முன்னொரு காலத்தில் அடர்ந்த காடு ஒன்றில் வயதான கிழவி ஒருத்தி வசித்து
வந்தாள். அந்தக் கிழவிக்கு அழகான மகள் இருந்தாள். அவளின் பெயர் எழிலி.
பெயருக்கு ஏற்றாற்போலவே அவள் சிறந்த அழகி. எழிலியின் தலை முடி
பொன்னிறமாய் இருந்தது. இரவு நேரத்தில் அவளது கூந்தல் ஒளி வீசுமாம். எழிலி
தனது தலை முடியைப் பின்னுவதற்கே இரண்டு மணி நேரம் ஆகுமாம்.
ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட வந்த அந்த நாட்டு மன்னர் எழிலியின்
வீட்டருகே வர நேர்ந்தது. மன்னர் எழிலியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
காட்டில் இத்தகைய அழகுடைய பெண்ணைக் கண்டு யார்தான் ஆச்சரியம் அடைய
மாட்டார்கள்? மன்னர் எழிலியின் தாயாரைப் பார்த்து எழிலியைத் தனது மகன்
இளவரசனுக்குத் திருமணம் செய்யச் சம்மதமா என்று கேட்டார். எழிலியின்
தாயாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து சம்மதம் தெரிவித்தார். மன்னரும்
இதனால் மகிழ்ந்து, இரண்டு வாரம் கழித்து எழிலியை அரண்மனைக்கு அனுப்பி
வைக்கும் படிக் கூறி விட்டு நாடு திரும்பினார்.
கிழவியும் தன் மகளை அரண்மனைக்கு அனுப்பும் வேலைகளை ஆரம்பித்தாள். நிறைய
நகைகள், உடைகளை எழிலிக்குத் தந்தாள். தன் மகள் பயணம் செய்ய ஒரு
குதிரையைத் தயார் செய்தாள். அந்தக் குதிரையின் பெயர் துமி.
அக்குதிரைக்குப் பேசும் சக்தியும் மனிதர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்
சக்தியும் உண்டு. எழிலிக்குத் துணையாக ஒரு வேலைக்காரியையும் உடன் அனுப்ப
முடிவு செயதாள் அவளது தாய். எழிலி கிளம்பும் நாளும் வந்தது. தனது தாயிடம்
விடை பெற்று வேலைக்காரியுடன் குதிரை துமியின் மீது ஏறிப் புறப்பட்டாள்.
அவர்கள் நான்கு நாட்களுக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. முதல்
நாள் முடிவில் எழிலிக்குச் சோர்வாய் இருந்தது. அவள் வேலைக்காரியிடம்
தண்ணீர் எடுத்து வரும்படிச் சொன்னாள். ஆனால் அந்த வேலைக்காரி பொறாமை
பிடித்தவள். தண்ணீர் கொண்டு வர மறுத்துவிட்டாள். எனவே எழிலி தானாகவே
அருகிலிருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் குடித்தாள். குதிரை இதைக்
கவனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒன்றும் பேசவில்லை.
அடுத்த நாளும் இதேபோல் எழிலி தண்ணீர் கொண்டுவரும்படிக் கேட்டபோது
வேலைக்காரி மறுபடியும் மறுத்துவிட்டாள். இம்முறையும் எழிலியே ஓடையில்
தண்ணீர் அள்ளிக் குடித்தாள். குதிரை துமி இதைக்கவனித்துக் கொண்டே வந்தது.
மூன்றாவது நாள் வேலைக்காரி எழிலியைக் குதிரையிலிருந்து கீழே இறங்கச்
சொன்னாள். எழிலியின் விலை உயர்ந்த உடைகளை வாங்கி வேலைக்காரி அணிந்து
கொண்டாள். எழிலியின் நகைகளையும் பறித்து அணிந்து கொண்டாள். தனது உடைகளை
எழிலிக்குக் கொடுத்தாள். எழிலியின் தங்க நிறக் கூந்தலையும் வெட்டித்
தரையில் வீசினாள். எழிலியை நடந்து வரும்படிச் சொல்லிவிட்டு வேலைக்காரி
குதிரையில் அமர்ந்து கொண்டாள்.
நான்காவது நாளின் முடிவில் அரண்மனையை அடைந்தனர். மன்னரின் மகனான இளவரசன்
அரண்மனை வாசல் வந்து வரவேற்றான். குதிரை மீது அமர்ந்திருந்த
வேலைக்காரிதான் தனது தந்தை தனக்கு மணமுடிக்க நிச்சயித்த பெண் என்று எண்ணி
அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். பாவம் எழிலி. அவளை வேலைக்காரி
என்று நினைத்த இளவரசன், எழிலியை அரண்மனையிலிருந்த வாத்துக் கூட்டத்தை
மேய்க்கும் வேலையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். இளவரசனின் திருமணத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
எழிலியும் வாத்துக்களைக் கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்ய
சம்மதித்தாள். ஆனால் அவள்தான் இளவரசனைத் திருமணம் செய்ய வந்தவள் என்ற
உண்மையை யாருக்கும் சொல்லவில்லை. வாத்து மேய்ப்பதற்கு அவளுக்கு உதவியாய்
விஜயன் என்னும் சிறுவனும் இருந்தான். அவன் எழிலிக்குப் பல உதவிகள்
செய்தான்.
வேலைக்காரி அரண்மனையில் விலை உயர்ந்த நகைகளையும் உடைகளையும் அணிந்து
கொண்டு மற்ற பெண்களையெல்லாம் அதிகாரம் செய்தாள். அவளுக்குக் குதிரை
துமியின் ஞாபகம் வந்தது. பேசும் சக்தி பெற்ற அக்குதிரை தன்னைப் பற்றிய
உண்மையை இளவரசனிடம் சொல்லிவிடும் என்று பயந்தாள். எனவே, குதிரை வரும்
வழியில் தன்னைக் கீழே தள்ளி விட்டது என்றும், பயணத்தின் போது மிகவும்
தொல்லை கொடுத்தது என்றும் இளவரசனிடம் பொய் கூறினாள். அதை நம்பிய
இளவரசனும் குதிரையைக் கொல்ல ஆணையிட்டான். குதிரையும் கொல்லப்பட்டது.
குதிரை கொல்லப்பட்ட செய்தி கேட்டு எழிலி மிகவும் வருத்தம் அடைந்தாள்.
குதிரையைக் கொன்ற அரண்மனை வீரனைப் பார்க்கச் சென்றாள். குதிரையின் தலையை
மட்டும் அரண்மனை வாசல் கதவில் மாட்டச் சொன்னாள். முதலில் யோசித்தான்
வீரன். பின்னர் எழிலி தன்னிடம் எஞ்சியிருந்த ஒரே தங்கவளையலை
வீரனுக்குக் கொடுத்தவுடன் வீரன் ஒத்துக் கொண்டான். குதிரையின் தலையை
அரண்மனை வாசற்கதவில் மாட்டி வைத்தான்.
மறுநாள் எழிலியும் விஜயனும் வாத்து மேய்க்கக் கிளம்பினர். அரண்மனை
வாசலைக் கடந்து செல்லும் போது, கதவில் மாட்டியிருந்த குதிரையின் தலை
எழிலியைப் பார்த்தது. அவளிடம் “எழிலி, உன் தாய் உனது நிலையைப்
பார்த்தால் மிகவும் வருத்தம் அடைவாள்” என்று கூறியது. குதிரையின் தலை
பேசுவதைப் பார்த்த விஜயன் ஆச்சரியம் அடைந்தான்.
அடுத்த நாளும் வாத்துக்களை மேய்க்கச் செல்கையில் குதிரை துமியின் தலை
எழிலியிடம் பேசியது. “எழிலி, உன் தாயார் பார்த்தால் மிகவும்
வருத்தப்படுவாள்” என்றது. எழிலி பதில் எதுவும் கூறவில்லை. விஜயன் மேலும்
குழப்பம் அடைந்தான். இது பற்றி எழிலியிடம் கேட்டபோது அவள் எதுவும் சொல்ல
மறுத்துவிட்டாள்.
விஜயன் இதுபற்றி இளவரசனிடம் புகார் செய்துவிட்டான். இளவரசனும் மறுநாள்
மறைந்திருந்து பார்த்தான். குதிரை எழிலியிடம் “உன் தாயார் பார்த்தால்
மிகவும் வருத்தப்படுவாள்” என்றது. உடனே இளவரசன் எழிலியின் முன் வந்து
உண்மையைச் சொல்லும்படிக் கேட்டான். ஆனால் எழிலியோ எதுவும் சொல்ல மறுத்து
விட்டாள்.
இளவரசன் எழிலியை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெரிய
சுவர் இருந்தது. “நீ உண்மையை என்னிடம் சொல்லாவிட்டால் அதனால்
ஒன்றுமில்லை. இந்தச் சுவரிடமாவது சொல்லிவிடு. இந்தச் சுவருக்குக் கேட்கும் தன்மை இருக்கிறது” என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான். எழிலி நெடுநேரம் யோசித்தாள். பின்னர்,
காட்டிலிருந்து அவள் புறப்பட்டு அரண்மனையை அடையும் வரை நடந்த
நிகழ்ச்சிகளை அந்தச் சுவரிடம் சொல்லிக்கொண்டே வந்தாள்.
எழிலி தனது கதையைச் சொல்லி முடித்தாள். சுவரின் மறுபக்கத்தில் மறைந்து
கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இளவரசன் வேலைக்காரி மீது கோபம்
கொண்டான். வேலைக்காரியை அரண்மனையிலிருந்து காட்டுக்கே மீண்டும்
துரத்தினான். எழிலிக்கும் இளவரசனுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
எழிலியின் கூந்தலும் மீண்டும் நீளமாக வளர்ந்து தங்க நிறத்தில்
ஒளிவீசியது.
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply