உலகம் முழுதும் நதிகளை ஒட்டியே நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்றன. நதிக்கரை நாகரிகங்கள் பலவும் வெள்ளம், நீண்ட கால வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுக் கைவிடப்பட்டவையே. கிமு 2500 முதல் 1900 வரையிலான காலகட்டங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தையே ஒரு பெரும் வறட்சிதான் கிழக்கே வைகைச் சமவெளிக்கு அனுப்பி வைத்தது என்கிற கருதுகோள்கூட ஆய்வாளர்கள் மத்தியில் உண்டு. தமிழ்நாட்டில் பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி என பல்வேறு நதிக்கரைகளில் மனித வாழ்விற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்தில் வைகை நதி நாகரிகத்திற்கான பதிவுகள் உண்டு. பண்டைய வைகை நதியை ஒட்டிய பகுதிகளில் ரோமானிய நாணயங்கள், அணிகலன்கள், செம்புக்கலன்கள், வண்ணக்கற்கள், பானையோடுகள் போன்றவை எழுத்துக்களோடும், இன்றியும் கிடைத்திருக்கின்றன. சமீபத்திய கீழடி அகழாய்வு முடிவுகள் நெல்மணிகள் மற்றும் இரும்புத் துண்டுகளின் காலத்தை வைத்து கீழடியின் வரலாற்றுக் காலத்தை முடிவுசெய்திருக்கின்றன. இதற்கென உபயோகப்பட்டது ரேடியோ கரிம அளவீட்டு முறை.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘தற்கால அறிவியல் (current science) எனும் ஆய்விதழில் பானைகள், செங்கற்கள் மற்றும் செராமிக் பொருட்களின் வயதை அளவிட உதவும் ‘தன்னொளிர்வுக் காலக்கணக்கிட்டு முறை (luminescence dating technique)’ மூலம் தற்போது கீழடி மண்ணடுக்குகளின் வயது தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மண்ணில் உள்ள கனிமப் பொருட்களில் பிரதானமானது குவார்ட்ஸ். சூரியக்கதிர்களில் இருந்து ஆற்றலை உறிஞ்சும் இப்படிகத்தில், உறிஞ்சப்பட்ட ஆற்றல், தொடர்ந்து இடையுறும் சூரிய ஒளியால் மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தகு ஒளி உறிஞ்சும் குவார்ட்ஸ் எந்த ஒரு ஒளிமூலத்திலிருந்தும் தனியே மறைத்து வைக்கப்படும் என்றால் அது உறிஞ்சிய ஆற்றலை இழக்காமல் சேமித்து வைத்துக்கொண்டிருக்கும். இப்படி சூரிய ஒளியிலிருந்து மறைந்திருக்கும் மண்ணடுக்குகளில் உள்ள குவார்ட்ஸ் படிகங்களை எடுத்து, இடையுறும் ஒளியற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் வைத்து, குறிப்பிடப்பட்ட ஒளிக்கற்றையால் தூண்டி, அவை வெளிவிடும் ஒளிக்கதிர்களை ஆய்வதன் மூலம், அவை மணலுக்கு அடியில் எவ்வளவு காலம் புதைந்திருக்கின்றன, அவை சூரிய ஒளியைக் கண்டு எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கின்றன என்பது போன்ற தகவல்களைப் பெற்று அவ்வடுக்கின் வயதை அளவிட இயலும்.
இந்த ஆய்விற்கான மாதிரிகள் கீழடியின் தென்கிழக்கில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள பள்ளிச்சந்தை திடலிருந்து எடுக்கப்பட்டவை. கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின்போது தோண்டப்பட்ட குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஒன்று (KDI-1) மற்றும் இரண்டு (KDI-2). தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து மண்ணின் வெவ்வேறு அடுக்குகளைக் கண்கூடாகக் காண முடிகிறது (படம் 1). நான்கு வெவ்வேறு ஆழங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றின் சிலவற்றில் பானை ஓடுகளும் அவற்றிற்கடியில் கட்டிட அமைப்புகளும் இருந்தன. ஆய்விற்கான மாதிரிகள் அனைத்தும், ஒரு துளையுள்ள குழாய் போன்ற அமைப்பின் மூலம் சூரிய ஒளிபடாதிருக்கும்வண்ணம் தகுந்த உத்திகளைப் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டன. உதாரணமாக, ஒரு உறிஞ்சு குழாயை மென்மையான வெண்ணைக்குள் செலுத்தும் பொழுது வெண்ணை எப்படி குழாயை அடைத்துக் கொள்ளுமோ அதைப்போல, குழாய்ப்புட்டு செய்கையில் கலனில் புட்டு எப்படி ஒளிந்திருக்குமோ அதைப்போல.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தில் (Physical Research Laboratory) தூண்டப்பட்ட தன்னொளிர்வு (optically stimulated luminescence) முறையின் மூலம் ஆராயப்பட்டன. ஆய்வு முடிவுகள் திரு சத்தியசீலனின் பொறுப்பில் வெளிவந்திருக்கின்றன; ஆய்விற்கு கீழடி களஆய்வில் பொறுப்பேற்ற தமிழ்நாடு அகழாய்வுத்துறையைச் அதிகாரிகளும் பங்களித்திருக்கின்றனர். இந்த ஆய்வில் பரந்த அலைநீளமுள்ள சூரிய அலைக்கற்றைக்குப்பதில், குறிப்பிட்ட குறுகிய அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றையால் குவார்ட்ஸ் படிகங்கள் தன்னொளிர்விற்குத் தூண்டப்பட்டன. இதற்கென குழாயில் உள்ள மண்ணெடுக்குகள் ஆய்வகத்தில் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. குழாய்ப்புட்டு போல வெளிப்பட்ட இந்த மண்ணெடுக்கின் மையத்திலுள்ள மாதிரிகள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மண்ணில் உள்ள கரிம சேர்மங்கள், குவார்ட்ஸ் தவிர்த்த பிற கனிமப்பொருட்கள் அனைத்தும் அமிலப் பகுப்பு முறையால் களையப்பட்டன.
ஆய்வின் முடிவில், அடுக்கு ஒன்றில் (KDI-1), 80 சென்டிமீட்டர் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ள மாதிரிகள் முறையே 670+-40 மற்றும் 1170+-60 வருடங்கள் வயதுள்ளவை. இரண்டாவது அடுக்கில் (KDI-2), 2.9 மீட்டர் மற்றும் 3.8 மீட்டர் ஆழங்களில் கிடைத்துள்ளன மாதிரிகள் முறையே 940+-70 மற்றும் 1140+-70 வருடங்கள் வயதுள்ளவை. இந்த முடிவுகள் கீழடி நாகரிகம் கிட்டத்தட்ட 1170 வருடங்களுக்கு முன்பு இயற்கைப் பேரிடர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் என்ற யூகங்களுக்கு வழிவகைக்கிறது.
இரண்டு ஆய்வுக்குழிகளிலும் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள களிமண் படிமங்கள் மற்றும் பானையோடுகள் நீரால் இடம் மாற்றப்பட்ட படிமங்களை ஒத்ததாய் இருக்கின்றன. போலோசியன் பேரழிவின் (Holocene extinction) ஆரம்பக்காலங்களில் காவிரியில் வெள்ளம் வந்ததற்கான ஆய்வுகள் கிடைக்கின்றன. கீழடியில் கிடைத்துள்ள ரேடியோ கார்பன் அளவீடுகள் வைகை நதியில் 2600 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான காலநிர்ணயத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான தடயங்களாக, வீட்டு விலங்குகளான பசு, எருது, ஆடுகள், வனவிலங்குகளான கரடி, மயில், நீலான் (Nilgai) மற்றும் புல்வாய் (Blackbuck) உள்ளிட்ட மானினங்களின் எலும்புகள் தமிழ்நாடு அகழாய்வுத் துறையால் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கூடவே கீழடியில் ஆறு வெவ்வேறு கட்டங்களிலான குடியேற்ற இடங்களின் காலம் பொ.மு. 5511 முதல் 5147 வரை இருக்கலாமென ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வைகை நதி காலம் தோறும் தன் பாதையை மாற்றியிருக்கிறது. எனவே தற்போதைய ஆய்வு முடிவுகள், கீழடி மண்ணடுக்குகள் சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறது.

Figure 1 மாதிரிகள் எடுக்கப்பட்ட ஆய்வுக்குழிகள் KDI-1 மற்றும் KDI-2

Figure 2 தூண்டப்பட்ட தன்னொளிர்வால் கணக்கிடப்பட்ட அடுக்குகளின் வயது
ஆய்வுக்கட்டுரை :
Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India, https://www.currentscience.ac.in/Volumes/129/08/0712.pdf
Art : Artisera
விஜயகுமார். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார்








Leave a Reply