நாம் காண எத்தனையோ பேர் பூமிக்கு வந்து செல்கிறார்கள், அவர்களில் பலர் எத்தனையோ துறைகளில் பங்காற்றியும் செல்கிறார்கள். அதில் அரிதாக ஒருசிலர் தங்கள் தனித்தன்மையான பார்வையின் பொருட்டு படித்துத் தீராத நூலாகவும் எதிர்கால வரலாறாகவும் மாறுகிறார்கள். அப்படி ஒருவர்தான் தொ.ப.
தமிழ்ச்சூழலில் தனித்தன்மையான ஆய்வுப் புலத்தில் அயராது இயங்கிச் சென்றவர்களில் தொ.ப முதன்மையானவர். தொ.ப வின் ஆய்வு முறை முற்றிலும் அவருக்கே உரித்த சுயமான தனித்த கண்டுபிடிப்புகளை, அக வெளிச்சத்தை முதன்மையாகக் கொண்டது. தொன்மங்கள் சடங்குகளை அவர் அணுகும்விதம் ஆச்சர்யமளிக்கக்கூடியது. வரலாற்றுப் பார்வையோடு அகத்தூண்டலை முதன்மையாகக் கொண்டு அவர் தேடிக் கண்டடைந்த இடங்கள் வேறு யாருக்கும் தரிசனமாகாதது மட்டுமல்ல; அவரால் மட்டுமே அணுக முடிந்ததாக அடையாளங்காணத்தக்கதாக உள்ளது.
இலக்கிய உலகில் அரிதான சில சந்திப்புகள் வாழ்நாளில் அற்றுப்போகாத நினைவின் பொக்கிஷங்களாக மாறுகின்றன. அவ்வகையில், திருநெல்வேலியில் தமிழ் அறிஞர் தொ.ப. அவர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்வு என் வாழ்வின் மிகப் பெரும் பாக்கியமாக நல் அனுபவமாக அமைந்தது. அந்த நாளை திரும்ப நினைவுகூரும் பொழுதெல்லாம், என் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி பொங்கி எழுகிறது. சாதாரண வாசகர் ஒருவராக நான் அவரை அணுகியபோதும், அவர் எந்தப் பெருமிதமுமின்றிப் பாசாங்கற்ற புன்னகையுடன் வரவேற்றார். தம் இல்லத்தில் உட்கார வைத்துப் பாசமுடன் தேநீர் கொடுத்து உபசரித்தார். ஒரு பிரசித்தி பெற்ற தமிழறிஞர் தனக்கு முன்பும் தனக்குள்ளும் தான் சுயமாகத் தேடிச் சேர்த்த இலக்கியம் மற்றும் ஆய்வுப் புலத்தின் எந்த அதிகார மமதையுமற்று எளிமையின் அபூர்வமாக அமர்ந்திருந்தது எனக்கு ஆச்சர்யமளித்தது. அந்த சம்பூர்ண எளிமையின் ஆச்சர்யத் தருணமே, அவர் ஆளுமையின் மேன்மையை எனக்கு உணர்த்தியது.
இலக்கியம் குறித்துப் பேசத் தொடங்கியபோது, அவரது வார்த்தைகள் எளிய தமிழில் இருந்தாலும் ஆழமான சிந்தனையைச் சுமந்திருந்தன. சங்க இலக்கியத்தின் வரிகள் முதல் சமகாலப் படைப்புகள் வரை, ஒவ்வொன்றையும் அவர் புலனாகச் சொன்னார். கல்வெட்டியல் குறித்துரையாடும்போது, தமிழ் மொழியின் வரலாற்று வேர்கள் எவ்வாறு கல்வெட்டுகளில் பதிந்துள்ளன என்பதைப் புதிய முறையில் எடுத்துரைத்தார். கல்வெட்டுகளைப் படிப்பது வெறும் வரலாற்றை அறிதல் அல்ல, மண்ணின் மூச்சைத் தொடுதல் என்று அவர் கூறியபோது, தமிழ் மொழியின் உயிர்மை புலப்பட்டது.
அவரது பேச்சு முறையில் போலிப் பாசாங்குகளோ வீண்பெருமையின் பாவனைகளோ இல்லாமலிருந்தது; உண்மை தன் அடியாழத்தைத் திறந்து காட்டியது போலிருந்தது. அவருடைய குரல் நமது மண்ணின் மகா ஆழத்திலிருந்து மேற்கிளம்பி ஒலித்தது போலிருந்தது.
“இலக்கியம் என்பது அழகு காணும் கண்ணும், கல்வெட்டு என்பது வரலாறு பேசும் குரலும்” என்ற வாக்கியம் எனது நினைவில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒப்பற்ற ஆய்வுப் பார்வையில் ஒரு அறிஞராகப் பல நூல்களை எழுதியவர் என்றாலும், அவர் வாசகரில் வாசகராகத் தென்பட்டதும் அன்றைய சந்திப்பில் அவர் வெளிப்படுத்திய அந்த ஒளிவுமறைவற்ற யதார்த்த எளிமையின் தூய அன்பும், அவரை ஒருவகையில் “பெரியவர்” ஆக்கியது.
திருநெல்வேலியின் அந்த மதிய வேளையில் நடந்த உரையாடல், ஒரு அறிஞரின் பன்னெடுங்கால நூலகத்தில் பயணித்தது போல இருந்தது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் எவ்வாறு தமிழரின் வாழ்வை, நம்பிக்கையை, கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன என்பதையும் அவர் ஆழமாக விவரித்தார். “கல்லில் பொறித்த எழுத்து காற்றால் அழியாது; மனதில் பொறித்த சிந்தனை தலைமுறைகளைத் தாண்டிச் செல்கிறது” என்ற அவரது கருத்து, எனக்குப் பெரிய உணர்வைத் தந்தது.
இவ்வுலகில் பலரும் புகழைப் பெறுவதற்காக வாழ்கிறார்கள். ஆனால் தொ.ப. அவர்கள் புகழைத் தாண்டி, பாசாங்கற்ற சுத்தமான தமிழின் வழியே தமது ஆளுமையை உருவாக்கியவர். ஒரு வகையில் அவரின் வாழ்வு, அழிக்கவியலாத இலக்கியச் சின்னமாகவும், கல்வெட்டின் உறுதியான கல்லைப் போலவும் நம்முன் நின்று கொண்டிருக்கிறது.
காலங்கள் நழுவி ஓடும் போதும் இன்றும் கூட அந்த அரிய சந்திப்பு மனக்கண்களின் தரிசனமாகவும் என் நினைவில் அழியாத ஓவியமாகவும் நிலைத்திருக்கிறது. இலக்கியம் மற்றும் கல்வெட்டியல் குறித்து அவர் கூறிய சிந்தனைகள் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக உள்ளன. எளிமை, பாசம், அறிவு இம்மூன்றும் சேர்ந்த கலந்த ஓர் அற்புதப் பேருருவம்தான் தொ.பா.
வாழ்க்கையில் சில நற்சந்திப்புகள் அரிய அறிவுச் களஞ்சியத்தைத் திறந்து காட்டி பூரிக்கும் போது, சில பிரிவுகள் நெஞ்சை உலுக்கும் துயரமாகவும் மாறுகின்றன. தமிழ் அறிஞர் தொ.ப. அவர்களை திருநெல்வேலியில் நான் சந்தித்த அனுபவம் என் வாழ்வில் மறுக்க முடியாத பெருமையென்றாலும் அந்தச் சந்திப்பின் வெறும் இருபது நாட்களுக்குள் அவர் காலத்தில் மறைந்துவிட்டது என் இதயத்தில் இன்றளவும் ஆழமான வலியாகவுள்ளது.
அவரைச் சந்தித்த நாள் என் நினைவில் இன்னும் தெளிவாக நிற்கிறது. எளிமையான புன்னகையுடன் அவர் என்னை அன்பார்ந்த தோழமையுடன் வரவேற்றார். “வாருங்கள், உட்காருங்கள்” என்ற பாசமான வார்த்தைகள், நானும் கூட அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமென அப்போது உணர வைத்தது. அவர் எளிய மனப்பாங்கில் மகிழ்வுடன் பகிர்ந்த தேநீரின் சுவை இன்னும் என் நாவிலுள்ளது. ஒரு நிகரற்ற பண்பாட்டு ஆய்வறிஞரின் பெருமையை வியப்பதா அல்லது அவர் காட்டிய மனிதத்தன்மையைப் பகிர்வதா என வியக்கிறேன். அவர் தன் காலத்தில் தன் மாணவர்களையும் வாசக அன்பர்களையும் எவ்வளவு உயர்வாகக் நடத்தியிருப்பார் என்பதை யோசிக்கும் வேளையில் மனதில் மெய்சிலிர்ப்பு பொங்குகிறது.
நான் சந்தித்த நாளில் நீண்ட நேரம் இலக்கியம், கல்வெட்டியல், தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து விரிவாகவும் ஆழமாகவும் உரையாடினார். அவரது வாக்கு ஆய்வின் ஆழமும் பகிர்வின் எளிமையும் கலந்தவை. “கல்வெட்டு என்பது கல்லில் பொறித்த வரலாறு மட்டும் அல்ல; அது தமிழரின் மூச்சு” என்று அவர் ஒலிபடச் சொன்ன கணத்தில், தமிழ் நிலத்தின் தொன்மை என் உள்ளத்தில் புதிதாய் ஒளிர்ந்தது. வாழ்க்கை நாமறியாத துக்கத்தைக் கொண்டு வரும் வழியில் நாம் என்ன செய்வோம்?
துரதிஷ்டவசமாகச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களுக்குள் தொ.ப காலமான செய்தி காதில் ஒலித்த போது விதியின் வலிய கைகளைக் கடிந்து கொண்டேன். அவர் மறைந்த செய்தியைக் கேட்டதும் நிகழ்ந்து முடிந்த எங்கள் சந்திப்பின் உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையும், என் மதிப்பிற்குரிய பேராசானின் நகைப்பொலியும், நினைவின் நிழலில் ஒளி வீசியது. ஒரு நற் தமிழ் அறிஞரைச் சந்தித்த பாக்கியம் கிடைத்தும் அது நீண்ட பயணத்தைத் தொடராமல் நிலை பெயர்ந்ததின் வருத்தம் இன்றும் தீரவில்லை.
அவரது இறுதிச் சடங்கில், நான் என் மனைவியுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினேன். அப்போது அவரது பூதவுடலின் அண்மையில் நின்ற கணம், இருபது நாள் முன் அவர் அளித்த தேநீரின் வாசனையும், அவர் பகிர்ந்த வார்த்தைகளின் குரல் ஒலியும் என் மனதில் நிறைந்தது. மனித வாழ்க்கை சுருக்கமானது; ஆனால் பயன்பாடு கருதாமல் தன் காலப்பரப்பில் ஒருவர் தன் நிலத்தில் விட்டுச் செல்கிற சிந்தனைகள், நூல்கள், கல்வெட்டு ஆய்வுகள் பூமியின் கடைசி மனிதனின் தொடுகை வரையிலும் கூட நிலைத்திருக்கும் என இப்போது எண்ணிக் கொள்கிறேன்.
அறிஞர் தொ.ப. அவர்களின் பூரண எளிமை, பாசாங்கற்ற மனிதத்தன்மை, தமிழ் மீதான பேரன்பு நம் மனங்களில் நிலைத்த தன்மையுடையது. அவர் காலத்தில் மறைந்தாலும், அவர் தன் ஆய்வுப் புலத்தில் தனித்தன்மையில் பேராளுமையில் வெளிப்படுத்திய புதிய சிந்தனைகள், இலக்கியக் கருத்துகள், கல்வெட்டு வாசிப்பின் நுணுக்கங்கள் அனைத்தும் பலருடைய உள்ளத்தில் நிறைந்துள்ளது போல என்னுள்ளும் ஒளிவீசுகின்றது. அவரைச் சந்தித்தது என் வாழ்வில் ஒரு பெரும் பேறு என்பேன். அவரை காலம் நம்மிடமிருந்து பிரித்தது மாதுயரமென்றாலும் அவருடைய நூல்களில் அவர் தன் கைபட எழுதிய ஒவ்வொரு வரியிலும் தன் சுயாதீனக் கண்டு பிடிப்புகளில் அவருக்கே உரித்தான புதிய வெளிச்சங்களில் நம்மிடையே இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் வாழ்வாரென நம்புகிறேன். அபூர்வமான நல் ஆசானாக நம்மிடையே வாழ்ந்து சென்ற அறிஞர் தொ.ப வையும் அவருடைய சம்பூர்ண எளிமையையும் இன்னுமொரு முறை அவருடைய அன்பில் நெகிழ்ந்து பணிவுடன் தொழுதுகொள்கிறேன்.
‘சாதி என்பது குரூரமான எதார்த்தம்’ நூலின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற ஓவியம்
தேனி மாவட்டத்தின் எழில் சூழ்ந்த நிலப்பரப்பில், பெரியகுளம் அடுத்துள்ள வடுகபட்டி எனும் பேரூர் இவருக்குப் பிறப்பிடமானது. இளம் வயது முதல் தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டவர். தாவரவியல் பட்டதாரி. இவரது வாசிப்பு சங்க இலக்கியத்தின் செழுமையைத் தொட்டு, நவீன இலக்கியத்தின் வீச்சு வரை ஆழமான ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் பயணிக்கிறது. இவர், இலக்கியத்தின் தொன்மை மரபையும், புதுமையின் போக்குகளையும் கற்றுணர்ந்து, அதில் மிகுந்த பயிற்சி கொண்டவர். தற்போது இவர் தமிழ் வளர்க்கும் பணியோடு கூடவே, அரசுத் துறையிலும் பொறுப்புடன் பணியாற்றி வருகிறார்.








Leave a Reply