படிமங்கள் எனும் சொல் பெரும்பாலும் கவிதைகளுடனேயே சேர்த்து புரிந்துகொள்ளப்படுகின்றன. புகைப்படத்தைப் போன்று அனுபவங்கள் உறைந்து நிற்கும் கணமாக அர்த்தம் கொள்கிறோம். கதைகளில் ஊடுபாவும் கிளைக்கதைகளும், கதாபாத்திரத்தின் குணத்திற்கான பிரத்யேக விளக்கங்களும் படிமங்களாகின்றன. அவை தனித்த பண்பாட்டுக் கூறுகளைப் பேசும் விஷயங்களாக அமைகின்றன. சர்ரியல் கதைகளில் இதற்கு நேர்மாறாக படிமங்கள் வாசிப்பில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. சிறந்த உதாரணம் காஃப்காவின் உருமாற்றம். நாவலின் முதல் வரியிலேயே அதன் தாக்கம் தென்படத் துவங்குகிறது. மனிதனாக உறங்கியவன் பூச்சியாக கண்விழிக்கிறான். மனித உணர்வும் பூச்சி உடலுமாக கதை முழுக்க நகர்கிறது. நாயகனை இரண்டு விதமாக ஊகிக்கும் நிலைக்கு வாசகர்கள் நகர்கிறார்கள். சிந்தனையில் பூச்சியாக வாசிக்கப்படும் இடங்களில் மனித குணாம்சங்களையும், மனிதனாகச் சிந்திக்கையில் பூச்சியின் எளிமையான உடலும் ஊடுபாவுகிறது. புதிய அர்த்தங்களை உருவாக்குகிறது. சுவாரஸ்யத்திற்காகக் கையாளப்பட்டத்தல்ல இந்தப் படிமம். யதார்த்த வாழ்க்கையின் வழியே பேசத்தயங்கும் விஷயங்கள் படிமங்களின் வழியே பேசுகையில் உண்மையின் அருகாமைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றன. கதைகளில் மட்டும் இவற்றைச் சுருக்கிவிட முடியாது. நேர் வாழ்க்கையில் கனவை நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள விழைவதும் இந்தப் படிமங்களுக்கு நிகராக அமைகிறது.
சிறுகதைகளின் தொகுதியாக்கத்தில் ஒரே மையத்தைச் சுற்றி தொகுக்கப்படும் நூல்கள் பல எழுத்தாளர்களின் கலவையாக இருப்பது இயல்பு. ஒரே எழுத்தாளர் ஒரே மையத்தில் அல்லது ஒரே தன்மையிலான கதைகளைத் தொகுத்திருப்பது வெகு சொற்பம். நினைவிலிருந்து மரியானா என்ரிக்ஸின் தொகுதி முழுக்க horror கதைகளால் ஆனது, மார்க்கரெட் யூர்ஸ்னார் எழுதிய “கீழை நாட்டுக் கதைகள்” கீழைத் தேசங்களின் தொன்மக் கதைகளின் நவீன வடிவைக் கொண்ட கதைகள். இந்த இரண்டு தொகுதிகளே நினைவில் எழுகின்றன. தமிழில் என்னால் எதையும் நினைவுகூர முடியவில்லை. ஐசக் பேசில் எமரால்ட்-இன் “பற்றி எரியும் நரம்புகள்” தொகுப்பு பத்துக் கதைகளால் ஆனது. பத்தில் ஒன்பது கதைகள் சர்ரியல் சிறுகதைகளாக அமைந்திருப்பது முதல் அனுபவமாக இருந்தது.
நவீன வாழ்க்கை படிமங்களுக்கு நிறைய வித்திடுகிறது. அதற்கு ஆதாரமாக அமைவது இருப்பின் மீதான அச்சம். அதிகாரத்தின் மீதான விமர்சனத்தை நேரடியாக முன்வைக்க இயலாத சமயத்தில் சர்ரியல் படைப்புகள் கைகொடுத்தன. மக்களின் மனதில் இருந்த அதிகாரத்தின் மீதான அச்சமும், கோபமும், ஆற்றாமையும் அதில் வெளிப்பட்டன. சமகால வாழ்க்கையில் அதிகாரம் குவிமையம் கொண்டிருக்கவில்லை. அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்களும், ஒவ்வொரு படிநிலையின் மனிதர்களிடமும் வேறு வேறு வகையான அதிகாரத்தின் வேர்கள் கிளைவிடுகின்றன. இரண்டு சிறுகதைகளை விரிவாகப் பார்ப்பதன் வழியே இத்தொகுப்பை அவதானிக்க முயற்சிக்கலாம்.
தொகுப்பின் முதல் சிறுகதை “ஓர் இரவின் மினிமலிச விளைவு”. பொருள்முதல்வாதத்திற்கு எதிராக இருக்கும் வாழ்வியல் சித்தாந்தம் மினிமலிசம். குறைவான பொருட்களுடனும், குறைவான தேவைகளுடனும் தகவமைத்துக் கொள்ளும் வாழ்வை முன்வைப்பவை. புதிது போலத் தென்பட்டாலும் புத்தர், காந்தி ஆகியோரின் போதனைகளுடன் அவை பொருந்தக்கூடும். சிறுகதையில் ஒரு வீடும் அதில் வாழும் தம்பதியரும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அந்த வீடு பொருட்களால் நிரம்பி வழிகிறது. கணவனும் மனைவியும் தேவைகளைத் தாண்டி வாங்கிச் சேர்த்த பொருட்கள் அவை. ஒவ்வொரு பொருளாக மாயமாகத் தொடங்குகிறது. ஒவ்வொரு பொருள் மாயமாகும்போதும் நாயகன் அச்சம் கொள்கிறான். அவன் வாங்கிய பொருட்கள் பாதிப்படைகின்றன. மனைவி வாங்கிய பொருட்கள் காணாமல்போவது அவனுக்குப் பாதிப்பைத் தருவதில்லை. ஒவ்வொன்றின் மறைவின் போதும் தன்னுடைய அடையாளத்தில் ஒன்று காணாமல் போவதாக உணர்கிறான். அவ்வப்போது அறைக்குள் தனக்கென வைத்திருக்கும் பெட்டியொன்றைத் திறந்து திறந்து பார்த்துக் கொள்கிறான். அதில் தன் பால்ய நினைவுகளைப் போற்றும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எதுவும் காணாமல்போவதில்லை. இணைகோடாகச் சில கிளைப் படிமங்களும் சிறுகதையில் கையாளப்பட்டிருக்கின்றன. இரண்டு மீன்கள் மீன் தொட்டிக்குள் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவையும் காணாமல்போதல். தற்கொலையின் சித்திரம். இந்த மூன்று படிமங்களும் இணைந்து கதையை முழுமையடைய வைக்கின்றன.
கதையின் மையம் வாழ்வை அர்த்தமாக்கும் பொருள் வாங்கும் மனோபாவமும், வாங்கிய பொருட்கள் சுய அடையாளமென மாறுவதுமாக அமைகிறது. “இரவானால்…” சிறுகதையிலும் நாயகன் வீட்டிலுள்ள பொருட்களை இரவானால் தரையுடன் பசையிட்டு ஒட்டுகிறான். ஒவ்வொரு இரவிலும் அந்த வீடு சாய்கிறது. அதனால் பொருட்கள் உடைகின்றன. பொருட்களின் மீதான பற்றை பசையிட்டுக் காக்க நினைக்கிறான். மனித வாழ்வின் அர்த்தம் என்ன எனும் அடிப்படைவாத கேள்வி, நுகர்வு மன அமைப்பிலிருந்து அணுகப்படுகிறது. மேலும் தற்கொலை குறித்தான படிம விவரணைகள் மொத்தத் தொகுப்பின் மையச் சரடைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. இருப்பின் மீதான அச்சம் தோராயமாக அனைத்துக் கதைகளிலும் காணமுடிகிறது. ஓர் உயிரின் மறைவில் எதன் மீது நம் கவனம் குவிக்கப்படுகிறது எனும் கேள்வி அனைத்துக் கதைகளிலும் சுழல்கிறது. சேகரித்த பொருட்களுக்கும் மறைந்த நபருக்கும் இடையே ஊசலாடும் கவனம் நவீனச் சிக்கல்களின் பிரதிபலிப்பாகின்றன. கப்பல் ‘1073’ எனும் சிறுகதையில் நிறைய படிமங்கள் கையாளப்படுகின்றன. கதை சொல்லும் நாயகன் தன் அடையாளத்தைச் சிதறுண்டு கிடைக்கும் சிந்தைனைகளை அவதானிப்பதன் வழியே அடைய முயல்கிறான். அவை அவனை இட்டு செல்லும் இடம் மரணத்திற்கானதாய் இருக்கிறது. இறந்த பின் சிதறல்களாய் இருக்கும் சில நினைவேக்கங்களை இணைப்பதன் வழியே வாழ்ந்ததன் தடத்தைத் தேட முயல்வதாய் அர்த்தப்படுத்தலாம். ஒற்றைப்படை வாழ்க்கையை, வாழ்க்கைக்கான ஒற்றைப்படத் தன்மையை நாம் இழந்து நெடு நாட்களாகிறது. பல்வேறு படி நிலைகளில் நமது அடையாளங்கள் பரவியிருக்கின்றன. அவற்றுள் ஒற்றைத் தன்மையைத் தேடும் மனம் மட்டும் மாறாமல் இருப்பது நவீன அபத்தம்!
ஒருமை – பன்மை சிக்கலை கோட்பாட்டளவில் விவாதிக்கும் வகையிலும் ஒரு சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. “ஒலியானவள்” எனும் சிறுகதையில் வாயை நாயகி இழந்துவிடுகிறாள். வாசிக்கும் நூல்களில் சொற்களுக்கும் அர்த்தங்களுக்குமான உறவைத் தேடுகிறாள். ஒற்றை அர்த்தங்கள் கொடுக்கும் சிக்கல்களும் வாயை இழக்கும் புனைவின் படிமமும் ஒன்றாகும் இடம் கோட்பாட்டு உரையாடலை ஊக்குவிக்கிறது.
நவீன வாழ்க்கையின் சிக்கல்களுக்கு யதார்த்தவாத வடிவங்களின் போதாமையை உணர்வதாலேயே படிமங்கள் ஐசக்கின் சிறுகதைகளுக்குக் கைகொடுக்கின்றன. நகர வாழ்க்கையும், சிதறுண்ட இருப்பும் அர்த்தங்களைத் தேட விழைகின்றன. ரசனையிலும் அவை பாதிப்பைச் செலுத்துகின்றனு. “மிகக் குறைந்த ஒளி” எனும் சிறுகதை புகைப்படத்திற்கும் ஓவியத்திற்குமான உறவைப் பேசுகிறது. கற்பனை அறுந்துபோகும் இடம் எதுவாக இருக்கக்கூடும் எனும் தேடல் சிறுகதை முழுக்க நீள்கிறது.
தொகுப்பின் போதாமைகள் மொழியளவில் இருக்கின்றன. படிமங்களே இவ்வகையான கதைகளுக்குப் பிரதானம். அவற்றிற்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் ஒரே வகையான சொற்கள் வாசகனின் கற்பனைக்கு இடையூறாக அமையக்கூடும். மேலும் ஒரே சிறுகதையில் பல படிமங்கள் பயன்படுத்தப்படும்போது நிதானமான கதைமொழியைக் கதைகள் கோருகின்றன. அவசரமாகத் தாவும்போது வாசகர்கள் அப்படிமங்களைக் கைவிடுவதற்கான, கவனமற்று கடந்து செல்வதற்கான வாய்ப்புகளே அமைகின்றன.
தொகுப்பில் சிறந்த கதையாக “மிசிறு” சிறுகதையைக் குறிப்பிடுவேன். மேற்கூறிய பிழைகள் மிகக் குறைந்த அளவில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இப்படிமங்கள் தனிமனிதச் சிக்கல்களுக்கானதாகச் சுருங்காமல் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்து விரிவடைந்திருப்பதும், நிதானமான கதைசொல்லலும் நிறைவை அளிக்கின்றன. மிசிறு என்பது ஒருவகை சிவப்பெறும்பு. அவை பசை போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு இலைகளை இணைத்துக் கூடாக்குகின்றன. சிறுகதையின் தொடக்கம் ஒரு பேய்க்கதையின் தொனியில் துவங்குகிறது. தொழிற்சாலையின் வளர்ச்சியால் பாதிக்கப்படுகிறது இயற்கை. அதன் சிறு பாதிப்பாக மனிதன் இருக்கிறான். கதையின் இரண்டாம் பகுதியில் மிசிறு நிலத்தடியில் பயணிக்கிறது. அங்கிருக்கும் கனிமங்கள் பேசுகின்றன. கனிமங்களின் இயற்கைக் குணங்களும், அவற்றை வைத்து மனிதனின் செயல்பாடுகளும் உரையாடலாகின்றன. மனிதனின் பேராசை இருப்பை அச்சத்திற்குள்ளாக்குகிறது. இக்கதை அதன் மற்றொரு சான்று.
இருத்தலியல் சிக்கல் நவீன வாழ்க்கையில், அதன் அபரிமிதமான நுகர்வுசார் வளர்ச்சியின் இடையில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பின் கதைகள் சான்றாகின்றன. கையாளப்படும் படிமங்கள் வாழ்வின் abstract வெளிப்பாடுகளாக அமைகின்றன. சிதறுண்ட அடையாளங்களிலிருந்து ஒற்றை அர்த்தத்தை அறிய விரும்பும் இருப்பு ஆட்படும் சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வாழ்வின் அர்த்தமின்மையும், அடையாளங்களின் மீதான வேட்கையும் ஒன்றை மேவி ஒன்று படிமங்களில் வெளிப்படுகின்றன.
சமகால எழுத்தாளர்களிடையே தனித்த கதையும், கதைமொழியும் கொண்ட தொகுப்பாக அமைந்திருக்கிறது. மேம்படும் மொழிவன்மை அவருக்கான தடத்தைத் தமிழ்ச் சிறுகதைச் சூழலில் உறுதி செய்யும்.








Leave a Reply