Art : De Branch En Branche
தேனும் தண்ணீரும்
தண்ணீர் வேகமாகப் பாய்கிறது. தேன், தண்ணீரைவிட வேகம் குறைவாகப் பாய்கிறது. தண்ணீரைவிட வேகம் குறைவாகப் பாய்வது ஏன் என்று தேனிடம் கேட்டேன்.
தண்ணீர் அடர்த்தி குறைவான திரவம். தேன், தண்ணீரைவிட அடர்த்தி அதிகமான திரவம். அடர்த்தி குறைவாக இருப்பதால் தேனைவிட தண்ணீர் வேகமாகப் பாய்கிறது.
இப்படிதான் தேன் பதில் சொல்லும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தேன் அப்படிச் சொல்லவில்லை. இதோ, இப்படிச் சொன்னது.
“நான் உயிர்களின் தாகம் தீர்ப்பதில்லை. தண்ணீர்தான் உயிர்களின் தாகத்தைத் தீர்க்கிறது. அப்படித் தாகத்தைத் தீர்ப்பதற்காக தண்ணீர் என்னைவிட வேகமாகப் பாய்ந்தோடுகிறது.

ஓவியம் : பு.மகிழ்வதனி
உடலும் வாழ்வும்
புலி ஒன்று தன் குட்டிகளுடன் ஆற்றங்கரைக்குப் போனது.
எதிர்கரையில் ஒரு யானைக் கூட்டம் இருந்தது. அந்த யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தன.
புலிக் குட்டிகள் அதைப் பார்த்தன. ஒரு புலிக் குட்டி தன் தாயிடம் கேட்டது. “நாம் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றோம். யானைகள் உறிஞ்சிக் குடிக்கின்றன. நக்கிக் குடிப்பது நல்லதா? உறிஞ்சிக் குடிப்பது நல்லதா?”
தாய் சொன்னது. “நம் உடல் அமைப்பு வேறு. யானைகளின் உடல் அமைப்பு வேறு. உடல் அமைப்புக்கு ஏற்றது போல் வாழ்க்கைமுறை இருக்கும். அவரவர் வாழ்க்கைமுறை அவரவர்க்கு நல்லது.”

ஓவியம் : ம.பிரனிதா
நடக்காத நிகழ்வு
இரண்டு நண்பர்கள் ஒரு புது விளையாட்டை விளையாட நினைத்தார்கள். முதலில் ஒருவர் ஒரு நடக்காத நிகழ்வைச் சொல்ல வேண்டும். அடுத்தவர் அதேபோல் இன்னொரு நடக்காத நிகழ்வைச் சொல்ல வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு.
முதல் நண்பர் சொன்னார். “செடியிலிருந்து ஒரு பூ விழுந்தது. அந்த பூ விழுந்த இடத்தில் பெரிய குழி விழுந்தது”.
அடுத்த நண்பர் சொன்னார். “ஒரு பறவை ஒரு மரத்தின் மேல் உட்கார்ந்தது. அந்தப் பறவையின் எடை தாளாமல் அதன் கிளை முறிந்தது”.

ஓவியம் : ஜ.ரா. தருண்
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply