
என்னைப் பற்றி
வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளையான நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இளவயதில் தாயை இழந்ததாலோ என்னவோ தகப்பன் சாமியாலும், என் மூத்த இரு சகோதரர்களாலும் சர்வ சுதந்திரமாய் வளர்க்கப்பட்டேன். கடந்த 18 வருடங்களாக மென்பொருள் துறையில் சென்னையில் வேலை. இழந்துவிட்ட தாயின் நகலாய் 15 வயதில் ஓர் அழகான பெண் குழந்தை. உணவக மேலாண்மைக் கல்லூரியில் விரிவுரையாளராய்க் கணவர்.
வாசிப்பில் எப்படி இந்த ஆர்வம்?
வாசிப்பின் தொடக்கம் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். தனிமையைப் போக்க, பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க வாசிப்பாங்க. இளவயதில் தாயை இழந்ததால் ஏற்பட்ட தனிமையைப் போக்கவும், பள்ளி ஆரம்ப நாட்களில் பரிசாகக் கிடைத்த புத்தகங்களுமே என் வாசிப்பின் ஆரம்பப் புள்ளி. நாளாக நாளாக வாசிப்பின் தீவிரம் அதிகமாகி எழுதுவதிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. மாறுபட்ட படைப்புகளை வாசிக்கும்போது அவற்றுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையை வாசிப்பு உருவாக்கியது. எனக்கான தனிமனித ஒழுக்கத்தைச் சீர்படுத்தியதில் வாசிப்பிற்கும், புத்தகங்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
சிறுவர்மலர் போன்ற வாராந்தரிகள் தொடர்ந்து அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி என்று வாசிக்கத் தொடங்கினேன். அதன்பின் ஜெயகாந்தன், சுஜாதா, தி.ஜானகிராமன், அம்பை, கி.ராஜநாராயணன், ஜெயமோகன் எனத் தீவிர இலக்கியத்தை நோக்கி நகர்ந்தேன். பின்பு தொ.பரமசிவன், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோரின் ஆய்வு நூல்களைத் தொடர்ந்து தற்போது எழுதிக்கொண்டிருக்கும் மயிலன் சின்னப்பன், பா.திருச்செந்தாழை வரைக்குமான என் வாசிப்பென்பது ஆர்வத்தினால் வந்ததல்ல, அன்றாடத்தின் ஒன்று.
வாசிப்பு இன்றைய சூழலில் ஏன் அவசியம்.?
இன்றைய காலகட்டத்தில் நாம் இயந்திரத்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல வேலைகளை இயந்திரங்களே செய்கின்றன. அலைபேசி, மடிக்கணினி, தொலைக்காட்சிப் பெட்டி என ஏதோ ஒரு செவ்வகத்திரை நம் நேரங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சகமனிதரின் துயரைச் சோகமான ஸ்மைலி போட்டுக் கடந்து செல்லும் தருணத்தில், வாழ்க்கையை எமோஜியாகப் பார்க்கத் துவங்கிவிட்டோமோ என்ற அச்சம் எழுகிறது. சக மனிதனின் இருப்பை, உணர்வை, அவர் மீதான புரிதலை, கருணையை, அன்பை அறிந்து அதோடு ஒன்றிப் போக வாசிப்புதான் கற்றுத்தரும்.
ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை வாசிக்கும்போதுதான் காட்டில் யானைகளின் உலாவல் எத்தகைய இயற்கைத்தேவை என்பதை அறிந்துகொள்ள முடியும். அக்காட்டில் அவன் வீசியெறிந்த ஒரு பியர் பாட்டில் யானையின் கால்களில் குத்தினால் என்ன ஆகுமென்ற அறிவே அப்போதுதான் அவனுக்கு வரும். வால்காவிலிருந்து கங்கை வரையும், சேப்பியன்சும் நம் ஆதி வரலாற்றைப் பேசுபவை. அவற்றை வாசிக்கும்போது எத்தனை இன்னல்கள் கடந்து இந்நிலையை அடைந்திருக்கிறோம் என்பது புலனாகும். வந்தபாதையை அறிந்துகொண்டால்தான் வந்த இடத்தின் வாய்ப்புகளை அறம்பட நிகழ்த்த முடியும். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதைதான் மனிதர்களின் தனிப்பட்ட சுதந்திரங்களுக்குள் தலையிடக்கூடாதென்ற பாடத்தை எனக்குக் கற்பித்தது.
அலி, 9, உஸ்ஸ் என்று திருநங்கைகளைக் கேலி செய்தே பழக்கப்பட்ட சமூகம் கி.ராஜநாராயணனின் கோமதி கதையை வாசிக்கும் போது அதிர்ந்து போகும். அவ்வதிர்வு இன்றைக்கு முக்கியம். பால் சக்கரியாவின் ‘இதுதான் என் பெயர்’ காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டது. கதையின் வழியாக வரலாறு சொல்லப்படுகிறது. மனித மனங்களின் நிலையற்றத் தன்மையைக் குறித்து ஆண்டன் செக்காவ் எழுதுகிறார், அவரை வாசிக்கும்போது நாம் மட்டும் தனியர்கள் இல்லையென்ற ஆறுதல் பிறக்கும். எத்தனையோ உளச்சிக்கல்களை யாரிடம் சொல்வவெனத் தவித்து நிற்கையில் அதற்கொரு தீர்வு ஒரு புத்தகத்தில் எளிமையானதாக இருக்கிறது. எது நமக்கான எழுத்து என்றறிய முதலில் எதையேனும் வாசிக்கவேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் நமக்குத் தேவையான எழுத்து நம்மை வந்தடையும். ரூமி சொல்வது போல எதை நீ தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது.
இன்று, நன்றாகப் படித்து வேலைவாங்கிக் கைநிறைய சம்பாதித்துப் பொருட்கள் வாங்கிக் குவித்து சந்தோசத்தைத் தேடிக் கொண்டிருக்கும் வாழ்வில், வாழ்வை தூரம் நின்று ரசிக்கும் தத்துவத் தரிசனங்களுக்கு வாசிப்பை விட வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய கால இளம்பெண்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க எழுத்தாளர்கள் செய்ய வேண்டியவை.?
இளம்பெண்களுக்குப் பிடித்தமாதிரி என்றோ, இளம் ஆண்களுக்குப் பிடித்தமாதிரி என்றோவெல்லாம் அறுதியிட்டு எழுதுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் எழுதுகிறான் அவ்வளவுதான். இளம்பெண்களை வாசிப்பின் பக்கம் ஈர்ப்பதற்கு எழுத்தாளன் ஒன்றும் செய்யமுடியாது, அது அவன் வேலையே அல்ல. இளம்பெண்களை வாசிப்பின் பக்கம் ஈர்ப்பதற்கு ஏதாவது செய் என்று எழுத்தாளனை நிர்பந்திப்பதே வன்முறை என்பேன். எழுத்தாளனை விட்டுவிடுங்கள் அவன் உலகம் வேறு. அவன் எழுதட்டும் அவன் எழுதியவற்றைக் கொண்டுசேர்க்கும் பணியை நம் போன்றோர் செய்தாலே போதும்.
காதலிக்கு, தோழிக்கு, தங்கைக்குப் புத்தகங்களைப் பரிசளியுங்கள். ஏதாவதொரு நாளில் அப்புத்தகம் அவர்களால் வாசிக்கப்படும். பகீரதப் பிரயத்தனங்கள் செய்து ஒரு புத்தகத்தை வாங்க வைக்கலாம். ஆனால் வாசிப்பென்பது நடைப்பயிற்சி போலான ஒரு வாழ்க்கைமுறை. அதனைத் தேர்ந்தெடு என்று கைகாட்டத்தான் முடியும், கட்டாயப்படுத்த முடியாது. தவிர நான் கண்டவரையில் இன்றைய இளம்பெண்கள் நிறையபேர் வாசிப்பின்பால் ஆர்வமாகவே உள்ளார்கள். இதற்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குழுமிய பெண்களே சாட்சி.
பெண்களின் வாசிப்புத்தன்மை இப்போது குறைந்திருக்கிறதா.?
இலக்கியம் என்பது முந்தைய தலைமுறையில் அநேகப் பெண்களால் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அதற்குக் காரணம் அதிலுள்ள பட்டவர்த்தனமே. அத்தனை எளிதில் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் குடும்ப நாவல்கள் மட்டும், வாரப்பத்திரிகைகள் மட்டும் வாசித்த பெண்கள் இருந்தார்கள். இன்றைய காலம் நிறைய வாசல்களைத் திறந்து போட்டிருக்கிறது. வாசிப்பின் ஆழமும் கூடி இருக்கிறது. தூரப் பயணத்தில் ஒரு பெண் ஜி.நாகராஜன் ஆக்கங்களை மடியில் கிடத்தியிருக்கக் கண்டேன். ஒரு பெருமையான சிரிப்பை யாருமறியாமல் சிரித்துக் கொண்டேன்.
பெண்களுக்கு வாசிப்பின் மூலம் கிடைக்கும் பயன்கள் என்றால்.?
விடுதலை. ஆம் விடுதலை. பொதுவாகவே பெண்ணுக்கு மனத்திணறல்கள் அதிகம். அதுவும் மாதவிடாய்க் காலங்களில் அவள் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதைக் கணிக்கவே முடியாது. அது உயிர்த்துடிப்புமானியைப் போல ஏறி இறங்கக்கூடியது. வாசிப்புப் பழக்கம் உள்ள பெண் மனத்திணறல்களில் இருந்து எளிதாக விடுபடுகிறாள். தன்னைத்தானே சுயப் பரிசீலனை செய்துகொள்ள அவளுக்கு வாசிப்பு ஒரு கருவி. முடிவெடுக்கும் திறன்களைக் கூட்டிக்கொள்கிறாள். கல்பட்டா நாராயணின் ‘சுமித்ரா’ கதையை வாசித்துவிட்டு “நான்தான் சுமித்ரா அவள் நான்தான்” என்று கல்பட்டா நாராயணனுக்கு நூறு கடிதங்களுக்கு மேல் வந்ததாம். ஒரு கதையின் நாயகியாகத் தன்னைப் பொருத்தி வைத்துப் பார்க்கும் போது இந்த உலகம் பாவமென்று கருதியவற்றில் இருந்து நாயகி விடுபடும்போது ஒரு வாசகியும் விடுபடுகிறாள். அதன் பிறகு இந்த உலகத்தை அவள் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறாள். அது தீங்கற்ற, அழகு செழித்த, அன்பு தோயும் உலகாக அவளுக்கு அருள்கிறது.
ஆரம்பகட்ட பெண் வாசகர்களுக்கு உங்களின் அட்வைஸ்?
எடுத்ததும் பெரிய பெரிய புத்தகங்களை நாவல்களை வாசிக்க முற்படாதீர்கள், அது உங்களை அயற்சியாக்கிவிடும். இலகுவான வாசிப்பைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பான்மையினர் சுஜாதாவில் இருந்து தொடங்குங்கள் என்பார்கள். என்னைக் கேட்டால் அம்பையிலிருந்து வாசிப்பைத் துவங்குங்கள் என்பேன். சிறிய கதைகளாக வாசியுங்கள். குறைந்தது ஐந்து பக்கங்களேனும் தினமும் வாசித்தாக வேண்டும் என்று கோட்பாடு வைத்துக்கொண்டால், ஆறாவது பக்கத்தை விரல் தானாகத் திருப்பும். அந்நாளில் நீங்கள் தீவிர வாசிப்பிற்குள் அடியெடுத்து வைத்திருப்பீர்கள்.








Leave a Reply