Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ஆண்குறிகள் அழுக்கானவை

நீலாவணை இந்திரா
நீலாவணை இந்திரா
February 1, 2026
ஆண்குறிகள் அழுக்கானவை

1

கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன்.

ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.)

நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான்.

அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம்.

அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான்.

2

சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது.

கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது.

இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள்.

‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’

கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள்.

ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள்.

தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள்.

ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான்.

விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை.

‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான்.

‘இல்லை’ என்றாள் மர்யம்.

சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான்.

3

தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான்.

‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான்.

நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான்.

அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள்.

கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது.

சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர்.

4

வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன்.

வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார்.

பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே!


illustration by Sam Weber

நீலாவணை இந்திரா
நீலாவணை இந்திரா

பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார்.
Share :

13 responses to “ஆண்குறிகள் அழுக்கானவை”

  1. Shothris
    February 1, 2026

    Wow சிறப்பு தோழர்
    அழுக்கான ஆண்குறிகளை சுத்தம் செய்ய வந்த வருண பகவானே…
    Amazing..

    Reply
  2. .
    February 1, 2026

    Unexpected ending

    Reply
  3. Thasapthan Mahendrarajah
    February 2, 2026

    A brave and thought-provoking story. Your way of expressing reality is impressive. Respect and appreciation to you sir 👏🔥

    Reply
  4. எழுத்தாளர். சிவ மறலன்
    February 3, 2026

    அலாதியான ஆண்குறிகள் இங்கு அழுக்கானவைகளே… ஆணியில் அடித்தாற்போல் ஆழப் பதித்து,அழுக்குகளை அடித்து துவைத்து வெளுக்கக் களம் இறங்கியிருக்கும் சிறுகதை எழுத்தாளரே ஓங்குக உன் எழுத்தாணி 👏🏻👏🏻👏🏻

    Reply
  5. அல்லிராஜ்
    February 3, 2026

    கதைக்களம் …மிக அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது தலைப்பு மிகச்சரிதான் என்று.

    Reply
  6. Arun
    February 3, 2026

    சிறப்பான கதை
    வாழ்த்துகள்

    Reply
  7. Mr.K.Vithujan
    February 8, 2026

    எதிர்பார்க்காத ஒரு முடிவு… மொழி நடை மிகவும் நெருக்கமான பாசையாகவே இருந்தது..
    வாழ்த்துக்கள் அண்ணா ⚡❤️

    Reply
  8. Aashif ilahi
    February 9, 2026

    வாசிக்கும் போது விருவிருப்பாக இருந்தது. உண்மைதான் இன்று நிறைய ஆன்குறிகள் அழுக்கானவைதான். Expecting part 2

    Reply
  9. Meenaasundhar
    February 9, 2026

    சிறப்பான ழொழி. களத்தைத் துணிவுடன் கையாண்டுள்ளார். வாழ்த்துகள்.

    Reply
    1. Kapishanth
      February 21, 2026

      தற்காலத்தில் பாதிரியார் போல பலர் சமூகத்தில் நம்மிடையே போலி விம்பத்துடன் விமர்சனம் செய்து வாழ்ந்து கொண்டு தான் இருகின்றனர், அந்த விம்பம் நொறுங்கிகையில் தான் அவர்களத்து அகத்தின் அழுக்கு வெளிப்படும், பாதிரியார் தனது மச்சத்தை மறைத்தாலும் முடிவில் அகம் புறத்தை காட்டி கொடுத்தது.

      Reply
  10. சுப சி
    February 9, 2026

    ஆண் தனது ஐந்து நிமிடம் ஆசையை‌எளிதில் நிறைவேற்றி மறந்து விடுகிறான். பெண் ஆயுள் முழுவதும் அதற்கான அவமதிப்பு அடைகிறாள்

    Reply
  11. Kathuskan Thavarajah
    February 10, 2026

    சிறந்ததொரு சிறுகதை வாசித்த நிறைவான அனுபவம். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பாத்திரங்களின் ஒவ்வொரு பரிமானங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் 🙌

    Reply
  12. Dineshshankar
    February 22, 2026

    இன்றைய காலக்கட்டத்தில் இவ்வாறான எழுத்தாளர்கள் இருப்பதை எண்ணி வியக்கிறேன். உங்களுடைய அடுத்த ஆக்கப்பூர்வமான கதைக்காக ஆவலுடன்…….காத்திருக்கிறோம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top