகளில் எழுதத் தொடங்கி, அவரது முதல் புத்தகத்தை நியூயார்க்கின் முக்கிய பதிப்பகம் ஏற்றுக்கொண்டபோதுதான், நகரத்தின் “சிறந்த” நீக்ரோக்கள் அப்படியொருவர் அங்கே வாழ்கிறார் என்பதையே அறிந்துகொள்ள முயன்றார்கள். உடனே அவருக்காக ஒரு பிரம்மாண்ட விருந்தும் நடத்த முடிவு செய்தார்கள். உயர் சமூகப் பெண்கள் அவரது தாயிடம், இந்நிகழ்ச்சிக்கு அவர் வராமல் இருப்பது நல்லது என்றும் முணுமுணுக்க மறக்கவில்லை. ஏனென்றால், பொருத்தமான மாலை உடை அப்பெண்மணியிடம் இருக்குமா என்று அவர்களால் உறுதிபடுத்த முடியவில்லை.
நீக்ரோ கலைஞன் தன் சொந்த மக்களின் கடுமையான விமர்சனத்துக்கும் தவறான புரிதலுக்கும், வெள்ளையர்களின் மறைமுக லஞ்சத்துக்கும் எதிராகப் போராடுகிறான். “மரியாதைக்குரியவனாக இரு, நல்லவர்களைப் பற்றி எழுது, நாங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதைக் காட்டு” என்கிறார்கள் நீக்ரோக்கள். “வழக்கத்தை எழுது, அதிக தூரம் போகாதே, உன்னைப் பற்றி எங்களுக்கு உள்ள நம்பிக்கையை உடைக்காதே, எங்களை அதிகமாக மகிழ்விக்காதே. நாங்கள் பணம் தருகிறோம்” என்கிறார்கள் வெள்ளையர்கள். இரு தரப்பும் ஜீன் டூமரிடம் “கேன்” (Jean Toomer’s Cane) எழுத வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள். கருப்பின மக்கள் அப்படைப்பை பாராட்டவில்லை. வெள்ளையர்கள் வாங்கவில்லை. அத்தொகுப்பை படித்த பெரும்பாலான கருப்பின மக்கள் அதை வெறுத்தார்கள், அதற்கு அஞ்சினார்கள். விமர்சகர்கள் நல்ல விமர்சனங்களைக் கொடுத்தபோதிலும் பொதுமக்கள் அலட்சியமாகவே இருந்தார்கள். ஆனால் டூபாய்ஸின் (DuBois) படைப்புகளைத் தவிர்த்து, அமெரிக்காவில் ஒரு நீக்ரோ எழுதிய மிகச்சிறந்த உரைநடை “கேன்” தான். ரோப்சனின் பாடலைப் போல, அது ஒரு இனத்திற்கான உண்மையான படைப்பு.
நார்டிக்மயமாக்கப்பட்ட நீக்ரோ அறிவுஜீவிகள் மற்றும் சில வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் விருப்பங்களுக்கு மாறாக, நேர்மையான அமெரிக்க நீக்ரோ இலக்கியம் ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது. இப்போது நான் நீக்ரோ நாடகத்தின் எழுச்சிக்காகக் காத்திருக்கிறேன். உலகளாவிய புகழ் பெற்ற நமது நாட்டுப்புற இசை, வரவிருக்கும் மாபெரும் தனிப்பட்ட அமெரிக்க நீக்ரோ இசையமைப்பாளரின் மேதைமைக்குத் தன்னை வழங்குகிறது. அடுத்த பத்தாண்டுகளில், கருப்பின கலைஞர்களின் வளர்ந்து வரும் கலைப் பள்ளியின் படைப்புகளைக் காண எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இவர்கள் கருப்பு முகங்களின் அழகை வரைந்து செதுக்கி, புதிய நுட்பங்களால் தங்கள் ஆன்ம உலகின் வெளிப்பாடுகளை உருவாக்குவார்கள். நெருப்பைப் போல நடனமாடும் நீக்ரோ நடனக் கலைஞர்களும், கேட்பவர்கள் அனைவருக்கும் நமது பாடல்களைக் கொண்டு செல்லும் பாடகர்களும் நாளை இன்னும் அதிக எண்ணிக்கையில் நம்மோடு இருப்பார்கள்.
என் சொந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை கருப்பொருளிலும் அணுகுமுறையிலும் இனம் சார்ந்தவை, மற்றும் எனக்குத் தெரிந்த வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவை. அவற்றில் பலவற்றில் ஜாஸின் அர்த்தங்களையும், தாளங்களையும் பிடிக்கவும் தக்கவைக்கவும் முயல்கிறேன். இந்தக் கவிதைகளில் என்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு வாசிப்புக்குப் பிறகும் என் சொந்த மக்களிடமிருந்து எழும் இது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்: நீக்ரோக்கள் எப்போதும் நீக்ரோக்களைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வெள்ளையர்களுக்கு உங்கள் சில கவிதைகளை நீங்கள் வாசிக்காமல் இருந்தால் நல்லது. கேபரே (cabaret) போன்ற இடத்தில் உங்களுக்கு எப்படி ஏதாவது சுவாரசியமானதைக் காண முடிகிறது? கறுப்பின மக்களைப் பற்றி ஏன் எழுதுகிறீர்கள்? நீங்கள் கருப்பர் அல்லவே. இத்தனை ஜாஸ் கவிதைகள் எழுத உங்களை எது தூண்டுகிறது?
ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜாஸ் அமெரிக்க நீக்ரோ வாழ்க்கையின் உள்ளார்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று. நீக்ரோ ஆன்மாவில் அடிக்கும் நித்திய டாம்-டாம் ஓசை – வெள்ளை உலகத்தின் களைப்புக்கு எதிரான கிளர்ச்சியின் டாம்-டாம், சுரங்கப்பாதை ரயில்களின் உலகம் மற்றும், வேலை, வேலை, வேலை என்ற உலகத்திற்கு எதிரான டாம்-டாம்; சிரிப்பில் விழுங்கப்பட்ட வலியின் டாம்-டாம். இருப்பினும் பிலடெல்பியாவின் உயர்தர பெண்மணி தன் இனம்தான் அதை உருவாக்கியது என்று சொல்ல வெட்கப்படுகிறார், மேலும் நான் அதைப் பற்றி எழுதுவதையும் அவர் விரும்புவதில்லை. அவரது ஆழ்மனதின் “வெள்ளையே சிறந்தது” என்ற எண்ணம் அவர் மூளையில் ஓடுகிறது. வெள்ளை ஆசிரியர்களின் கீழ் பல ஆண்டுகள் படித்தது, வாழ்நாள் முழுவதும் வெள்ளை புத்தகங்கள், படங்கள், செய்தித்தாள்கள், வெள்ளை நடத்தை, ஒழுக்கம் மற்றும் பியூரிடன் (Puritan) தரங்கள் ஆகியவை அவரை ஸ்பிரிச்சுவல்களை வெறுக்க வைத்தன.
இப்போது அவர் ஜாஸையும் அதன் அனைத்து வெளிப்பாடுகளையும், அதேபோல் இனம் சார்ந்த கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழிவாகப் பார்க்கிறார். வினோல்ட் ரைஸின் (Winold Reiss) நீக்ரோ உருவப்படங்கள் “மிகவும் நீக்ரோவாக” இருப்பதால் அவருக்குப் பிடிக்கவில்லை. யாரிடமிருந்தும் தன் உண்மையான உருவப்படத்தை அவர் விரும்புவதில்லை. கலைஞன் தன்னைப் புகழ்ந்து பேச வேண்டும், எல்லா நீக்ரோக்களும் தான் இருக்க விரும்புவது போல் திருப்தியானவர்களாகவும், ஆன்மாவில் வெள்ளைத்தன்மைக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்று வெள்ளை உலகம் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இளைய நீக்ரோ கலைஞன் வெளியாட்களிடமிருந்து ஏதேனும் கடமைகளை ஏற்றுக்கொண்டால், தன் மக்களின் அபிலாஷைகளில் மறைந்திருக்கும் “நான் வெள்ளையனாக இருக்க விரும்புகிறேன்” என்ற பழைய முணுமுணுப்பை, தன் கலையின் சக்தி மூலம், “நான் ஏன் வெள்ளையனாக இருக்க விரும்ப வேண்டும்? நான் ஒரு நீக்ரோ – அழகானவன்!” என்று மாற்றுவது அவனது கடமை.
“நான் ஒரு கவிஞனாக இருக்க விரும்புகிறேன், ஒரு நீக்ரோ கவிஞனாக அல்ல” என்று கூறும் கருப்பின கவிஞனைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன். ஏனெனில் அவன் சொந்த இனத்தின் உலகம் வேறு எந்த உலகத்தைப் போலவும் சுவாரசியமானதல்ல என்று அவன் கருதுகிறான். தன் சொந்த முகத்தின் வினோதமான வெள்ளையற்ற தன்மைக்கு அஞ்சி, நீக்ரோ முகங்களை வரைவதிலிருந்து விலகி கல்வியாளர்களின் பாணியில் சூரிய அஸ்தமனங்களை வரைவதற்கு ஓடும் கருப்பின கலைஞனைப் பார்த்தும் நான் வெட்கப்படுகிறேன். ஒரு கலைஞன் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க சுதந்திரமாக செயல்பட வேண்டும், ஆனால் அவன் தேர்ந்தெடுக்கக்கூடியவற்றுக்கு ஒருபோதும் அஞ்சுபவனாக இருக்கக்கூடாது.
நீக்ரோ ஜாஸ் இசைக்குழுக்களின் ஓசையும், ப்ளூஸ் (Blues) பாடும் பெஸ்ஸி ஸ்மித்தின் (Bessie Smith) கர்ஜிக்கும் குரலும், கருப்பின அரை-அறிவுஜீவிகளின் மூடிய காதுகளை அவர்கள் கேட்கும் வரை, ஒருவேளை புரிந்துகொள்ளும் வரை, ஊடுருவட்டும். “வாட்டர் பாய்” பாடும் பால் ரோப்சன், ஹார்லெமின் தெருக்களைப் பற்றி எழுதும் ருடால்ஃப் ஃபிஷர் (Rudolph Fisher), ஜார்ஜியாவின் இதயத்தைத் தன் கைகளில் வைத்திருக்கும் ஜீன் டூமர், விசித்திரமான கருப்பு கற்பனைகளை வரையும் ஆரன் டக்ளஸ் (Aaron Douglas) ஆகியோர், திருப்தியான நீக்ரோ நடுத்தர வர்க்கத்தை அவர்களின் வெள்ளையர்களின், மரியாதைக்குரிய, சாதாரண புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களிலிருந்து திசைத்திருப்பி, தங்கள் சொந்த அழகின் ஒளிர்வைப் ரசிக்க வைக்கட்டும். இப்போது படைக்கும் நாங்கள் இளைய நீக்ரோ கலைஞர்கள், பயமோ வெட்கமோ இன்றி எங்கள் தனிப்பட்ட கருஞ்சருமத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இதனால் வெள்ளையர்கள் மகிழ்ந்தால் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். இல்லையென்றால், அது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் அழகானவர்கள் என்று எங்களுக்குத் தெரியும். அசிங்கமானவர்களும்கூட. டாம்-டாம் அழுகிறது, டாம்-டாம் சிரிக்கிறது. கருப்பின மக்கள் மகிழ்ந்தால் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். இல்லையென்றால், அவர்களின் அதிருப்தியும் எங்களுக்கு முக்கியமல்ல. நாளைக்கான எங்கள் கோவில்களை எங்களால் முடிந்த வலிமையுடன் எழுப்புகிறோம், மற்றும் மலை உச்சியின் மீதேறி நாங்கள் எங்களுக்குள் சுதந்திரமாக இருக்கிறோம்.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை ஆய்வு மாணவரான கதிரவன் அண்ணாமலை, ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியம், திராவிட இயக்க இலக்கியம் குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.








Leave a Reply