ஒரு முறை
ஒரு முறை, வாழ்க்கை எதற்காக என்று எனக்குத் தெரிந்துவிட்டது.
பாஸ்டனில், திடீரென நான் புரிந்துகொண்டேன்
அங்கே சார்லஸ் நதிக்கரை நெடுக நடந்தேன்,
விளக்குகள் தங்களையே நகலெடுத்துக் கொள்வதைக் கவனித்தேன்.
அனைத்தும் நியான் விளக்குகள், மின்னும் இதயங்கள்,
இசை நாடகப் பாடகர்களின் வாய்களைப் போல திறந்திருக்கின்றன;
நட்சத்திரங்களை எண்ணினேன், என் குட்டிப் போராளிகளே,
வடுக்கள் கொண்ட என் டெய்சி மலர்களே, நான் காதலில் இருப்பது எனக்குத் தெரியும்
இரவின் பாசி படர்ந்த பக்கத்தின் மேல் நடந்தேன், அழுதேன்
என் இதயம் கிழக்கே போகும் கார்களிடம் சென்றது, கதறியது
என் இதயம் மேற்கே போகும் கார்களிடம் சென்றது, என் உண்மையை
ஒரு சிறிய கூனல் விழுந்த பாலத்தின் குறுக்கே எடுத்துச் சென்றது
வீட்டுக்கு விரைந்து சென்றது என் உண்மை அதன் அழகு,
இந்த மாறிலிகளைக் காலைக்குள் பதுக்கி வைத்தது
அவை போய்விட்டதைக் காண மட்டுமே.
மஞ்சள்
அவர்கள் சூரியனை உதிக்கச் செய்கையில்,
மீண்டும் அதன் கீழ் நான் குழந்தைகளை நடுவேன்,
ஒரு தீக்குச்சியால் என் ஆன்மாவில் ஒளியேற்றுவேன்
அதைப் பாட வைப்பேன், நான்
என் அம்மாவை அழைத்துச் சென்று அவளைச் சோப்பிட்டுக் குளிப்பாட்டுவேன்,
என் எலும்புகளுக்கு மெருகூட்டுவேன்,
என் சிக்குப் பிடித்த முடியைச் சீர் செய்வேன், நான்
என் அண்டை வீட்டாரின் அனைத்துக் கடன்களையும் அடைப்பேன்,
மஞ்சள் என்ற கவிதையை எழுதி
அதை அருந்த என் உதடுகளைத் தாழ்த்துவேன்,
நானே எனக்கு ஒரு கரண்டி வெப்பத்தை ஊட்டுவேன்,
எல்லோரும் வீட்டில் இருப்பார்கள் தங்கள் இறக்கைகளைக் கொண்டு
விளையாடுவார்கள், பூமிக் கோளே
அந்த அனைத்துப் புன்சிரிப்புகளாலும் நடுங்கும்,
அங்கே எங்குமே விஷம் இருக்காது, ஆகாயத்தில்
கொள்ளை நோய் இருக்காது, எல்லா மக்களுக்கும்
ஒரு தாய் கஷாயம் இருக்கும். நாம், நம்மில் ஒருவர் கூட
ஒருபோதும் இறக்க மாட்டோம். நாம் தொடர்ந்து இருப்போம்
இருக்க மாட்டோமா நாம்?
பூட்டிய கதவுகள்
இந்த ஊரில் வசிக்கும் தேவதைகளுக்கு,
அவர்களின் வடிவம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தாலும்,
நாம் ஒவ்வொரு இரவும் சில ஆறிய உருளைக்கிழங்குகளையும்
ஒரு கிண்ணம் பாலையும் ஜன்னலோரத்தில் விட்டுச் செல்கிறோம்.
வழக்கமாய் அவர்கள் சொர்க்கத்தில் வசிக்கிறார்கள்,
எனவே, அங்கு கண்ணீர் வர அனுமதி இல்லை.
ஒரு வேக வைத்த வள்ளிக்கிழங்கைப்போல
அவர்கள் நிலவைச் சுற்றிலும் சுடுகின்றனர்
பால்வீதி, அவர்களுடைய
பல குஞ்சுகள் கொண்ட கோழி
இரவு நேரத்தில் பசுக்கள் படுத்துக்கொள்ளும்
ஆனால் நிலா, அந்தப் பிரமாண்டமான காளை
எழுந்து நிற்கிறது.
இருப்பினும், அங்கே ஒரு பூட்டிய அறை இருக்கிறது,
திறக்க முடியாத ஒரு இரும்புக் கதவுடன்
அதில் உங்கள் எல்லாக் கெட்ட கனாக்களும் இருக்கின்றன.
அது நரகம்.
கதவை உள்ளே இருந்து பூட்டுகிறது பிசாசு என்று
சிலர் கூறுகின்றனர்.
தேவதைகள் அதை வெளியில் இருந்து பூட்டுகின்றன என்று சிலர் கூறுகிறார்கள்.
உள்ளே இருப்பவர்களுக்குத் தண்ணீர் இல்லை,
தொடுவதற்கு ஒருபோதும் அனுமதி இல்லை.
அவர்கள் கப்பிச் சாலை போல உடைகிறார்கள்.
அவர்கள் ஊமைகள்.
உதவி கேட்டு அவர்கள் அழுவதில்லை
ஆனால் உள்ளே, அவர்களின் இதயங்கள்
புழுக்களால் மூடப்பட்டிருக்கும் இடத்தில் மட்டும் அழுகின்றனர்.
துருப்பிடித்த சாவியைக் கொண்டு
அந்தக் கதவைத் திறக்க,
வீழ்ந்த ஒவ்வொருவரையும் என் கைகளில் ஏந்த
நான் விரும்புகிறேன்
ஆனால் என்னால் முடியாது, என்னால் முடியாது.
இங்கே பூமியில் நான் உட்கார்ந்திருக்க மட்டுமே முடியும்
எனது இடத்தில் எனது மேஜையில்.
இறந்தவர்கள் அறிந்த உண்மை
மார்ச் 1902 இல் பிறந்து, மார்ச் 1959 இல் இறந்த என் அம்மாவுக்கு,
பிப்ரவரி 1900 இல் பிறந்து, ஜூன் 1959 இல் இறந்த என் தந்தைக்கு,
போகிறேன் என்று சொல்லிவிட்டு தேவாலயத்தை விட்டு நடந்தேன்,
கல்லறைக்குச் செல்லும் விறைப்பான ஊர்வலத்தை மறுத்து,
இறந்தவரைச் சவப்பெட்டியில் தனியாக சவாரி செய்ய விடுகிறோம்.
இது ஜூன் மாதம். நான் தைரியமாக இருந்து களைத்துப் போனேன்.
நிலக்கோடிக்கு வாகனத்தை ஓட்டினோம். சூரியன் வானத்திலிருந்து
ஒளித்தாரையாகப் பெருகும் இடத்தில் நானே என்னைப் பயிரிட்டேன்
அங்கே கடல் ஒரு இரும்புக் கதவைப் போல உள்ளே ஊஞ்சலாடுகிறது
நாங்கள் தொட்டுக்கொள்கிறோம். பிறிதொரு நாட்டில் மக்கள் இறக்கின்றனர்.
என் அன்பே, காற்று கற்களைப் போல உள்ளே விழுகிறது
வெள்ளை மனம் கொண்ட நீரிலிருந்து; தொடுகையில்
நாம் முற்றிலுமாகத் தொடுகைக்குள் நுழைகிறோம். எவரும் தனியாக இல்லை
ஆண்கள் இதற்காகக் கொல்கின்றனர், எவ்வளவு வேண்டுமானாலும்.
இறந்தவர்களைப் பற்றி என்ன? அவர்கள் காலணிகள் இல்லாமல்
தங்களுடைய கற்படகுகளில் கிடக்கிறார்கள். கடல் என்பதைக் காட்டிலும்
அதிகமும் கல் போலவே இருக்கிறார்கள்; கடல் நின்றுபோனாலும்
அவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட மறுக்கிறார்கள்
அவர்களுடைய தொண்டை, கண், முட்டி எலும்பு ஆகியவையும்.
சிகரெட்டுகள், விஸ்கி, காடு, காட்டுப் பெண்கள்
(ஒரு பாடலில் இருந்து)
ஒருவேளை நான் மண்டியிட்டபடியே பிறந்திருக்கலாம்,
நீண்ட குளிர்காலத்தில் இருமிக்கொண்டே பிறந்திருக்கலாம்,
கருணையின் முத்தத்தை எதிர்பார்த்துப் பிறந்தேன்,
விரைந்து செயல்படும் ஆசையுடன் பிறந்தேன்
எனினும், விஷயங்கள் வளர்ந்தபோது
நான் ஆரம்பத்திலேயே கற்றிருந்தேன் பாதுகாப்பு அரண் பற்றி
அல்லது வெளியே எடுக்கையில், எனிமாவின் புகை பற்றி
இரண்டு அல்லது மூன்று வயதிருக்கையில் கற்றுக்கொண்டேன் முழந்தாளிடக் கூடாது,
எதிர்பார்க்கக் கூடாது, எனது நெருப்பைப் பூமிக்கடியில் புதைக்கக் கூடாது
அங்கே பொம்மைகள், பூரணமானவை, பயங்கரமானவை தவிர எதையும்
கிசுகிசுக்க முடியும், சாவதற்காக விழுந்து கிடக்கலாம்.
இப்போது நான் ஏராளமான சொற்களை எழுதியிருக்கிறேன்,
காதலை நிறைய வெளிப்படுத்தியிருக்கிறேன், நிறையப் பேரிடம்,
மொத்தத்தில் நான் எப்போதும்போல இருந்து வருகிறேன்—
எல்லாமும் அளவு மீறியிருக்கும் பெண் நான், வைராக்கியமானவள், பேராசைக்காரி,
முயற்சி பயனற்றது என்பதைப் பார்க்கிறேன்.
நான் கண்ணாடி பார்ப்பதில்லையா
இந்த நாட்களில்,
ஒரு குடிகார எலி தன் கண்களைத் தவிர்ப்பதைப் பார்க்கிறேனா?
பசியை நான் மிகக் கடுமையாக உணரவில்லையா?
அதன் முகத்தில் விழிப்பதைவிட
நான் இறப்பதே நல்லதா?
மீண்டும் ஒரு முறை நான் முழந்தாளிடுகிறேன்,
கடைசி நேரத்திலாவது
கருணை உண்டாகட்டும் என்று.
அறியாமை கொண்ட கவி
ஒருவேளை பூமி மிதந்துகொண்டிருக்கலாம்
எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை நட்சத்திரங்கள் காகிதத்தில் கத்தரிக்கப்பட்டவையாக இருக்கலாம்
ஒருவேளை நட்சத்திரங்கள் சிறிய காகித பொம்மைகளாக இருக்கலாம்
ஏதேனும் ராட்சதக் கத்தரிக்கோலால் உருவாக்கப்பட்டிருக்கலாம்,
எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை நிலா, உறைந்த கண்ணீர்த்துளியாக இருக்கலாம்,
எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை கடவுள், செவியில்லாதவர் கேட்ட ஆழமான குரலாக இருக்கலாம்,
எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை நான் யாருமே இல்லை.
எனக்கோர் உடல் இருக்கிறது, உண்மை
அதனிடமிருந்து நான் தப்பிக்க முடியாது.
என் தலையிலிருந்து நான் பறந்து வெளியேற விரும்புகிறேன்
ஆனால் அது நடக்க முடியாதது.
அது விதியின் பலகையில் எழுதப்பட்டிருக்கிறது
இங்கே இந்த மனித வடிவில் நான் சிக்கிவிட்டேன்.
அப்படியிருக்கையில்
என் பிரச்சினைக்குக் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
என் உட்புறம் ஒரு மிருகம் இருக்கிறது
ஒரு மிகப்பெரிய நண்டு,
என் இதயத்தை இறுகப் பற்றியிருக்கிறது.
பாஸ்டன் மருத்துவர்கள்
கைவிரித்துவிட்டார்கள்.
அவர்கள் அறுவைக்கத்திகள்
ஊசிகள், நச்சு வாயுக்கள், இன்னும் பல உபகரணங்கள்
அனைத்தையும் முயற்சி செய்தனர்
நண்டு அப்படியே இருக்கிறது.
அது பெரும் எடை கொண்டது.
நான் அதை மறக்க முயற்சி செய்கிறேன், எனது வேலைகளைத் தொடர்வதற்கு
பராக்கோலி சமைப்பது, மூடி வைத்த புத்தகங்களைத் திறந்து வாசிப்பது,
பல் துலக்குதல், காலணிகளை முறையாக அணிவது.
நான் பிரார்த்தனையை முயற்சித்தேன்
ஆனால் நான் பிரார்த்தனை செய்கையில் நண்டு இன்னும் கடுமையாகப் பிடிக்கிறது
வலி அதிகரித்துப் பரவுகிறது.
ஒருமுறை ஒரு கனவு கண்டேன்,
ஒருவேளை அது ஒரு கனவாக இருக்கலாம்,
நண்டு, கடவுளைப் பற்றிய எனது அறியாமை என்று,
ஆனால் கனவுகளை நம்ப நான் யார்?
நட்சத்திரங்கள் நிறைந்த இரவு
மதம் – இந்தச் சொல்லை நான் கூறலாமா – கொடூரமான தேவைகளில் இருந்து அது என்னைப் பிடித்து வைப்பதில்லை. பிறகு நான் இரவினில் வெளியேறி நட்சத்திரங்களை வரைவேன்.
– வின்சென்ட் வான் கோ தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில்
நகரம் இல்லை
ஒரு கறுப்பு முள்முடி கொண்ட மரம் தவிர; அது
சூடான வானுக்குள் மூழ்கிய பெண்ணைப் போல நழுவுகிறது.
நகரம் அமைதியாக இருக்கிறது. இரவு பதினொரு நட்சத்திரங்களுடன் கொதிக்கிறது.
ஓ நட்சத்திரங்களின் இரவே! இப்படித்தான்
நான் இறக்க விரும்புகிறேன்.
அது நகர்கிறது. அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்.
நிலவுகூட அதன் ஆரஞ்சு விளிம்புகளில் வீங்குகிறது
ஒரு கடவுளைப் போல குழந்தைகளைத் தனது கண்ணில் இருந்து தள்ளுவதற்காக.
முதிய காணப்படாத பாம்பு நட்சத்திரங்களை விழுங்குகிறது.
ஓ நட்சத்திரங்களின் இரவே! இப்படித்தான்
நான் இறக்க விரும்புகிறேன்:
அந்த விரைந்து செல்லும் இரவின் மிருகத்துக்குள்,
அந்தப் பெரிய டிராகனால் உறிஞ்சப்பட்டது,
என் வாழ்க்கையிலிருந்து துண்டிக்க, கொடி இல்லாமல்
வயிறு இல்லாமல்,
அழுகை இல்லாமல்.
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.








Leave a Reply